வெள்ளி, டிசம்பர் 23, 2005

மறுபடியும் காவிரி...

செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக் கொழுகிய சம்பாபதி அயல்
பொங்குநீர்ப் பரப்போடு பொருந்தித் தோன்ற

திருச்சி கொள்ளிடத்தில் தண்ணீர் இருந்து நான் பார்த்தேயில்லை. சங்ககால சோழர்கள் காலத்தில், காவிரி கரைபுரண்டு ஓடி நாட்டை அழித்துவிடுகிறது என்று தண்ணீருக்கு மாற்றுபாதையாக அமைக்கப்பெற்றதே கொள்ளிடம். காவிரி நீருக்கு 'கொள்ளும் இட' மாக அமைக்கப்பெற்ற செயற்கை நதி, திருச்சியில் பலகாலமாக வற்றிப்போய் ஒரு சிறிய வாய்க்காலாகவே ஓடிக்கொண்டிருந்தது. கடந்த 50-70 வருட காலத்தில், இப்படி கொள்ளிடம் கரைபுரண்டு ஓடியதைப் யாருமே பார்த்ததில்லையென என் நண்பரின் அன்னை நேற்றுக் கூறினார். திருவரங்கத்தில், இராஜகோபுரத்துக்கு சற்று தெற்கே ஓடும் திருமஞ்சன காவேரி, ரோட்டை தொட்டுக்கொண்டு ஓடுகிறதாம். இப்படி, காவிரி பேச்சு வந்த போது, என்றோ படித்த இந்த பாடல் ஞாபகம் வந்தது.

சூரிய வம்சத்தாரான சோழர் குலத்தில் தோன்றியவன் காந்தமன் என்ற அரசன். சோழ நாட்டில் ஜீவநதி எதுவுமில்லையே என்ற வருந்தினான். சஹ்யாத்ரி மலைமகளான காவிரியை சோழநாட்டுக்கு அழைத்து வருவதற்காக இறைவனிடம் வேண்டி வரம் பெற்றான். அப்படிப்பட்ட காவிரியை, அகத்திய முனிவர் காவிரிக்குமரி மீது பாசம் கொண்டு தன் கமண்டலுவில் அடைத்து வைத்தார். விநாயகர் காக்கை உருவத்தில் அந்த நதியை விடுதலை செய்ய, அவள் விரிந்து, பரந்து சோழ தேசத்தில் ஒய்யார நடைப் போட்டாள். அவள் ஓடிய இடத்திலெல்லாம், காந்தமன் எண்ணியபடியே, சோழ தேசம் வனப்புப் பெற்றது. காவிரி கடைசியில் காவிரிபூம்பட்டினத்தில் கடலுடன் கலக்கிறாள். அந்த காலத்தில், காவிரிபூம்பட்டினத்துக்கு, 'சம்பாபதி' என்று பெயர். இத்தகைய அழகிய பாடலை இயற்றியவர் யாரென எனக்கு தெரியவில்லை. காஞ்சி மஹாபெரியவரின் 'அருளுரை' யில் படித்ததாக நினைவு.

இப்போது கரைகொள்ளாமல் ஓடும் காவிரியை கூடிய சீக்கிரம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்....:)

செவ்வாய், டிசம்பர் 20, 2005

வல்லவரையன் வந்தியத்தேவன்

ஒரு ஆறு வருட காலம் முன்னால் 'பொன்னியின் செல்வன்' படித்தேன். படித்ததிலிருந்து, வல்லவரையன் வந்தியத்தேவன் மேல் ஒரே காதல் தான்! :) இப்பொழுது, மறுபடியும் படிக்கிறேன். வந்தியத்தேவன் மீது பற்றுக் கொண்டு, Google இணையதளத்தில் அவன் பெயரைப் போட்டால் என்னதான் வருகிறது பார்ப்போமே என்று போட்டேன். அப்போது கிடைத்த ஒரு தளம் இது.
அதிலிருந்து கிடைத்த இன்னொரு தளம்: www.varalaaru.com
தமிழ் சரித்திர வரலாறு பற்றிய e-zine ஆரம்பித்திருக்கிறார்கள். வந்தியத்தேவன் எந்தெந்த ஊருக்கெல்லாம் 'பொன்னியின் செல்வ'னில் சென்றிருந்தானோ, அந்த ஊருக்கெல்லாம் சென்று கருத்து சேகரித்திருக்கின்றனர்! பார்க்கவே மிக சந்தோஷமாக இருந்தது...:)

காதல் கவிதை!

'ஐ லவ் யூ' விகடன் ஸ்பெஷலில் நடிகர் பரத் 'காதல் பத்து' என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் எழுதிய காதல் கவிதை எனக்கு பிடித்திருந்தது:

உயரத்தில் இருப்பதால் நீ நிலாதான்!
ஆனால் உன்னையே நீ பார்க்க என்னிடம் தான் வர வேண்டும்!
ஏனெனில்,
காதல் நீர் நிறைந்த குளம் நான்!

நிலவும், தாமரை குளமும், அல்லி தண்டுகளை வைத்தும், பல ஆயிரம் காலங்களாக ஸ்ருங்கார ரசத்தில் கவிதை வரித்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அதையே புதிதான வகையில் புனைந்தால் இன்றும் ரசிக்கத்தான் செய்கிறோம். காதல் என்றும் இளமையானதன்றோ? :) 'அடடா, என்னால் இப்படி எழுத முடியவில்லையே' என்று ஆதங்கப்பட வைத்த கவிதை இது!

வியாழன், டிசம்பர் 01, 2005

அன்பே சிவம்

ப்ரியா "சிந்தனை சிதரல்" என்று அவருடைய வலைப்பதிவில் எழுதி வருகிறார். மனநோயாளிகள் பற்றியும், அவர்களை குணமாக்குதல் பற்றியும் மிக அழகான சில விஷயங்களை கூறியிருக்கிறார். ப்ரியாவின் சிந்தனைகள் சிதறி என் மனதில் சில எண்ணங்களை கிளப்பின...

என்னுடைய உறவுக்காறர் ஒருவருக்கு மன வளர்ச்சி குன்றிய ஒரு பையன் இருக்கிறான். குழந்தை பிரசவத்தின் போது, பிரசவம் பார்த்த நர்ஸ் ஒரு பிழை செய்ததால் குழந்தையின் மூளைக்கு ரத்த ஓட்டம் ஒரு நோடி போகாமல் மூளை வளர்ச்சி குன்றி விட்டது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். வயது பல ஆனாலும், இரண்டு வயதிற்குறிய ஒரு குழந்தையின் மன வளர்ச்சிதான் அவனுக்கு. இரண்டு வயது குழந்தையை கையாள எவ்வளவு பொறுமை வேண்டுமோ, அதே பொறுமையுடன் தான் அவனையும் நடத்த வேண்டும். சிசுருஷை செய்ய வேண்டும். அவனது தாய், தந்தையர் நான் மிகவும் வியக்கும், மதிக்கும் மனிதர்கள். அசாத்திய பொறுமைசாலிகள். "அய்யோ, நமக்கு இப்படி நேர்ந்து விட்டதே!" என்று அங்கலாய்த்துக் கொண்டு, சதா அழுது கொண்டிருக்காமல், அதையும் மீறி வாழ்க்கையை சுவாரஸ்யத்துடன் நடத்தும் பாராட்டுதற்குறிய மனிதர்கள் அவர்கள். தன் குழந்தையை வெறுக்காமல், பொறுமையிழக்காமல், அவன் நிலைமையை உணர்ந்து அவனை மிக்க பாசத்துடன், அவனை அரவணைத்து அவனுக்கு உதவும் நல் மனது மிக்கவர்கள்.

ஏதோ மனநோய் காரணமாக மருந்து உண்டு, மிக பருமனாக இருக்கும் பெண்ணை அவர்கள் வீட்டாரே வெறுப்பதாக ப்ரியா எழுதியிருந்தார். சாதாரணமாகவே ஏதோ ஊனம் இருப்பவரை கண்டாலோ, அல்லது சற்று அழகு குறைந்து காணப்பட்டவரை பார்த்தாலோ, மனிதர்களுக்கு ஏளனமும், அருவருப்பும் தான் முதலில் வருகிறது. இந்த மனப்போக்கு குழந்தை பருவத்திலோ, டீனேஜ் பருவத்திலோ வரும் மனப்பக்குவமில்லாத response என்று நான் நினைத்த காலமுண்டு. ஆனால் வயதும், அனுபவமும், படிப்பும் மிக்க மனிதர்களும் இப்படித்தான் அருவருப்படைகிறார்கள் என்று ஒரு கசப்பான பாடம் பின்னர் கற்றுக்கொண்டேன். இதில் ஒரு superiority complex வேறு சிலபேருக்கு. "எனக்கு இப்படியெல்லாம் இல்லை. நான் உயர்ந்தவன்!" என்று ஜம்பமாக அவர்கள் மனதில் நினைப்பது முகத்திலேயே பிரதிபலிக்கும். மேலும் சிலர், "இவர் ஏதோ பாவம் செய்திருக்கிறான். நன்றாய் வேண்டும்.நான் பெரிய புண்யாத்மாவாக்கும்" என்று தேவையில்லாத ஆன்மீகத்தை புகட்ட பார்ப்பார்கள். அந்த பையன் அருகில் வந்தாலே ஏதோ தீண்டத்தகாதவன் அருகில் வந்த மாதிரி, விலகி போவார்கள். அவன் ஏதாவது கேட்டால் எரிந்து விழுவார்கள். அவனுடைய நிலைமை அவனை மீறியது என்பதை அறியாமல் நடந்து கொள்வார்கள். நான் இதை கண்கூடாக பார்த்ததினால் தான் ப்ரியாவின் பதிவு எனக்கு பிடித்திருந்தது.

என்னை பொறுத்த வரையில், நமக்கு ஒன்று நேர்ந்து விட்டால் சமாளிப்பது அவ்வளவு பெரிய காரியம் இல்லை. ஏனென்றால், வேறு வழி கிடையாது, சமாளித்து தான் ஆக வேண்டும். பிறர் துன்பப்படும் போது, கண்ணை மூடிக்கொண்டு போய்விடலாம். கண்ணை விட்டு அகன்றதும், அந்த காட்சி மறந்தும் போய்விடும். ஆனால் என்ன தர்மசங்கடமான விஷயமாயிருந்தாலும், அதை எதிர்நோக்குவது கடினமல்லவா? பிறர் படும் கஷ்டத்தை புரிந்து கொண்டு அனுசரணையாக நடந்து கொள்ள மன வலிமையும், ஆத்மபலமும் வேண்டும். அழ்ந்த அன்பினாலேயே வரக்கூடிய குணங்கள் அவை என்று நான் நினைக்கிறேன்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு மூளையுள்ள, சுவாதீனமுள்ள மனிதர்கள் பாசமாக நடந்து கொள்வதில்லை. ஆனால், அந்த பையனோ மனிதர்கள் மீது மிகவும் பாசமாக இருப்பான். வீட்டிற்கு யார் வந்தாலும், வாஞ்சையுடன் "காபி சாப்பிடறியா?" என்று கேட்பான். அவர்கள் கோபப்பட்டால் கூட பொருட்படுத்தாமல், "மறுபடியும் எப்போ வர? பார்க்கணும் போல இருக்கு..." என்று விடைகூறுவான். ஆத்திகமும் நாத்திகமும், நல்லதும் கெடுதலும், சரியும் தவறும் உணர்ந்தும் புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இயங்கும் மனிதர்கள் மேலா? எதுவுமே அறியாமல், தன்னை வெறுபோரிடமும் பாசமாக நடந்து கொள்ளும் அவன் மேலா?

"ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்"

என்ற வரிகள் தான் மனதிற்கு நினைவு வருகின்றன....

புதன், நவம்பர் 09, 2005

வாழ்க்கையின் அவசரத்தில் கால்களில் சக்கரம் கட்டி கொண்டு ஓடுகையில், அன்றாடம் என்னை சுற்றியிருக்கும் பல அழகிய காட்சிகளை, சம்பவங்களை ரசிக்க மறந்துவிடுகிறேன். படைப்பின் அற்புதங்களான பல விஷயங்களை நாம் வாஸ்தவமாக எடுத்து கொண்டு போய்விடுகிறோம். ஒரு குழந்தைக்கு உலகில் எல்லாமே புதியது. தன்னை சுற்றியிருக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்கின்ற உற்சாகமும், ஆர்வமும் இருக்கும். இதே வயது ஆக, ஆக பல அனுபவங்கள்/விஷயங்கள் தெரிந்து விடுகின்றன.அல்லது தெரிந்து விட்டது என்று நினைத்து கொண்டு விடுகிறோம். ஆங்கிலத்தில் "Been there. Done that." என்று கூறுவார்கள். காணும் எல்லா காட்சியும், பார்க்கும் மனிதர் அனைவரையும் பாகுபடுத்தி பார்த்தால் தான் நிம்மதியாக இருக்கிறது. "இது அன்று நடந்ததை போலல்லவா இருக்கிறது? இவர் நம் பக்கத்து வீட்டு நண்பரை போலவே நடந்து கொள்கிறாரே!" என்று எப்போதும் ஒரு பக்கம் pattern match செய்து கொண்டே எண்ண அலைகள் எழும்பி, எழும்பி தாழ்கின்றன. இந்த pattern-matching தான் நமக்கு வாழ்வில் பிரச்சினைகளை தீர்க்கவும், முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அனுபவம் கூடும் போது, இன்னும் நிறைய முன்மாதிரிகள் தெரிய வருகின்றன. அதற்கேற்றார்போல், நாம் இன்னும் பல பாகுபாடுகளை உருவாக்கி, அதற்குள் எல்லாவற்றையும் அடக்க முனைகிறோம். ஆக, எதையுமே புதுமை என்று நினைக்க விரும்பாத மனதுக்கு எப்படி புத்துணர்வு இருக்கும்? எல்லாவற்றையுமே பழைய கண்ணோட்டம், தவறுகள், திருத்தங்களால் செய்த கண்ணாடியால் பார்த்தல் எவ்விதத்தில் நல்லது? என் நண்பன் ஒருவன் கூறுவான், "Subha, you should let yourself be surprised everyday!". மிக உண்மை என்று இன்று தோன்றுகிறது. நான் இவ்வளவு கடுமையான விஷயத்தை கூற நினைத்து எழுத ஆரம்பிக்கவில்லை...:)

என்னையும், என் அவசரத்தையும் மீறி என்னை தினமும் அசத்தும் ஒரு விஷயம்: மலர்கள். அழகான, வெள்ளை மொட்டுக்களில் சிறிய நீர் முத்துக்கள் விளையாட, நறுமணம் வீசும் மல்லிகை, முல்லை, ஜாதி, ரோஜா பூக்களுக்கு என் மேல் ஒரு தனி ஆளுமையுண்டு! எவ்வளவு முறை பார்த்தாலும், சூடினாலும் எனக்கு இன்று வரை அலுத்தது கிடையாது! அதிகாலையிலும், அந்தி சாயும் நேரத்திலும் பூக்காரர்கள் மிக வேகமாக ஆனால் லாவகமாக, தாளம் தவறாமல் (ஆம் அவர்களின் அந்த பூக்கட்டும் கலையிலும் சங்கீதாம்சம் இருக்கத்தான் செய்கிறது..:))மலர்களை, அடர்த்தியான சரங்களாக கோர்க்கும் கலையே மிக அழகு. ஸ்ரீரங்கத்தின் சாத்தார வீதிதான் பூச்சந்தை. கற்பூரமும், ஊதுவத்தியும், பன்னீர் வாசனையுடனும் கலந்து வரும் பூவாசம் நாசியை துளைக்கும்! அம்மா அருகே இருக்கும் கடைகளில் காய்கறி வாங்குகையில், பூச்சந்தையில் இங்கும் அங்கும் நான்கு முறை நடந்து, வேடிக்கை பார்த்துவிட்டு வருவேன்.

அரங்கனுக்கு கோடை வெயில் தெரியாமல் இருக்க, ரங்கநாயகி சமேதராய் வசந்த மண்டபத்தில் தண்ணீருக்கு நடுவே சந்தியா வேளையில் சேவையாற்றுவார்கள். அருகேயிருக்கும் நந்தவனத்திலிருந்து துளசி மணமும், பூமணமும் கலந்து வீசும் மிக ரம்மியமான சூழல்! சில நாட்கள், கோடை மழை சற்று பூமியை நனைக்கும் நேரம், மண்வாசனையும் கலந்து மிக ஆனந்தமாக இருக்கும்! எத்தனை முறைதான் இதை ரசித்தாலும், ஒரு சிறு பிள்ளையின் கண்ணோட்டத்தோடு, புத்துணர்வுடன் நான் விரும்பும் விஷயங்களில் இதுவும் ஒன்று!

ஞாயிறு, அக்டோபர் 23, 2005

தர்மஸ்தலா

பல ஆண்டுகளுக்கு முன்பு கர்னாடகா டூர் சென்றோம். சுப்ரமண்யா, தர்மஸ்தலா, தலைக்காவிரி, உடிபி, மங்களூர் என்று ஒரு பெரிய பயணம். கர்னாடகாவில் என்னை முதலில் கவர்ந்தது, அடர்ந்த காடுகளும், நீர்வளமும். எல்லா ஊரிலுமே வெயில் தணிந்து, குளுமையாக இருந்ததால், தமிழ்நாட்டிலிருந்து வந்த எனக்கு பிடித்திருந்தது..:) பல வருடங்கள் முன் சென்ற ஊராதலால், நினைவில் பல விஷயங்கள் நிற்கவில்லை.

தர்மஸ்தலாவில் ஒரு சோமவாரம் சென்றிருந்தோம். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு சத்திரத்தில் தங்கும்படியாக நேர்ந்தது. ஹோட்ட்ல் புக்கிங்கில் ஏதோ குளறுபடியால் இப்படி ஆகியது என்று நினைக்கிறேன். "ஐயோ சத்திரமா!" என்று நாங்கள் எல்லோரும் அலுத்து கொண்டிருந்தோம். தர்ம சத்திரம் என்றாலே அது நன்றாக இருக்காது என்று ஒரு prejudice. வெறும் Prejudice என்று சொல்வதை விட, ஒரு காரணத்துடன் தான் ப்ரஜூடிஸ் என்று சொல்லலாம். சங்க காலத்தில், என்னதான் சத்திரங்கள் பயணியர்க்கு அடைக்கலம் தந்து, ராஜோபசாரம் செய்ததாக இருந்தாலும், இப்போது தமிழ்நாட்டில் அப்படி இல்லையல்லவா? ஆனால் எங்களுடன் வந்த டிரைவர், தர்மஸ்தலா சத்திரங்கள் மிக நன்றாக இருக்கும் என்று கூறி அழைத்து சென்றான். உண்மையிலேயே, மிக தூய்மையாகவும், வசதியாகவும் இருந்தது. இன்பமான அதிர்ச்சி அது.

சோமவாரம் மிக விசேஷம். நேத்ராவதி நதிக்கரையில், மரங்கள் சூழ்ந்திருக்க அமைந்திருக்கும் தீர்த்தம். அருள்மிகு மஞ்சுநாதஸ்வாமியையும், அம்மானவாருவையும், சுப்ரமண்யரையும் தரிசனம் செய்தோம். தர்மஸ்தலாவில் விசேஷம், அது ஒரு மதத்தை சார்ந்த கோவில் அல்ல. என்னதான் சிவ-சக்தி அம்சங்களாக தெய்வங்கள் அமைந்திருந்தாலும், அவை தர்ம தேவதைகளாகவே பூஜிக்கப்படுகின்றன. ஆக, அது தர்மத்துக்கும், தர்ம ரக்ஷணை செய்யும் பொதுவான கடவுளுக்கும் தான் கோவில். பல மதத்தினர், இஸ்லாமியர் உட்பட, அங்கு வழிபாடு செய்கின்றனர். தினம் வரும் பக்தர்களுக்கு எல்லாம், தேவஸ்தானம் இலவசமாக உணவளிக்கிறது. மிகவும் ருசியான, கல்யாண சாப்பாடு..:)

தர்மத்தை பற்றி பேச எனக்கு மூளையும் போதாது, வயதும் போதாது. ஆனால், ஒரு சில எண்ணங்கள் இதோ. "தர்மம்" என்ற ஒரு கருத்துக்கு ஆங்கிலத்தில் ஒரு சமமான வார்த்தை கிடையாது. இது பரதக்கண்டத்துக்கே சாசுவதமான ஒன்று. இதை மதத்தோடு கோர்ப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை. தர்மம் மதத்துக்கெல்லாம் அப்பார்ப்பட்டது. Duty என்பது கடமை. அது தர்மத்தின் ஒரு அங்கம் மட்டுமே. அதுவே தர்மமா? இல்லை. Obligation? சில நேரங்களில் தர்மத்தின் பொருட்டு சில obligations செய்ய நேர்ந்தாலும் அது மட்டுமே தர்மமாகாது. புண்ணியம் தேடி மற்றவர்க்கு அன்னதானமும், charity-உம் கொடுத்தால் அது தர்மமா? பலன் தேடி எதை செய்தாலும் அது தர்மமாகாது. எல்லோருக்கும் ஒரே தர்மம் என்பதும் ஒப்புக்கொள்ள முடியாதது. ஒரு சிலருக்கு, நேரத்தை பொறுத்து தான் தர்மம் விதிக்கப் படுகிறது. ஸ்ரீராமர் சீதையை தீக்குளிக்க சொன்னதும் தர்மமே. துரியனை இடுப்பின் கீழ், பீமனை அடிக்க சொன்னதும் தர்மமே. காந்தாரி, புத்திர சோகத்தில் இறையம்சமான கிருஷ்ணனை வம்சம் அழியும்படி சபித்ததும் தர்மமே.

இப்படி பல குழப்பங்கள். இதற்கு கிருஷ்ணர் கீதோபதேசமே செய்திருக்கிறார். நான் என் சொல்வது? :) என்னை பொறுத்த வரையில், நடைமுறை வாழ்க்கையில், பிறரை அனாவசியமாக மனதில் தூஷிக்காமல் இருப்பது; வஞ்சனை எண்ணம் கொள்ளாமலிருப்பது; பொறாமை படாமல் இருப்பது; அடுத்தவரை அவமதிக்காமல் இருப்பது போன்று சிறிய விஷயங்கள் கூட தர்ம சிந்தனை தான்! எவ்வளவு முறை பிறரைப் பற்றி, அவசரமாக ஒரு தவறான முடிவுக்கு வருகிறோம்? நமக்கு தான் analytical mind இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, அரைகுறை விஷயங்கள் தெரிந்து கொண்டு, எதையோ ஆராய்ந்து, மொட்டைதலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டு, பலவாறான முடிவுகளுக்கு வருகிறோம். இதுவும் அதர்மம் தான். People can never be pegged as round or square. பல மனிதர்கள் தயாரிக்கும் பொருள்களை தினசரி உபயோகம் செய்கிறோம். அதை மதிக்காமல், அனாவசியமாக வீணாக்குதலும் அதர்மம் தான்!

இதெல்லாம் நானும் கடைபிடிக்கிறேன் என்று சொல்வதற்கில்லை. முடிந்த வரை முயல்கிறேன். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்ற awareness இருக்க வேண்டும். அப்போது தான், அடுத்த முறை எதாவது ஒரு எண்ணம் வரும்போது, அது நல்ல சிந்தையா, கெடுதலா என்று எண்ணி பார்க்கவாவது தோன்றும்!

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசி மந்திரமும், சந்தியா வந்தனத்தின் கடைசி மந்திரமும்

"காயேன வாசா மனசேந்த்ரியேர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்"

என்றே ஆரம்பிக்கிறது. மனஸ், உடல், இந்திரியம், புத்தி, வாக்கு, ஆத்மா ஆகிய அனைத்தாலும் நான் செய்பவை இறைவனுக்கே சமர்ப்பணம் என்பதே பொருள். இதில் சிலவற்றையாவது கடைபிடிக்க முயல்கிறேன்.

செவ்வாய், அக்டோபர் 18, 2005

திருப்பேர்நகர்

தமிழில் எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்று ஒரு மாலை இளவெயில் நேரத்தில் இளந்தென்றல் வீச, அதற்கிசைந்து தலை சாய்த்து, சோம்பல் முறித்து மரங்கள் பலவர்ண இலைகளையுதிர்க்க, எனக்கு மறுபடியும் காவிரியாற்றங்கரையின் இளந்தென்றல் மனதில் வீசியது...

திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
"இருப்பேன்" அன்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேனே!"

- நம்மாழ்வார் திருவாய்மொழி

வைணவ §க்ஷத்திரங்களில் 'பஞ்சரங்க' §க்ஷத்திரங்களுக்கு தனி சிறப்புண்டு. பஞ்சரங்கம் எனக் கூறப்படுபவை: ஆதிரங்கம் அல்லது ஸ்ரீரங்கப்பட்டினம், அப்பாலரங்கம் அல்லது திருப்பேர்நகர், பரிமளரங்கம் அல்லது மாயவரம், ஸ்ரீரங்கம் மற்றும் சீர்காழி அருகே இருக்கும் வடரங்கம். இந்த பஞ்சரங்கத்திலும் எம்பெருமான் பள்ளிகொண்டானாக காட்சியளிக்கிறார்.
திருப்பேர் நகருக்கு கோவிலடி என்றும் பெயர். பெருமாள் அங்கு அமர்ந்து அந்த இடத்தை விட்டு பெயரேன் எனவருளியதால், திருப்பேர்நகர் என்று பெயர்க்காரணம். பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்துக்கு வாயிலாக இருப்பதனால் "கோவில் அடி" என்றும் பெயர் ஏற்ப்பட்டது. ஸ்ரீரங்கத்துக்கு அப்பால் காவிரியாற்றங்கரையின் கரையில் அமைந்திருப்பதால், 'அப்பாலரங்கம்' என்று பெயர். அன்பில் மற்றும் கோவிலடி இரண்டையுமே சேர்த்து தான் சொல்வார்கள். அன்பில் காவிரியின் திருச்சி கரையிலும், கோவிலடி காவிரியின் தஞ்சை கரையிலும் அமைந்திருக்கிறது. திருமழிசையாழ்வார் தன் பாசுரத்தில் அன்பில் மற்றும் திருப்பேர்நகரை சேர்த்து "பேரன்பில்" என்றே கூறுகிறார்.

நான் சென்ற பல கோவில்கள் போல, இதுவும் எதேச்சையாக சென்ற கோவில் தான். முதலில் சென்ற போது, அந்த தலத்தை பற்றி எதுவுமே தெரியாமல்தான் போனேன். மிக சிறிய ஊர். திருச்சியிலிருந்து சுமார் 45 நிமிட பயணம். ஆற்றங்கரையிலேயே கோவில். அழகிய, எளிமையான தஞ்சை ஜில்லா ஊர். மாலை நேரத்தில், காவிரியின் காற்று வந்து வருடிச்சென்றது. பள்ளிகொண்டப் பெருமாள் அப்பக்குடத்தான் என்று பெயர் பெற்றிருக்கிறார். இறைவனின் வலக்கையருகே ஒரு பெரிய அப்பக்குடம் இருக்கும். உபரிஸ்ரவசு என்னும் மன்னன், கிழவன் ரூபத்தில் வந்த இறைவனுக்கு அன்னமளித்தும் பசியடங்காமல் போக, விருந்து தயார் செய்யும் வேளையில், snack-ஆக அப்பங்கள் செய்து படைத்தான். அந்த அப்பக்குடத்தோடு அங்கேயே பெருமான் கமலவல்லி நாச்சியார் சமேத அப்பாலரங்கனாக அமர்ந்து விட்டதாக தலபுராணம்.

பெருமாளுக்கு தசாவதார ஒட்டியானம் மிக பிரசித்தி. 6000 வருடத்துக்கும் மேலான பழமையான கோவில் எனக் கூறுகின்றனர்! எந்தவிதமான வெப்பத்திலும் கூட, எப்பொழுதும் ஜில்லென்று காற்றை கிளப்பி பெருமாள் மனம் குளிர வைப்பாள் காவிரியன்னை என்று பட்டர் கூறினார். அதை ஆமோதிப்பதைப் போல், அப்போது ஒரு குளிர்தென்றல் கிளம்பியது.
கோவிலடியிலிருந்து பல கலை வல்லுனர்களும், ஆசார்யார்களும், அனுஷ்டானங்களில் சிறந்தவர்களும் தோன்றியதாக பேச்சு. திருச்சியில், கோவிலடி மத்வப்ரசாத் என்று ஒரு வித்வானின் கச்சேரிகள் கேட்டிருக்கிறேன். மிக பிரமாதமாக இருக்கும்! அந்த கூற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்யுமோ என்று என்னை யோசிக்க வைத்தது. யோசனையிலேயே, காவிரி ஆற்றின் ஓரமாக பயணம் செய்து, திருச்சியும் அடைந்து விட்டோம். இவ்வளவு நாள் இந்த ஊரைப் பற்றி தெரியவில்லையே என்று ஒரு சின்ன வருத்தம். ஆனால், இப்போதாவது, அரங்கன் அனுக்கிரகத்தில் காணக்கிடைத்ததே என்றும் ஒரு சந்தோஷம்.

'இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்து என் செய்வான்?
குன்றெனத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்தலுற்றேனே!'
- நம்மாழ்வார் திருவாய்மொழி

(O Lord, how could you have ignored me all my life and suddenly thought it fit to enter my heart? What answer can you give except hang your head in shame like a pupil before a teacher!)
என்று முணுமுணுத்துக் கொண்டே மனதால் விடைப்பெற்றேன். மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் அந்த §க்ஷத்திரம் செல்வேன்.

திங்கள், செப்டம்பர் 12, 2005

அண்மையில் முத்துக்குமார் இந்த இணையத்தளத்தை பரிந்துரை செய்தார். ரம்யா என்பவரின் பதிவு இது. மனதை மிகவும் பாதித்தது! கிராமத்தில் ஏழை எளியவர்களாக இருந்தாலே வாழ்க்கையில் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். அதுவும் பெண்ணாக இருந்தால், அன்றைய வாழ்க்கையின் பிரச்சினைகள் போதாது என்று, உடல் ரீதியான கொடுமைகள் வேறு!
தயவு செய்து படித்துப் பாருங்கள்.

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2005

மலைக்கோட்டை (தாயும் ஆனவர்)

திருச்சி மலைக்கோட்டையை சுற்றி பல கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். 'திரிசரன்' என்ற அசுரன் இறைவனை இங்கு வழிபட்டதால் 'திரிசரபுரம்' என்று பெயர்க்காரணம் கூறுவார்கள். கைலாய மலையிலிருந்து துகளாகி மூன்று பாகங்கள் பறந்து வந்ததாகவும், அதில் ஒன்று திருச்சி மலைக்கோட்டை என்றும் கதை இருக்கிறது. மூன்று குன்றுகளில் பிள்ளையார், தாயுமானவர் மற்றும் மட்டுவார்குழலியம்மன் அருள்புரிகிறார்கள்.

ரத்னவதி என்னும் கர்ப்பிணி பெண்ணுக்கு, தாயாக காட்சியருளி பிரசவத்துக்கு உதவிபுரிந்ததால், இறைவனுக்கு "தாயும் ஆனவர்" என்று பெயர். தாயுமானவர் சந்நிதியில், கர்ப்பிணி பெண்கள் சொல்லக்கூடிய ஒரு ஸ்தோத்திரம் இருக்கிறது. பலர் வேண்டிக்கொண்டு, வாழைப்பழக் குலைகள் காணிக்கையாக கொண்டு வந்து தருவார்கள்.

தாயுமானவர் சந்நிதி மேற்கே நோக்கி இருக்கும். உறையூரில் ஆட்சிபுரிந்த சோழ மன்னன் மீது கோபம் கொண்டு, கிழக்கே நோக்கி இருந்த தாயுமானவர், மேற்கே திரும்பி விட்டதாக கதை. உறையூரில் பெரிய மணற்புயல் உருவாகி, ஊரையே அழிக்கும் நிலையில், வெக்காளியம்மன் தலையிட்டு, சிவ பெருமானின் கோபத்தை தணித்தாளாம். இன்றும் வெக்காளியம்மன் தான் ஊரின் காவல் தெய்வம். இந்த மணற்புயலுக்கு இன்னொரு காரணமும் கூறுவார்கள். அம்பிகாபதியை, சோழ மன்னன் தண்டித்ததால், புத்திர சோகம் கொண்ட கம்பன் சோழநாட்டை சபித்ததான். அதனால், பெரிய மணற்புயல் உருவாகி, வளமான உறையூரை வெற்று நிலமாக மாற்றிவிட்டதாக வரலாறு.

உறையூர் 300 கி.மு-விலிருந்தே சோழமன்னர்களின் தலைநகரம். உறையூரில் மன்னர்களின் மாளிகையிலிருந்து, மலைக்கோட்டைக்கு ஒரு சுரங்கம் இருந்ததாகவும் ஒரு கதையிருக்கிறது! பின்னர் பல்லவர்களும், பாண்டியர்களும், நாயக்கர்களும் மலைக்கோட்டைக்கு contribute செய்ததாக வரலாறு கூறுகிறது. கலா ரசிகனான மகேந்திர வர்ம பல்லவன் மலைக்கோட்டையில், அழகான சித்திரங்களும், சிற்பங்களும் அற்பணித்தது சரித்திரம். நாயக்க மன்னன் ஒருவன் தெப்பக்குளத்தையும், கோட்டையையும் கட்டினான்.

இப்படி பல சுவாரஸ்யமான கதைகள் நிறைந்த ஊர் திருச்சி. மலைக்கோட்டையின் உச்சியிலிருந்து திருச்சியை ஒரு கழுகு பார்வை பார்க்கலாம். அமைதியாக பாயும் காவிரியும், திருவரங்கத்தின் ராஜகோபுரமும், ஆனைக்கா அண்ணலின் கோபுர உச்சியும், அரியமங்கலத்தின் பசுமையான வயல்களும், மலைக்கோட்டையை சுற்றி பரபரப்பான வாழ்க்கையின் அவசரத்தையும் அந்திவானில் மறையும் சூரியனின் செங்கதிர்கள் சிவப்பு கலந்த தங்க வெளிச்சத்தில் எடுத்துக்காட்டும். மலைக்கோட்டையின் அந்த பழமையான பாறைகள் கடந்த காலத்து மன்னாதி மன்னர்களையும், வீரர்களையும், கவிகளையும், பக்தர்களையும்,அழகே உருவான வடிவு சுந்தரிகளையும் பார்த்திருக்கின்றன; மாபெரும் ராஜ்யங்களின் உயர்வையும், வீழ்ச்சியையும் கண்டிருக்கின்றன; விபீடணன், வல்லவரையன் வந்தியத்தேவன், குந்தவை நாச்சியார், மகேந்திர வர்ம பல்லவன், ராஜ ராஜன், சாரமாமுனிவர்,என்று பலர் வந்து போன சுவடுகளை தாங்கும் கதை சொல்லும் கற்கள் அவை...வருங்காலத்துக்கும் இதே கதைகளை கூறும்.

புதன், ஆகஸ்ட் 10, 2005

மலைக்கோட்டை - 1 (ஒரு அறிமுகம்)


திருச்சியின் மிக பழமையான பகுதி மெயின்கார்டு கேட். அந்த காலத்தில், ராணி மங்கம்மா எழுப்பிய கோட்டை மதில் சுவரின் facade மட்டும் இன்னும் இருக்கிறது. திருச்சியின் பிரதான shopping area-வான மெயின்கார்டு கேட்டின் மத்தியில் மலைக்கோட்டை. இந்த தெப்பக்குளம் கோவிலின் மட்டும் தான் எப்போதுமே நிரம்ப தண்ணீருடன் நான் பார்த்திருக்கிரேன். திருச்சியின் கடுமையான வெய்யில் அந்தியில் தணியும் நேரம், தெப்பக்குளத்திலிருந்து வரும் மெல்லிய பூங்காற்று சந்தனம், ஊதுபத்தி மற்றும் பூக்களின் மணத்தையும் தன்னோடு அரவணைத்து வந்து சுகம் தரும்.

பெரிய கடை வீதியில் 'சாரத டெக்ஸ்டைல்ஸ்' மற்றும் 'கிருஷ்ணா கார்மெண்ட்ஸ்' என்று அலறும் இரு பெரிய shopping hubs நடுவில், மலைக்கோட்டையின் சிறிய வாயில். உள்ளே சென்றதும் மாணிக்க விநாயகரின் சந்நிதி. ஷாப்பிங் செய்ய வந்தவர்கள், பொழுது போகாமல் நேரத்தை கழிக்க வேண்டி உள்ளே நுழையும் வாலிபர்கள் என்று எப்போதும் கூட்டம் ததும்பும். மிக அழகான மாணிக்க விநாயகர் வெள்ளி கவசம் தரித்து, சிரித்த முகத்துடன் காட்சியளிப்பார். எப்போதும், எருக்கம்பூ மாலையும், அருகம்புல் அலங்காரமும் தரித்திருக்கும் விநாயகரை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! பிரகாரத்தை சுற்றி, அவ்வையின் விநாயகர் அகவலும், திருப்புகழும் சுவற்றில் பொறித்திருக்கும். இப்போது புதுப்பித்தலில், அதையெல்லாம் மறைக்கும் விதமாக வண்ணம் பூசியிருப்பது சற்று வருத்தம். நம் கோவில்கள் கருங்கற்களால் ஆனாலும், மிக அழகாகவும், கலா ரசனையுடனும் படைக்கப் பட்டவை. அதை நவீன வண்ணங்களாலும், நமது 21-ஆம் நூற்றாண்டு சாயலில் புதுப்பிப்பதில் எனக்கு உடன்பாடில்லை.

பிள்ளையாரை தாண்டி மலைக்கோட்டை செல்லும் படிகள் ஏறவேண்டும். செங்குத்தான படிகள். ஆனால், படி கற்களை மிக நேர்த்தியாக இழைத்திருப்பார்கள் அந்த கால சிற்பிகள்! சற்று தூரம் ஏறினாலே, சிறு ஜன்னல்கள் வழியாக பொன்னியில் புறப்படும் மாலை தென்றல் அள்ளிச் செல்லும். பல நாட்கள், நானும் என்னுடைய நண்பர்களும், அந்த ஜன்னல்களுக்கு அருகே அமர்ந்து பேசியதுண்டு. இயற்கையின் அழகிய air conditioning அது! மேலே செல்லும் வழியில், ஒரு இடத்தில் இரு பக்கத்திலும் இரண்டு பெரிய சிற்ப மண்டபங்கள் வரும். முற்றிலும் கல்லிலேயே குடையப்பட்ட மண்டபங்கள். Monolithic pillars என்று கூறப்படும் ஒரே கல்லாலேயே உருவாக்கப்பட்டவை. இந்த மண்டபங்களில், மகேந்திர வர்ம பல்லவர் சுவற்றில் சித்திரம் வரைந்ததாக கூறுகிறார்கள். நான் பார்த்ததில்லை. ஆனால், சுவற்றின் சித்திரங்கள் கண்ணுக்கு தெரியாத வகையில் அழிந்து போயிருக்கின்றன. 'பார்த்திபன் கனவி' லும் இதை பற்றி ஒரு reference வரும்.

பொதுவாக விஷ்ணுவைத்தான் அழகு என்று போற்றுவார்கள். அவர்கள் அநேகமாக தாயுமானவரை பார்த்திருக்க மாட்டார்கள்!

"பொன்னார் மேனியனே புலித்தோலை அரக்கசைத்து
மின்னார் செஞ்சடை மேல் மிளிர்கொன்றை அண்¢ந்து
மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே!"

என்று என்னை மறந்து பாட வைத்த சுந்தரேசன் அந்த தாயுமானசுவாமி! 5 அடிக்கும் மேல் உயரமான லிங்கம். ஆடம்பரமே இல்லாத அலங்காரம் சிவனுக்கு. ஈர வேட்டியும், வில்வ இலையும்தான் usual அலங்காரம். பிரகாரங்களில் குளிர் காற்று வீச, சஞ்சலமான மனதுக்குக் கூட அமைதியூட்டும் சூழ்நிலை. பல நாட்கள் நான் அமைதியாக ஒரு பத்து நிமிடம் வாழ்க்கையின் அவசரத்தை விட்டு அமர்ந்துவிட்டு வருவேன்.

மலைக்கோட்டை தொடரும்....

செவ்வாய், ஆகஸ்ட் 02, 2005

திருவண்ணாமலை

திருவண்ணாமலை என்றாலே அருணாசலேசுவரரும், உண்ணாமுலையம்மனும் தான் நினைவில் வருவார்கள். புகழ் பெற்ற சைவத் திருத்தலமான திருவண்ணாமலை என்ற பேரில் ஒரு வைணவத் திருத்தலமும் உண்டு.

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே 10 கி.மீ தொலைவில் உள்ளது திருவண்ணாமலை. மிக சிறிய கிராமம். பல பேருக்கு தெரியாது. ஸ்ரீவில்லிப்புத்தூரிலேயே கேட்டாலும், சிலர் தான் சரியாகக் கூறுவார்கள். என் தந்தை, மதுரையில் அலுவல் புரிந்த போது, ஒரு நண்பர் யதார்த்தமாக அழைத்து கொண்டு சென்ற கோவில். என் தந்தைக்கு மிகவும் பிடிக்க, நாங்கள் எல்லோரும் சென்றோம்.

ஒரு சிறிய குன்றின் மேல் இருக்கிறது கோவில். மிக சிறிய ஆலயம். நம் பெருமாள் வீர ஸ்ரீனிவாசன் வீரவாளுடன் தரிசனம் தருவார். திருப்பதி பெருமாளின் அச்சு அசல். மகாவிஷ்ணு அழகின் ஸ்வரூபம். ஆனால் திருப்பதியில் நாம் அருகில் சென்று ரசிக்க முடியாத அழகு, இங்கு மனதார அருகே சென்று ரசிக்கலாம்! ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஆண்டாள் கல்யாணத்துக்காக திருப்பதி பெருமாள் புறப்பட்டதாகவும், கால தாமதமாக வந்ததனால், ஸ்ரீரங்கம் செல்லாமல் இங்கேயே settle ஆகிவிட்டதாக ஐதீகம். ஆகையால், இந்த பெருமாளை பார்த்தால், திருப்பதி சென்ற பலன்.

ஒரு மார்கழி மாத காலையில், மதுரை ஜில்லாவின் இனிமையான விடிகாலை நேரத்தில், பனி விழ நாங்கள் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்தோம். கர்ப்பக்கிருகத்துக்கு அருகே அமர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தமும், சுப்ரபாதமும் ஒலிக்க புன்னகை தவழும் ஸ்ரீநிவாசனை நன்றாக தரிசித்தோம். பின் நல்ல மிளகு சாத பிரசாதம் கிடைத்தது! அந்த மாதிரியான ஒரு மிளகு சாதம் நான் வேறெங்கும் உண்டதில்லை (ஸ்ரீரங்கம் உட்பட)! பின்னர் பல முறை அந்த கோவிலுக்கு சென்றாகிவிட்டது. ஸ்ரீவில்லிப்புத்தூர் செல்லும் போதெல்லாம் அங்கும் சென்றுவிட்டு வருவோம்.

மனித மனது வேலை செய்யும் வகையே விசித்திரம். ஒரு சில கோவில்கள் செல்லும் நேரம், மனதில் அமைதியும், வாழ்க்கையில் இன்பமூட்டும் விஷயங்களும் நடக்க நேரலாம். இறை நம்பிக்கையுள்ளவர்கள், அதை தெய்வச் செயல் என்பார்கள். நாத்திகர்கள்,அது சந்தர்ப்ப சூழ்நிலை என்று கூறலாம். எது எப்படியோ, அந்த சந்தோஷம் நேரும்போது நாம் எந்த இடத்தில் இருக்கிறோமோ அந்த இடத்தோடு associate செய்து விடுவோம்! அப்படிதான் எனக்கு இந்த கோவில். மதுரை ஜில்லாவின் பசுமையான கிராமங்களும், மிக அமைதியான வாழ்க்கையும் நினைவூட்டும் இந்த அழகிய திருத்தலம், என்றும் என் மனதில் இருக்கிறது.

ஞாயிறு, ஜூலை 10, 2005

கல்வி

இப்போது 'எல்லோருக்கும் கல்வி' என்ற கோஷம் அதிகமாக கேட்கிறது. எல்லோருக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்று அரசாங்கம் நிறைய சட்டங்கள் தீட்டுகிறது. ஏழை எளியவர்கள், கிராமத்திலிருந்து வரும் மாணவர்கள், போன்றோருக்கு படிப்பறிவு சென்றடைய வேண்டும் என்பது நோக்கம். சமீபத்தில் கூட, Common Entrance Test (CET) abolish செய்யப்பட்டது. இனிமேல் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் வைத்தே மாணவர்களுக்கு engineering கல்லூரிகளில் அனுமதி. CET-க்கு நிறைய பயிற்சி தேவையென்றும், இதில் நகர மாணாக்கர்களுக்கு ஒரு unfair advantage இருப்பதாகவும் அரசாங்கம் கருதி இந்த சட்டத்தை அமல் படுத்தியிருக்கிறார்கள். இந்த செயலுக்குப்பின் இருக்கும் எண்ணம் நல்லதுதான். ஆனால் implementation சரிதானா?

எல்லோருக்கும் கல்வி என்பது போற்ற வேண்டிய ஒரு விஷயம். ஆனால் என்ன கல்வி அவசியம்? எல்லோருக்கும் தொழில்நுட்பக் கல்வி அவசியம் தானா? அதை நோக்கியே சட்டங்கள் தீட்டுவது சரியா? கலை கல்லூரிய்¢ல் பயின்றால் மட்டம் என்கிற எண்ணம் மேலோங்கி இருக்கிற காலம் இது. எதற்கும் லாயக்கில்லாதவன் தான் கலைக் கல்லூரியில் சேறுவான் என்று மிக ஆழமாக மக்கள் மனதில் ஊறிவிட்டது. அதனால், ஆர்வம் இருக்கிறதோ இல்லையோ, engineering பயில்வதற்கான attitude, aptitude இருக்கிறதோ இல்லையோ, மாணவர்கள் சென்று அதில் விழுகிறார்கள். நமது பொருளாதாரமும் computer science சார்ந்த வேலைகளையே நிறைய உருவாக்குவதாலும், பலர் அதையே நாடுகின்றனர். இப்படி கட்டாயத்தால் சேர்ந்த மாணவர்கள், ஏதோ படிக்க வேண்டுமே என்று படிப்பதை நானே என் கண்கூட பார்த்திர்க்கிறேன். இதுதான் கல்வியா?

இப்படி அனைவரும் தொழில்நுட்ப கல்வி பயில வசதியாக, தரத்தை dilute செய்வது எந்த விதத்தில் நியாயம்? Knowledge is Power என்று கூறுவார்கள். அது முற்றிலும் உண்மை. அதைவிட ஆபத்தானது அறைகுறை அறிவு! Standards குறையக் குறைய, நிறைய பேர், "ஏன் நாமும் படித்தால் என்ன?" என்று சேர்ந்து கொண்டே தான் இருப்பார்கள். ஒரு வகையான கல்வி (அது தொழில்நுட்பம் மட்டுமல்ல, கலை, ஓவியம், சங்கீதம் எதுவாக இருந்தாலும் சரி) பயில வேண்டும் என்றால் அதற்கேற்ப முயற்சியும், பயிற்சியும் செய்யத்தான் வேண்டும். உழைக்காமல் வரும் எதுவும் பிரயோஜனப்படாது.

அந்த காலத்தில் குருகுலவாசம் இருந்தது. எவனோ ஒரு மனிதனுடன் இருந்து அவனுக்கு சேவை செய்வதால் எப்படி அறிவு வரும்? அது exploitation அல்லவா? என்றெல்லாம் பலர் கேட்கிறார்கள். குருவுக்கு சேவை செய்வதால், நேரிடைப் பயன் எதுவும் கிடையாது தான். ஆனால், discipline வளரும். வினயம் கற்றுக்கொள்ள முடியும். ஆசானிடம் ஒரு வித்தையை கற்று, அதை சரியான வழியில் மட்டுமே பயன்படுத்தும் மனப்பக்குவம் வரும். ஏனென்றால், அந்த வித்தையை கற்க அவன் பட்ட கஷ்டம் அந்த மாணவனுக்கு தெரியும். அதனுடைய அருமையும், பின் விளைவும் நன்றாகவே அறிவான். கஷ்டப்பட்டு நாம் சம்பாதித்த எதையும் அவ்வளவு சுலபமாக செலவழிக்க மாட்டோமல்லவா?

அந்த காலத்தில்,அந்த மனப்பக்குவம் வராத எவருக்கும் கல்வியளிக்க மாட்டார்கள். இந்நாளில், வலைதளத்தில் அனைத்துக்கும் recipe இருக்கிறது. தேங்காய் துவையல் செய்வதிலிருந்து அணு குண்டு செய்வது வரைக்கும் எல்லாமே க்ஷண நேரத்தில் நம் கையில்! இந்த instant education -ஆல் என்ன ஆகிறது? எங்கோ ஒரு மூலையில் இருக்கும் பள்ளி மாணவன், பொழுது போகாமல் எப்படி குண்டு செய்வது என்று பார்த்து, ஏதோ கோபத்தில் தனது சக மாணாக்கர்களையே கொன்று விடுகிறான்!! கோபம் கண நேரத்தில் வந்து மறையும். நிலையற்றது. அதனால் தான் கராட்டே பயில்பவர்க்கு, மனப்பயிற்சியும் கொடுப்பார்கள். இல்லாவிடில், அவர்கள் கையில் இருக்கும் சக்தி மற்றவரை அழிக்கவல்லது....

நான் கூற வருவது என்னவென்றால், நிறைய பேர் தொழில்நுட்பம் பய்¢ல ஆசைப்படுவது தவறல்ல. ஆனால் அதற்குண்டான aptitude, attitude, skills இருந்தால் மட்டுமே அதில் செல்ல வேண்டும். அந்த பட்டம் வாங்க உழைக்கவும் வேண்டும். மற்ற துறைகள் எல்லாம் மட்டம் என்று ஏன் நினைக்க வேண்டும்? Engineering படிப்பவன் எந்த விதத்தில் உயர்ந்தவன்? கலைக் கல்லூரியில் படிப்பவன் எந்த விதத்தில் தாழ்ந்தவன்? எல்லோரும் எஞ்சினியராகவோ, டாக்டராகவோ போய்விட்டால், மற்ற தொழில்கள் அழிந்து விடுமல்லவா?

கிராமத்தில் இருப்போருக்கு, CET பாஸ் செய்யும் வசதி செய்து கொடுப்பது நியாயம், விவேகம். அதை விட்டுவிட்டு, தற்காலிக பயன் தரும் காரியங்களை செய்வது ஒரு vision இல்லாமல் செய்யும் காரியம்.

செவ்வாய், ஜூன் 28, 2005

அகிலாண்டேசுவரி (திருவானைக்காவல்-2)

வெகுவாக, பல சைவ §க்ஷத்ரங்களில், இறைவன் பெயரைச் சொல்லித்தான் கோவிலை அழைப்பார்கள். "நடராஜாவை பார்த்து விட்டு வரேன்", "கபாலீசுவரர் கோவில் போய்ட்டு வரேன்" என்று தான் பெரும்பாலும் கூறுவார்கள். மதுரையில் மட்டும் தான் "மீனாட்சி அம்மன் கோவில் போயிருந்தேன்" என்று கூறுவார்கள். திருவானைக்காவலிலும், ஜம்புகேசுவரருக்கு சமமான மரியாதை அம்பாள் அகிலாண்டேசுவரிக்கும். திருச்சியில் தடுக்கி விழுந்தால் ஒரு அகிலா-வை பார்க்கலாம்.

அம்பாள் மிக அழகு! அதுவும், அர்த்த ஜாம பூஜைக்கு அலங்கரிக்கப்பட்ட அகிலாண்டேசுவரியை பார்த்துக் கொண்டே இருக்கலாம்! அவ்வளவு களை, அழகு, கம்பீரம். அகிலாண்டேசுவரி மிக உக்ரமான அம்பாள் என்றே கூறுவார்கள். நடு இரவில், சலங்கை ஒலி 'ஜல் ஜல்' என ஒலிக்க, அவள் கோவில் பிரகாரங்களை வலம் வருவதாக ஐதீகம்; அப்போது அருகாமையில் இருக்கும் அக்ரஹாரத்து மக்கள் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்தால், அம்பாள் உக்ரம் தாங்காமல் அப்படியே பொசுங்கி சாம்பலாக போய்விட்டதாகவும் இன்னமும் கூறுகின்றனர்!

இதை வைத்து, அம்பாள் கருணையில்லாதவளா என்று பலர் கேட்கலாம். கீதையில் அர்ஜூனனுக்கு விச்வரூப தரிசனம் கண்ணன் காண்பித்த போது, அது வரையில் அதை காணத் துடித்துக் கொண்டிருந்த பார்த்தன், அந்த ரூபத்தின் தேஜசும், உக்ரமும் காண சகிக்காமல், மறுபடியும் மனித உருவத்தை கொள்ள வேண்டி கண்ணனை மன்றாடவில்லையா? அதே போல் தான், அகிலாண்டேசுவரியின் உக்ரமும் அசக்தர்களான மனிதர்களை தாக்கியது. என்றுமே உண்மையைக் எதிர்கொள்ள தெம்பு ஜாஸ்தி வேண்டும். ஆதி சங்கரர், அப்பாவ்¢ ஜனங்களை காப்பதற்காக, அவள் உக்ரத்தை தணிக்க இறைவ்¢க்கு தாடகம் செய்து அணிவித்தார். இன்றும், அகிலாண்டேசுவரியின் அழகிய காதுகளில் அதைக் காணலாம். மேலும், அவளை குளிர்விக்க அவளது பெரிய பிள்ளையான வினாயகரை அவள் சந்நிதானத்துக்கு முன்பாக ப்ரதிஷ்டை செய்தார். தன் செல்லப் பிள்ளையை பார்த்துக் கொண்டே அவளும், சிரிப்புடன் பக்தர்களுக்கு, இன்றும் அருள் புரிகிறாள்.

புதன், ஜூன் 15, 2005

காவியங்களும் கற்பனையும்

மேற்கத்திய கலாசாரங்கள் நம் நாட்டை மட்டம் தட்டும் ஒரு விஷயம் என்னவென்றால் நமதுள்களும் நம்பும்படியாக இல்லாமல் மிக exaggerated-ஆக இருக்கின்றன. அதனால் நமது mythology வெறும் கட்டுக்கதை என்றும், நாம் மூட நம்பிக்கைக்காரர்கள், நமக்கு civilization தேவை என்றும் பல மேலைநாட்டவர்கள் முடிவு செய்து விடுகின்றனர். இந்த நினைப்பு தான்
ஆங்கிலேயர்களை 400 ஆண்டுகளுக்கு மேல் ஆட்சி செய்ய வைத்தது. அவர்கள் அப்படி நினைத்தது போதாது என்று, இந்தியர்களுக்கும் ஒரு inferiority complex கொடுத்துவிட்டு சென்றுவிட்டனர்! History is written by conquerors என்பது மிக உண்மை!

பொதுவாக, பல கடவுள்களை பூஜிக்கும் கலாசாரங்களை heathen civilizations என்று கூறுவர். அந்த கால யவனர்களும், ரோமர்களும் heathens என்று கூறப்படுவர். இங்கிலாந்தில், Angles, Saxons, Jutes என்ற tribes-ஆல் overrun ஆகும்முன், இருந்தவர்கள் 'celts'. இவர்களும்இயற்கையை கடவுளாக நினைத்தவர்கள். ஒரு Pantheon of Gods பூஜித்தவர்கள் தான் (ரோமில்இன்னமும் Pantheon என்ற மிக ·பேமஸ் சின்னம் இருக்கிறது). இவர்களுக்கும் `heathens என்று பட்டம் சூட்டி, புதிதாக வந்த படைகள் இவர்களை துரத்தி அடித்துவிட்டார்கள். இவர்கள் Wales மற்றும் Scotland மலை பகுதிகளில் சென்று ஒளிந்தனர். அவர்கள் கலாசாரம் அப்படியே mainstream- ல் assimilate ஆகிவிட்டது.

காலப் போக்கில் heathen என்கிற வார்த்தையே மிக derogatory ஆக மாறிவிட்டது. மிக சமீபத்தில் உருவான இரண்டு பெரிய மதங்கள், கிறித்துவமும், இஸ்லாமும் monotheistic மதங்கள். மிக வேகமாக பரவிய மதங்கள். அவ்வளவாக rituals-ல் பிடிப்பில்லாத மதங்கள். Due to a quirk of fate and history, இந்த இரண்டு மதத்தை சார்ந்த நாட்டவர்தான் பெரிய empires ஸ்தாபித்தார்கள். இவர்கள் கொள்கையை சாராதவர்கள், மற்ற புரியாத கலாசாரங்கள் எல்லாம் காட்டுமிராண்டிகள்,ஹீத்தன்ஸ் ஆகிவிட்டனர், நாம் உட்பட!

உண்மையில், கதைகளும், காவியங்களும் மிக ஆழமானவை. அந்த அந்த காலகட்டத்தில், அந்த அந்த மக்களுக்கும், சூழ்நிலைக்கும் ஏற்றாற்போல் உருவானவை தான் கலாசாரங்கள். ஆனால்எதையுமே நாம் literal-ஆக எடுத்து கொள்ள கூடாது, நம் கதைகள் உட்பட. நம் முன்னோர்கள், சில கருத்துக்களை எடுத்து சொல்வதற்காக, பல layers-ல் ஒரு விஷயத்தை சொல்வார்கள். படிக்கிறவன் எந்த லெவலில் இருந்தாலும், கதை அப்பீலிங்காக இருக்கும். மகாபாரதத்தில்திரொளபதிக்கு ஐந்து கணவர்கள். அதை literal-ஆக எடுத்து கொள்ளலாம். அல்லது பார்த்தல், கேட்டல், மொழிதல், ஸ்பரிச உணர்தல், நுகர்தல் ஆகிய ஐம்புலங்களும், மனசுக்கு அடங்கி, ஒற்றுமையாக செயல்பட்டால், வெற்றி என்றும் நம்மை பற்றியிருக்கும் என்று philosophical-ஆக எடுத்து கொள்ளலாம்.

அதே போல் தான் பிள்ளையார் சுவாமியும். மேலைநாட்டவர்கள், பிள்ளையார் படங்களை பார்த்து, "என்னடா, இவர்கள் ஏதோ நான்கு கையும், யானை மூஞ்சியும், மனித உடலுமாக எதையோ ஒரு mutant உருவத்தை போய் கடவுளாக வழிபடுகிறார்களே!" என்று நினைப்பார்கள். ஆனால் அதே mutants பற்றி X-men I, X-men II, Cat Woman, Batman என்றெல்லாம் இவர்களே படம் எடுத்தால்
அது மட்டும் எப்படியோ 'uncivilized' கிடையாது. அதை போய் பார்ப்பார்கள். அந்த characters எல்லாம் வேறு மிக ·பேவரிட்ஸாக போய்விடும்! பிள்ளையாரின் உடலமைப்புக்கு பல கதைகள் உண்டு. அவர் முகமும், தும்பிக்கையும் 'ஓம்' என்ற ப்ரணவ மந்திர தத்துவத்தை எடுத்து சொல்வதாக இருக்கும். அவர், ஞானத்துக்கு எல்லாம் ஆதாரமான பிரணவ மந்திரமே உருவான குழந்தை சுவாமி
என்பதைக் கூறத்தான் அந்த உடல்-முக வடிவம்!

உலகின் பல அதிசயங்களில், பண்டைய கிரேக்கர், ரோமர், எகிப்தர்களின் படைப்புகள் தான் இன்னமும் புகழ் பெற்றவை. அவர்கள் அவ்வளவு uncivilized என்றால் அவ்வளவு உயர்ந்த படைப்புகள் உருவாக்குதல் சாத்தியமோ?! Posterity will decide.

சனி, ஜூன் 11, 2005

ஆனைக்கா அண்ணல் (திருவானைக்காவல்-1)

திருச்சியிலிருந்து பெரம்பலூர் செல்கையில் ஒரு வேடிக்கையான சம்பவம். பேருந்து ஸ்ரீரங்கமும் திருவானைக்காவலும் தாண்டிதான் பெரம்பலூர் செல்லும். ஒரு வயோதிகர் என்னுடன் ஸ்ரீரங்கத்தில் ஏறினார். நெற்றியில் பளிச்சென்று ஸ்ரீசூர்ணம் (நாமம்) தரித்திருந்தார். காதில் கடுக்கன், குடுமி என்று மிக கம்பீரமாக இருந்தார். திருவானைக்காவலை பேருந்து கடந்தபோது ஜம்புகேசுவரர்-அகிலாண்டேசுவரி ஆலய கோபுரம் தென்பட்டது. உடனே "ரங்கா ரங்கா" என்று கன்னத்தில் போட்டுக்கொண்டு முகத்தை சுளித்து, வேறு பக்கம் திரும்பிவிட்டார்! அதாவது வீர வைஷ்ணவரான அவர் சிவன் கோவில் கோபுரத்தை பார்த்தால் கூட பாவமாம்! "ஹரியும் சிவனும் ஒண்ணு, அறியாதவன் வாயில மண்ணு" என்று அறியாதவர்கள் இன்னமும் இருக்கிறார்கள்! வைணவர்கள் எல்லோரும் இப்படித்தான் என்று நான் சொல்லவில்லை. சைவர்கள் மிக tolerant என்றும் கூற வரவில்லை. Belief என்ற விஷயம் வருகிற போது, என்னதான் படித்திருந்தாலும், அனுபவஸ்தராயிருந்தாலும் மனிதர்கள் எப்படி மாறுகின்றனர்! ஆனால் எல்லா தெய்வமும் ஒரே பரம்பொருள் தான் என்று அறியாத வாழ்வும், படிப்பும் எதற்கு பிரயோஜனம்?! இது சிவ-விஷ்ணு அபேதத்துக்க்கு மட்டும் கூறவில்லை. ஜீஸஸ், அல்லா அனைத்து தெய்வங்களுக்கும், மதத்தினருக்கும் common.

திருவானைக்காவல் ஸ்ரீரங்கத்துக்கு 1 கி.மி தூரத்தில் உள்ளது. ஸ்ரீரங்கத்தின் காந்தி ரோடு வழியாக சென்றால் நேரே திருவானைக்காவல் சென்று விடலாம். இவ்வளவு அருகாமையில் இருந்தாலும், கோவில் styles, சுற்று சூழல், வழிபாட்டு கலாசாரம் எல்லாமே மிக வித்தியாசம்! ஸ்ரீரங்கத்தில் துளசி வாசனை தூக்கும் என்றால், திருவானைக்கா நுழையும் போதே, ரோஜா புஷ்பமாலை வாசனையும், பன்னீர் மணமும், கற்பூற வாசனையும், சுத்தமான திருநீர் மணமும் ஆளை தூக்கியடிக்கும். உள்ளே நுழையும் போதே "சிவ சிவ" மந்திரம் வரவேற்கும். கோவிலே அமைதியாக, ரம்மியமாக இருக்கும். ஸ்ரீரங்கத்தின் கூட்டத்தில் கால்வாசி கூட இருக்காது. இறைவனை நிம்மதியாக தரிசிக்கலாம்.

மிக பிரம்மாண்டமான கோவில். அகன்ற, சிற்பம் நிறைந்த மண்டபங்களும், விசலாமான பிரகாரங்களுமாக பக்தர்களை ஜம்புகேசுவரர் வரவேற்பார். ஒரு முறை வேதங்களை இறைவன், பார்வதிக்கு விளக்க ஆரம்பித்தார். பல யுகங்கள் ஆகியும், இறைவன் தன் பாட்டுக்கு, வேத சாரத்தை கூறிக் கொண்டே போக, தேவி கண்ணயர்ந்து விட்டாளாம். அதை கண்டு சினம் கொண்ட சிவ பெருமான், பார்வதியை சபித்து பூமிக்கு அனுப்பிவிட்டார். காவிரி கரைகளில் தான் ஞானம் வளரும் என்று நினைத்த பார்வதியன்னை, திருச்சியில் வந்து கடுந்தவம் செய்தாள். இறைவனும் ஞான ஸ்வரூபியான அம்பாளை மன்னித்து தன்னுடன் சேர்த்து கொண்டார். நீராலேயே லிங்கம் செய்து இறைவனை வழிபட்டதால், அது அப்பு லிங்கம் என்று அழைக்கப்படும். வைணவத்தில் எப்படி 108 திவ்யதேசங்களோ, அப்படி சைவத்தில் பஞ்சபூத தலங்கள். அதில் திருவானைக்கா அப்பு (water) ஸ்தலம்.

ஜம்புகேசுவரர் கர்ப்பக்ரஹத்துக்குள், அடியில் காவிரி ஓடிக்கொண்டிருப்பாள். எப்பொழுதும் நீரிலேயே நனைந்து கொண்டிருப்பார் ஜம்புகேசுவரர். ஜம்புகேசுவரரை 9 ஜன்னல்கள் வழியாக பார்க்க வேண்டும். அப்படி பார்த்தால் 9 புண்ணிய தீர்த்தங்களில் நீராடிய பலன் கிடைப்பதாக ஐதீகம். நாகலிங்க மலர் வாசமும், வில்வமும், மல்லிகை மணமும் சூழும் அழகான சந்நிதானம்...சாயங்கால வேளைகளில், சிலர் வந்து தேவாரமும், திருவாசகமும், திருப்புகழும் அருமையாக ராகத்துடன் பாடிக்கொண்டிருப்பார்கள்.

"தோடுடைய செவியன் விடமுண்ட கண்டன்
மாசில் நல் வீணை தடவி..."

பாடலை ஒருவர் பாடிக்கேட்டு உடல் சிலிர்த்திருக்கிறேன்!

எனக்கு திருவாசகமும், தேவாரமும் ராகத்துடன் கற்று கொள்ள வேண்டும் என்று ஆசை. இளையராஜாவின் திருவாசகம் சிம்பொனி சீக்கிரம் கேட்க ஆவல்...

வியாழன், ஜூன் 09, 2005

வினயம்...

நான் ஐந்தாவது படிக்கும் போது, எதோ ஒரு பேச்சுப் போட்டியில் முதல் பரிசு வாங்கினேன். அப்போது எனக்கு தலை கால் புரியவில்லை. என்னமோ உலகத்திலேயே நான் தான் பெரிய orator-ன்ற நினைப்பில் ஒரு ரெண்டு நாள் சுத்தினேன். அது அறியா வயசு..:) ரெண்டு நாளைக்கப்பறம், ஒரு inter-school போட்டிக்கு போனேன். அன்னிக்கு தான் தெரிஞ்சுது நான் ஒண்ணுமே இல்லைனு. மதுரைக்கு போன புதுசுல, சென்னை-ல இருந்த எனக்கு அங்க எல்லாருமே வித்தியாசமா தெரிஞ்சாங்க. கொஞ்சம் கூட fashion sense இல்லை-னு மனசுக்குள்ள திட்டிக்கிட்டு இருந்தேன். பெரிய city-girl, எனக்கு தான் எல்லாம் தெரியும்-னு நினைச்சேன். ஆண்டவன் வெச்சான் ஒரு குட்டு! கொஞ்ச நாளில் தெரிஞ்சது, அங்க இருக்கறவங்க எவ்வளவு talented-னு! ஒரு மிக சாதாரணமான கிராமத்து பெண், கணிதத்தில் விட்டு கலக்கி எடுத்து விட்டாள். எனக்கு, இன்னிக்கு கூட, அவள் வேகத்துக்கு accurate-ஆக கணக்கு போட வராது. Calculus-ல் பலர் திணறிக் கொண்டிருக்க, அவள் மனக்கணக்காலேயே பல பாடங்களை போட்டுவிடுவாள்! அன்று வாயடைத்தவள் தான் நான். யாரையும் குறைவாக எடை போடக் கூடாது என்பதில், இளமையிலேயே நான் கற்று கொண்ட பாடம்.

Canada-வில் 11th படித்துக் கொண்டிருந்த நேரம். அங்கு சீனர்கள் ஜாஸ்தி. அப்போது Hong Kong சைனாவிடம் ஒப்படைக்க போகும் நேரம். அதனால் பலர் அங்கிருந்து immigrate ஆகி கனடா வந்தனர். சீனர்களுக்கு ஆங்கிலம் சரியாக வராது. அவர்கள் பேசுவதை புரிந்து கொள்ளவே பல மணி நேரம் ஆகும். எனக்கு மனதுக்குள் ஒரு ஏளனம். ஆங்கிலமே பேச தெரியாமல், இவர்கள் எல்லாம் என்ன செய்ய போகிறார்கள் என்று நினைத்தேன். நான் செய்த மிக பெரிய mistakes of judgement-ல் அதுவும் ஒன்று.

English-to-Chinese dictionary எடுத்துக் கொண்டு வருவார்கள் சீன மாணவர்கள். வகுப்பில், ஆசிரியர் பேசுவது அவர்களுக்கு மிக வேகமாக இருக்கும். புரியாது. அதனால், அதை காசெட்டில் record செய்து கொள்வார்கள். வீட்டில் சென்று, அதைக் கேட்டு, English-to-Chinese dictionary கொண்டு, வார்த்தைக்கு வார்த்தை translate செய்து, புரிந்து கொண்டு, பின்பு வீட்டு பாடம் செய்வார்கள்! அசந்து போனேன் நான். Hats off to their perseverance and patience.

மிக கூர்மையான மூளை கொண்டவர்கள். என் physics வகுப்பில், ஆங்கிலமே தெரியாத ஒரு சீனன் இருந்தான். அவன் பெயர் Lemus Chang. மிக அமைதியானவன். ஆங்கிலம் தெரியாததால் பேச மாட்டான் என நினைக்கிறேன். மிக கூச்ச சுபாவி. ஆனால் physics-ல் அவனிடம் பிச்சை வாங்க வேண்டும். எத்தனை கடினமான கணக்காக இருந்தாலும், எளிதில் elegant-ஆக முடித்து விடுவான். எங்கள் ஆசிரியரே அவனிடம் நிறைய பாடங்கள் கற்றுக் கொண்டார்! பின்னர் அவன் Governor General's Award for Outstanding Student வாங்கினான். University of British Columbia-வில் அவனுக்கு மிக உயர்ந்த நிதி உதவியுடன் அட்மிஷன் கிடைத்தது. ஆனாலும் மிக அடக்கமானவன். எனக்கு நிறைய நாட்கள் உதவியிருக்கிறான். மிக பொறுமையாக, ஆங்கிலம் தெரியாவிட்டாலும், எனக்கு பாடங்களை புரிய வைப்பான். மிக அருமையாக வயோலின் வாசிப்பான்! எங்கள் valediction-ல் அவனுக்கு நாங்கள் ஆடிட்டோரியத்தில் standing ovation குடுத்திருக்கிறோம்.

இந்த மாதிரி பலர், என்னை பல விதங்களில் அசத்தியிருக்கிறார்கள், often from least expected quarters. அப்போது கற்றுக் கொண்ட பாடம்: Never underestimate anyone. பல திறமைசாலிகளை சந்தித்திருக்கிறேன். சிலர் கலைகளில் சிறந்தவர்கள். சிலர் படிப்பில் சிறந்தவர்கள். சிலர் போன்ற தங்கமான குணம் பார்க்கவே முடியாது! ஆனால் என்னை அவர்களிடம் கவர்ந்தது, திறமை அல்ல. அவர்களுடைய அடக்கமும், வினயமும் தான். "நான் தான் பெரியவன்", "என்னை விட யாருமே இதை நன்றாக செய்ய முடியாது" என்று நினைப்பவர்கள் தான் இந்த உலகத்தில் நிறைய. "இவனிடம் போய் இத்தனை talent-ஆ" என்று சொல்வது என்னை பொறுத்த வரையில் ஒரு பெரிய அவமதிப்பு. ஒரு மனிதனிடம் இருக்க கூடாத ஒன்று இருந்துவிட்டது போல் கூறுகின்ற statement அது.

திங்கள், மே 23, 2005

காவிரியும் கம்பனும் (திருவரங்கம்-3)

"கன்னியிழந்தனள், கங்கை திறம்பினள்
காவிரி நெறியிழந்தாள் என்றுரை கேட்கலாமோ
உலகுடைய தாயே! நீ கரைகடக்கலாகாது காண்!
"
-கம்பன்

(Rough translation: Even the sacred, holy Ganga lost her sense of propriety and purity when she altered course and rushed headlong into her lover, Samudra Raja's arms. Lest the world might say that you lost your womanhood, O Kaveri! Please don't cross your banks.)

(இந்த பாடல், நான் இணையதளத்தில் தேடியும் கிடைக்கவில்லை. ஆகையால், என் நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்! :))

ஒரு முறை காவிரி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததாம். என்னதான் இப்போது லிட்டர் கணக்கில் தான் காவிரியில் தண்ணீர் ஓடி கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில் அப்படி வெள்ளம் வந்தது என்று நம்புவோமே..:) வெள்ளம் ஊரையே விழுங்கி விடும் என்று அனைவரும் பயந்து கொண்டிருந்த போது, கம்பன் ஊருக்கு வந்தானாம்.

உலகத்திலேயே மிக புனிதமான நதியென்று கருதப்படும் கங்கை கூட, காதல் வயப்பட்டு, தன் காதலனான சமுத்திர ராஜனை கண்டவுடன் பாதை மாறி, கடமை மறந்து, கரை கடந்து, அவனோடு சென்று கலந்து விட்டாள். உலகம் போற்றும் காவிரியே! படி தாண்டாப் பத்தினியான ந,£ உன் பெண்மைக்கு இழக்கு நேரும்படியாக, இப்படி கரை கடக்கலாகாது!

என்று காவிரி கரையில் நின்று இந்த பாடலை பாடினானாம்.

கரைகளை உடைத்துக் கொண்டு வெளியே பாய துடித்துக் கொண்டிருந்த காவேரியானவள், இந்த பாடலுக்கு மயங்கி, அப்படியே சாந்த ஸ்வரூபியாக போய்விட்டாளாம்! இந்த பாடல்தான் கம்பனுக்கு "கவி சக்கரவர்த்தி" என்ற பட்டத்தை வாங்கிக் கொடுத்ததாக கேள்வி.

இன்றும் கம்பன் நினைவாக, ரங்கநாயகி தாயார் சந்நிதிக்கு நேராக, கம்பன் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபம் இருக்கிறது. கிழக்கு வாசல், வெள்ளை கோபுரத்திற்கு மிக அருகாமை. சந்தியா வேளையில், மிக ரம்மியமான சூழலாக இருக்கும்! அரங்கனிடம் கூட்டதை அலைமோத விட்டு, தாமரை மலர்கள் வாசத்தின் நடுவில், பெண்களும், வயதானவர்களும் நிதானமாக மண்டபத்தில் அரட்டை அடிக்க, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க ரங்கநாச்சியார் அமைதியாக சிரித்துக் கொண்டிருப்பாள். இன்று சிறுவர்களும், மனிதர்களும் casual-ஆக, அன்றாட வாழ்க்கை கதைகள் பேசும் அதே இடத்தில் தான், ஒரு காலத்தில் கம்பனுக்கு இறைவன் முதலடி எடுத்துக் கொடுக்க, அவன் ராமயணத்தை அரங்கேற்றினான்!

கம்பன் பாடலில் புகழ் பெற்ற பொன்னி திருச்சியில் தான் "அகண்ட" காவிரியாக காட்சியளிப்பாள். தஞ்சை, கும்பகோணம் (delta regions) போன்ற இடங்களில், தன் கணவனை (கடல்) சேறுவதற்காக, மணப்பெண்ணை போல், அடக்க ஒடுக்கமாக குறுகிவிடுவாள். திருச்சியில், இளம் பெண்ணை போல், குதூகலமாக நன்று அகன்று, பரந்து இருப்பாள். திருவரங்கம் வந்தவுடன், அரங்கனுக்கு மாலை இடுவது போல், இரண்டாக (காவிரி, கொள்ளிடம்) பிரிந்து ஸ்ரீரங்கத்தை அணைத்திருப்பாள். காவிரி ரங்கனை அணைப்பதால், திருமாலுக்கு அவளும் ஒரு மனைவியாவாள். நான் இப்படி dry-ஆகக் கூறுவதை தொண்டரடிப்பொடியாழ்வார் மிக அழகாக ஒரு பாசுரத்தில் வர்ணித்திருப்பார்:


"பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பனை பள்ளி கொண்ட
மாயனார் திருநன்மார்வும் மரகதவுருவும் தோளும்
தூய தாமரைகண்களும் துவரிதபவளவாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே"



காவிரி பற்றி எழுதும் போது, கல்கியின் "பொன்னியின் செல்வன்" பற்றிக் கூறாமல் இருக்க முடியவில்லை! என்னை மிகவும் கவர்ந்த சரித்திர கதை. காவிரிக்கு பொன்னி என்றின்னொரு பெயர் உண்டு. தமிழகத்தின் "rice bowl" என்று கருதப்படும் தஞ்சை மாவட்டத்தில் பாய்ந்து, செல்வமும் செழிப்பும் உண்டாக்குவதால், "பொன்னி" என்று அழைக்கிறார்கள் என்பது என் அபிப்பிராயம். அந்த காலத்தில் சோழ நாடு செழிப்புடன் இருந்ததற்கு முதற்காரணம்: காவிரி (நம்ம பல்லவ நாடு (சென்னை,காஞ்சி etc..), இப்போ எப்படி இருக்கோ, அப்பவும் அப்படி தான். தண்ணி கொஞ்சம் கம்மி தான்...LOL). சோழ நாட்டை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றவன் ராஜ ராஜ சோழன். இயற்பெயர் அருண்மொழி வர்மன் ஆயினும், காவிரியோடு identify பண்ணும் வகையில், அவனுக்கு பொன்னியின் செல்வன் என்றே கல்கி சூட்டிவிட்டார்! பொன்னியின் செல்வனில் வருவது போல், இன்று கூட, ஆடிப் பெருக்கு (பெருக்கு இருக்கிறதோ இல்லையோ!) திருச்சியில் மிக விமரிசையாக நடைபெறும்!

இந்த அழகான காவிரி, மிக ஆழமானவள் கூட! அம்மா மண்டப படித்துரையில், ஏகப்பட்ட மக்கள் இறந்திருக்கிறார்கள். கம்பிகளை தாண்டி, நீந்த சென்று, புதை மணலில் மாட்டி கொள்வார்கள். காவிரியின் புதைமணல் மிக treacherous. பிடித்தால் உடனே மரணம் தான்! அரசாங்கமும், தேவஸ்தானமும் பல precautions எடுத்தும், இன்றும் பல பேர் மடிகிறார்கள். வருத்த பட வேண்டிய விஷயம்.

ஞாயிறு, மே 22, 2005

அழகிய மணவாளன் (திருவரங்கம்-2 )

ஸ்ரீரங்கம் பற்றி எழுத ஒரு சில வார்த்தைகள் போதாது! இது என்றும் ஒரு தொடர்கதை. எனவே, இதோ என் அடுத்த பதிவு...


ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு முறை ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றிருந்தோம். மதுரையில் இருக்கும் போது முதன் முறை செல்ல நேர்ந்தது. பின்பு, மதுரை சென்றால் அங்கு செல்வது பழக்கம் ஆகிவிட்டது. ஆண்டாளுக்கு நில மாலை சாத்துவதற்காக சந்நதியில் இருந்த பட்டருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
"எந்த ஊர்லேர்ந்து வரேள்?"- பட்டர்.
" நாங்க திருச்சிலேர்ந்து வரோம்."- தந்தை
"திருச்சிலதான் என் மச்சினன் இருக்கான். நீங்க எந்த இடம்?"
"நாங்க ஸ்ரீரங்கம், மாமா..."
பட்டர் முகத்தில் ஒரே சந்தோஷம்!
"அப்படியா! இன்னிக்கு ஆண்டாளுக்கு விசேஷம். நல்ல நாளன்னிக்கு தான் வந்திருக்கேள்..நீங்க எல்லாரும் எங்களுக்கு மாப்பிள்ளை ஆத்துக்காரா! நன்னா சேவை பண்ணி வெக்கறேன்...வடபத்ர சாயி சன்னிதானத்துக்கு நானே வரேன்..அப்பறம், மாப்பிள்ளை கோச்சுண்டுடக் கூடாதே..." (பலத்த சிரிப்பு)

அன்று மனதுக்கு திருப்தியாக நல்ல தரிசனம் செய்து வைத்தார் அந்த பட்டர். திருவரங்கத்தின் ஸ்ரீரங்கநாதரை தான் ஆண்டாள் மணந்தாள். ஆகையால், நாங்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ஆகிவிட்டோம்..! என்னவோ, அதைக் கேட்டபோது ஒரு sense of belonging,ஒரு சின்ன அல்ப பூரிப்பு, பட்டர் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து பெருமை...அந்த அழகிய மணவாளனின் மாப்பிள்ளை கோஷ்டியில் இருப்பது என்றால் சும்மாவா..:)

ஸ்ரீரங்கத்தில் எப்போதும் திருவிழாதான். பெருமாள் எப்போதும் busy. எனக்கு தெரிந்து ஸ்ரீரங்கம் சற்று அமைதியாய் இருப்பது புரட்டாசி மாச வாக்கில் தான். ஐப்பசி மாசம், சபரிமலை செல்லும் கூட்டம் ஸ்ரீரங்கம் வந்துவிட்டு தான் போகும். என் கருத்துபடி, சிலர் மட்டும் தான், சிரத்தையாக, ஐயப்பனை வேண்டிக்கொண்டு, மலைக்கு மாலை போடுகிறார்கள். பலர் அதை ஒரு annual vacation time with the boys மாதிரி தான் நடத்துகிறார்கள் (கர்ம சிரத்தையாக மாலை போட்டுக்கொண்டு, பக்தியுடன் சாஸ்தாவை பார்க்க செல்லும் பக்தர்களுக்கு எனது sincere apologies. அவமதிப்பது எனது நோக்கம் இல்லை!).

ஸ்ரீரங்கத்துக்குள் செல்வது ஒரே ஒரு பிரதான சாலை மட்டும் தான். அம்மா மண்டபம் ரோடு தான் artery. இப்போது திருவானைக்கா வழியாக ஒரு சாலை திறந்திருக்கிறார்கள். ஆனாலும், அம்மா மண்டபம் ரோடு தான் main. "அம்மா மண்டபம்" என்பது காவிரி படித்துரை. தெற்கு வாசல் ராஜகோபுரத்திற்கு நேர் கோட்டில் இருக்கும். அரங்கனுக்கு திருமஞ்சனத்துக்கு தினம், யானை இங்கிருந்து தான் தண்ணீர் எடுத்துக் கொண்டு செல்லும். எனவே, இந்த சாலையில் தான் எல்லா tourist பேருந்துகளும் நிற்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரொம்பி வழியும்! வைகுண்ட ஏகாதசி நேரம் நெருங்கி விட்டால், கேட்கவே வேண்டாம்! அந்த முழு சாலையுமே, தின்பண்ட கடைகள், பலூன், காத்தாடி விற்பவற்கள், நீர் மோர் கடைகள், பெண்களுக்கு காதணி, பாசி மாலைகள் விற்பவர்கள் என்று அல்லோல கல்லோல பட்டுக் கொண்டு இருக்கும்! திருவிழா பிச்சை கேட்க வேண்டும்!

ஸ்ரீரங்கம் வாசிகள், அரங்கனை பார்க்க இந்த tourist கும்பல்களுடன் செல்ல மாட்டார்கள். 1 வினாடி கூட பெருமாளை பார்க்க முடியாது! "ஜரகண்டி" என்று தள்ளி விட்டு விடுவார்கள். மதியம் 3.00 மணிக்கு நடை திறந்தவுடன் பார்க்கப் போனால், நிம்மதியாக தரிசிக்கலாம். திருச்சியின் கொடூர மதிய வெய்யிலை கண்டு பயந்து, (உண்ட மயக்கத்தில் :))கூட்டங்கள் நிழலை தேடி ஒதுங்கிவிடும். இல்லையென்றால், இரவு 8.30 மணிவாக்கில் சென்றாலும், நல்ல தரிசனம் கிடைக்கும். நான், சனிக்கிழமைகளில் மதிய நேரத்தில் செல்வேன். பெருமாள் சந்நிதி பட்டர்கள் எனக்கு நல்ல தோஸ்த். அதனால் நல்ல தரிசனமும், மலர் பிரசாதமும் எனக்கு நிச்சயம்..:) "என்ன மாமா, குழந்தை நன்னா படிக்கறாளா? நீங்க computer வாங்கணும்-னு சொன்னேளே, வாங்கிட்டேளா?" என்று எதாவது ஊர் கதை பேசிக்கொண்டே, அரங்கனை நன்றாக 10 நிமிடம் சேவித்து விட்டு வருவேன்..:)

என்னதான் கும்பலாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அரங்கன் சந்நிதி சென்றால் மனதில் எனக்கு நிம்மதி பரவும். அந்த நிம்மதிக்கு இணை இந்த U.S.-ல் இருந்து எத்தனை படித்தாலும், பணம் சம்பாதித்தாலும் வராது. அந்த அரங்கன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்த பிறகு ரொம்ப பலமான conviction. இன்னமும் இருக்கிறது...

சனி, மே 14, 2005

திருவரங்கம் - 1

நினைவுகள் மனதின் மூலைகளில் உறங்கும் போது, புகை படிந்த கண்ணாடியின் பிரதிபலிப்பைப் போல் மங்கலாகவே தெரிகின்றன. ஆனால் பல வருட நினைவுகளை வார்த்தைகளில் அசை போடும் போது, மங்கலான உருவங்கள், இடங்கள், சம்பவங்கள் நுணுக்கமான விவரங்களோடு துல்லியமடையும் மாயமென்னவோ..!

திருவரங்கம். 108 வைணவ திவ்ய தேசங்களில் முதலாவது திவ்ய தேசம். காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்த அழகிய தீவு. ஷேக்ஸ்பியர் "All the world's a stage" என்று கூறுவதற்கு உவமை போல், அந்த அரங்கநாதன் வாழ்க்கை பொம்மலாட்டத்தை நடத்தும் திரு-அரங்கம்!

தோப்புகளும், தோட்டங்களும் நிறைந்த பசுமையான இடமாக இருந்தது (இப்போதும் சிறிது இருக்கிறது!). அடுக்கு மாடி கட்டிடங்களும், shopping complexes-மாக மாறிக் கொண்டிருக்கிறது. அதை தவறு கூறுவதற்கில்லை. மனிதர்கள் கூட்டம் சேற, சேற நகரங்கள் விரிவடைவது தானே முறை? ஆனாலும் சில நேரங்கள், நான் அறிந்த ஸ்ரீரங்கம், என் கண் முன்னாலேயே இப்படி மாறிப் போவது சற்று வருத்தமாக இருக்கும்.

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், திருச்சிக்குள் நுழையும் போது, தெற்கு வாசல் ராஜகோபுரம் ஜகஜோதியாய் பல மைல் தூரத்திலிருந்தே தெரியும். காலை நேரத்தில், காவிரி பாலத்தை ரயில் தாண்டும் போது, ஜில் என்று காற்று முகத்தை தழுவிச் செல்லும். திருச்சியில் எனக்கு பிடித்தது பேருந்து போக்குவரத்து! காலை 4.30 மணிக்கு, ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பும் வண்டிகளில் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் கூட பளிச்சென்று திருநீர் அணிந்து வரவேற்பார்கள்! பின்னணியில் M.S. சுப்ரபாதம் பாடி அரங்கனை எழுப்ப, டீக்கடைகளில் விறுவிறுப்பாக வேலை நடக்கும். வயதானவர்கள் (பல பேர் கோவிலில் regulars), விச்வரூப தரிசனம் பார்க்க ராஜகோபுரம் நோக்கி சென்று கொண்டிருப்பார்கள். ஆக மொத்தம், ஸ்ரீரங்கம், காலை 4.30 மணிக்கே ஜேஜே என்று இருக்கும்!

இம்முறை திருவரங்கம் சென்ற போதும், அந்த காலை நேர வாழ்க்கை மாறாமல் அப்படியே இருந்தது மனதுக்கு மிக சந்தோஷம்..:)

சனி, ஏப்ரல் 30, 2005

சில எண்ணங்கள்...

வெகு நாட்களுக்கு பிறகு மீண்டும் தமிழில் எழுதுகிறேன். தமிழ்ல் எழுத ஆசைப்படும் போது, ஜில்லென்று பொதிகை மலை காற்று போல் , சிந்தனைகள் தமிழிலேயே ஓடுவது மிக பிடித்திருக்கிறது....

தமிழ்நாட்டுக்கு நான் மூன்றாம் வகுப்பு படிக்கும் போது தான் முதலில் வந்தேன். சென்னையில் பிற்ந்திருந்தாலும், அப்பாவின் வேலை காரணத்தால், ஒரிஸ்ஸா-விலேயே தான் வளர்ந்தேன். தமிழை விட ஒரியா தான் நன்றாக தெரியும். தமிழில் யாராவது சற்று வேகமாக பேசினால் கூட எனக்கு புரியாது. சென்னையில் பள்ளிக்கூடத்தில் முதல் தரம் தமிழ் பாடத்தில் 0/100 வாங்கியது நினைவிருக்கிறது.....:) என் classmates எனக்கு தமிழ் சரியாக வராததால், எதிலும் சேர்த்து கொள்ளாமல் விட்ட போது அப்பாவிடம் சென்று அழுதது; அப்பாவும் அம்மாவும் "தமிழ் கற்று கொண்டால் போச்சு!" என்று ஆறுதல் அளித்தது; அம்மா பல நாட்கள் என்னுடன் அமர்ந்து உயிர் எழுத்தும், மெய்யெழுத்தும் சொல்லி கொடுத்தது; Doordarshan-இல் எப்போதோ தமிழ் நிகழ்ச்சிகள் வரும்போது, concentration-ஒடு அமர்ந்து, ஒவ்வொரு வார்த்தையும் கேட்டது, எழுத்துக் கூட்டி படித்தது; எனக்கு சரியாக புரிந்து விட்டால், சந்தோஷத்தில் அம்மாவை சென்று கட்டிக் கொண்டது! எல்லாம் பசுமையான நினைவுகள்.

பல வருடங்கள் ஓடிவிட்டன. இந்த இடைப்பட்ட காலத்தில், முத்தமிழ் சங்கம் வளர்த்து, அந்த முக்கண்ணன் திருவிளையாடல் புரிந்த பாண்டிய தலைநகரமாம் மதுரை மாநகரத்திலும் இருந்தாகிவிட்டது. மதுரை தமிழ் வாசம் என்றும் மணம் கமழும்! அதை கேட்கையில், என் அகம் மகிழும்!அதற்கு பின் திருவரங்கம். தென்கங்கையாம் காவிரியிலிருந்து 100 அடி தூரத்தில் வீடு. அரங்கன் கோவில் கூப்பிடு தூரம். அப்பாவின் தூண்டுதலாலும், சில நண்பர்களாலும், தமிழில் நிறைய படிக்க நேர்ந்தது! நான் வாழ்க்கையில் மிகவும் ரசித்த சம்பவங்கள் அங்கு நடந்ததாலோ, சுவாரஸ்யமான பல மனிதர்களை அங்கு சந்திக்க நேர்ந்ததாலோ அல்லது என் மனம் கவர்ந்த அரங்கன் அங்கு குடி கொண்டிருப்பதாலோ, சோழ சாம்ராஜ்யத்தின் பல அற்புதமான மன்னர்கள், அவர்கள் கலை, தர்மம், கதை, கோவில்களாலோ தெரியவில்லை நான் திருவரங்கத்தின் மேல் மோகம் கொண்டேன்...தமிழ் மீதும், காவிரி மீதும், தமிழ் பண்பாட்டின் மீதும், கலை, சிற்பம், சங்கீதம், எழுத்து, அனைத்தும் நிறைந்திருக்கும் தமிழ்நாட்டின் மேல் மோகம் கொண்டேன்.

இந்த இணையதளத்தில், அங்கு நான் சென்ற சில இடங்கள், என்னை கவர்ந்த சில ஊர்கள், கோவில்கள் பற்றி எழுத விரும்புகிறேன். என் தமிழ்ப் புலமை சொல்லிக் கொள்ளும் அளவுக்கு கிடையாது. அதனால் வாசகர்கள் பொருத்துக் கொள்ளவும்....:) இனி விரைவில் அடுத்த பதிவை எதிர்பார்க்கவும்..

ஞாயிறு, மார்ச் 27, 2005

மனதை கவர்ந்தது...

இந்த கவிதை ஒரு நண்பர் அனுப்பினார்...பிடித்திருந்தது...

சனி, மார்ச் 12, 2005

இனியவை....

இம்முறை திருவானைக்காவல் சென்ற போது, ஜம்புகேச்வரர் சன்னிதியில் உச்சிகால பூஜை நடந்து கொண்டிருந்தது. அப்போது ஒருவர் மிக அழகாக திருமுறை பாட ஆரம்பித்தார். என்னை கவர்ந்த, நான் முணுமுணுக்கும் பாடல்கள்....

"மாசில் வீணையும் மாலை மதியமும்
வீசு தென்றலும் வீங்கிள வேனிலும்
மூசு வண்டறை பொய்கையும் போன்றதே
ஈசன் எந்தை இணையடி நீழலே."

"சொற்றுணை வேதியன் சோதிவானவன்
பொற்றுணை திருந்தடி பொருந்தக்
கைத்தொழ கற்றூணைப் பூட்டியோர்
கடலிற்ப் பாய்ச்சினும் நற்றுணையாவது
நமச்சிவாயவே."

அரங்கனை காண செல்லும் போது நான் விரும்பும் பாடல்:

"கொண்டல் வண்ணனைக்
கோவலனாய் வெண்ணை உண்ட வாயன்
என்னுள்ளம் கவர்ந்தானை
அண்டர் கோணியரங்கன்
என்னமுதினைக் கண்டகண்கள்
மற்றொன்றினைக் காணாவே."

வியாழன், பிப்ரவரி 10, 2005

அரிது அரிது தமிழ் தெரிவது அரிது.....

உலகத்தில் நிறைய பேர் ஒரு விஷயம் தனக்கு தெரியும் என்று தான் ஜம்பமடித்து கொள்வார்கள். ஆனால் நம் தமிழர்கள் என்னவென்றால் தனக்கு தமிழ் தெரியாது (P.S. ஆனால் ஆங்கிலம் தெரியும்!!) என்று சொல்லிக்கொள்வதில் பெருமை அடைகிறார்கள்!
உலகில் பல பேருக்கு பல விஷயங்கள் பிடிக்கும் பிடிக்காமல் இருக்கும். சிலருக்கு சில ஊர்கள் பிடிக்கும். சில ஊர்கள் பிடிக்காது. சில நிறங்கள் பிடிக்கலாம். சிலது பிடிக்காமல் போகலாம். ஆனால் தன் தாய்மொழி என்று பேசுவதற்கு வெட்கும் அளவுக்கு தமிழ் என்ன பாவம் செய்ததோ?! எல்லா நாட்டினரும் தன் சொந்த பாஷையை தான் கொண்டாடி கொள்வார்கள். ஆங்கிலம் தெரிந்தும் பலர் பேச மறுக்கின்றனர். ஆனால் தமிழ் நாட்டிலேயே பிறந்து வளர்ந்து தமிழ் பேச, எழுத தெரியாது என்று சொல்பவர்களுக்கு excuses கிடையாது.
பல பேர்கள் என்னை எங்காவது பார்க்கும் போது, "தமிழ் எழுத கூட தெரியுமோ!" என்று கேட்கிறார்கள். அந்த அளவுக்கு தமிழ் எழுத தெரியும் என்பது அரிதாகிவிட்டது.
இதில் comedy என்னவென்றால், பல பேருக்கு தமிழ் தெரியும் என்று சொன்னால், ஆங்கிலம் தெரியாது என்று நினைப்பார்களோ என்று ஒரு complex. Knowing one language doesn't preclude being fluent in another. இதை மக்கள் எப்போது புரிந்து கொள்வார்களோ தெரியவில்லை.

திங்கள், பிப்ரவரி 07, 2005

பிள்ளையார் சுழி

தமிழ் பண்பாட்டின் படி குழந்தை சுவாமியை வேண்டிக்கொண்டு இந்த பதிப்புக்கு ஒரு பிள்ளையார் சுழி போடுகிறேன்.