ஞாயிறு, அக்டோபர் 23, 2005

தர்மஸ்தலா

பல ஆண்டுகளுக்கு முன்பு கர்னாடகா டூர் சென்றோம். சுப்ரமண்யா, தர்மஸ்தலா, தலைக்காவிரி, உடிபி, மங்களூர் என்று ஒரு பெரிய பயணம். கர்னாடகாவில் என்னை முதலில் கவர்ந்தது, அடர்ந்த காடுகளும், நீர்வளமும். எல்லா ஊரிலுமே வெயில் தணிந்து, குளுமையாக இருந்ததால், தமிழ்நாட்டிலிருந்து வந்த எனக்கு பிடித்திருந்தது..:) பல வருடங்கள் முன் சென்ற ஊராதலால், நினைவில் பல விஷயங்கள் நிற்கவில்லை.

தர்மஸ்தலாவில் ஒரு சோமவாரம் சென்றிருந்தோம். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு சத்திரத்தில் தங்கும்படியாக நேர்ந்தது. ஹோட்ட்ல் புக்கிங்கில் ஏதோ குளறுபடியால் இப்படி ஆகியது என்று நினைக்கிறேன். "ஐயோ சத்திரமா!" என்று நாங்கள் எல்லோரும் அலுத்து கொண்டிருந்தோம். தர்ம சத்திரம் என்றாலே அது நன்றாக இருக்காது என்று ஒரு prejudice. வெறும் Prejudice என்று சொல்வதை விட, ஒரு காரணத்துடன் தான் ப்ரஜூடிஸ் என்று சொல்லலாம். சங்க காலத்தில், என்னதான் சத்திரங்கள் பயணியர்க்கு அடைக்கலம் தந்து, ராஜோபசாரம் செய்ததாக இருந்தாலும், இப்போது தமிழ்நாட்டில் அப்படி இல்லையல்லவா? ஆனால் எங்களுடன் வந்த டிரைவர், தர்மஸ்தலா சத்திரங்கள் மிக நன்றாக இருக்கும் என்று கூறி அழைத்து சென்றான். உண்மையிலேயே, மிக தூய்மையாகவும், வசதியாகவும் இருந்தது. இன்பமான அதிர்ச்சி அது.

சோமவாரம் மிக விசேஷம். நேத்ராவதி நதிக்கரையில், மரங்கள் சூழ்ந்திருக்க அமைந்திருக்கும் தீர்த்தம். அருள்மிகு மஞ்சுநாதஸ்வாமியையும், அம்மானவாருவையும், சுப்ரமண்யரையும் தரிசனம் செய்தோம். தர்மஸ்தலாவில் விசேஷம், அது ஒரு மதத்தை சார்ந்த கோவில் அல்ல. என்னதான் சிவ-சக்தி அம்சங்களாக தெய்வங்கள் அமைந்திருந்தாலும், அவை தர்ம தேவதைகளாகவே பூஜிக்கப்படுகின்றன. ஆக, அது தர்மத்துக்கும், தர்ம ரக்ஷணை செய்யும் பொதுவான கடவுளுக்கும் தான் கோவில். பல மதத்தினர், இஸ்லாமியர் உட்பட, அங்கு வழிபாடு செய்கின்றனர். தினம் வரும் பக்தர்களுக்கு எல்லாம், தேவஸ்தானம் இலவசமாக உணவளிக்கிறது. மிகவும் ருசியான, கல்யாண சாப்பாடு..:)

தர்மத்தை பற்றி பேச எனக்கு மூளையும் போதாது, வயதும் போதாது. ஆனால், ஒரு சில எண்ணங்கள் இதோ. "தர்மம்" என்ற ஒரு கருத்துக்கு ஆங்கிலத்தில் ஒரு சமமான வார்த்தை கிடையாது. இது பரதக்கண்டத்துக்கே சாசுவதமான ஒன்று. இதை மதத்தோடு கோர்ப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை. தர்மம் மதத்துக்கெல்லாம் அப்பார்ப்பட்டது. Duty என்பது கடமை. அது தர்மத்தின் ஒரு அங்கம் மட்டுமே. அதுவே தர்மமா? இல்லை. Obligation? சில நேரங்களில் தர்மத்தின் பொருட்டு சில obligations செய்ய நேர்ந்தாலும் அது மட்டுமே தர்மமாகாது. புண்ணியம் தேடி மற்றவர்க்கு அன்னதானமும், charity-உம் கொடுத்தால் அது தர்மமா? பலன் தேடி எதை செய்தாலும் அது தர்மமாகாது. எல்லோருக்கும் ஒரே தர்மம் என்பதும் ஒப்புக்கொள்ள முடியாதது. ஒரு சிலருக்கு, நேரத்தை பொறுத்து தான் தர்மம் விதிக்கப் படுகிறது. ஸ்ரீராமர் சீதையை தீக்குளிக்க சொன்னதும் தர்மமே. துரியனை இடுப்பின் கீழ், பீமனை அடிக்க சொன்னதும் தர்மமே. காந்தாரி, புத்திர சோகத்தில் இறையம்சமான கிருஷ்ணனை வம்சம் அழியும்படி சபித்ததும் தர்மமே.

இப்படி பல குழப்பங்கள். இதற்கு கிருஷ்ணர் கீதோபதேசமே செய்திருக்கிறார். நான் என் சொல்வது? :) என்னை பொறுத்த வரையில், நடைமுறை வாழ்க்கையில், பிறரை அனாவசியமாக மனதில் தூஷிக்காமல் இருப்பது; வஞ்சனை எண்ணம் கொள்ளாமலிருப்பது; பொறாமை படாமல் இருப்பது; அடுத்தவரை அவமதிக்காமல் இருப்பது போன்று சிறிய விஷயங்கள் கூட தர்ம சிந்தனை தான்! எவ்வளவு முறை பிறரைப் பற்றி, அவசரமாக ஒரு தவறான முடிவுக்கு வருகிறோம்? நமக்கு தான் analytical mind இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, அரைகுறை விஷயங்கள் தெரிந்து கொண்டு, எதையோ ஆராய்ந்து, மொட்டைதலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டு, பலவாறான முடிவுகளுக்கு வருகிறோம். இதுவும் அதர்மம் தான். People can never be pegged as round or square. பல மனிதர்கள் தயாரிக்கும் பொருள்களை தினசரி உபயோகம் செய்கிறோம். அதை மதிக்காமல், அனாவசியமாக வீணாக்குதலும் அதர்மம் தான்!

இதெல்லாம் நானும் கடைபிடிக்கிறேன் என்று சொல்வதற்கில்லை. முடிந்த வரை முயல்கிறேன். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்ற awareness இருக்க வேண்டும். அப்போது தான், அடுத்த முறை எதாவது ஒரு எண்ணம் வரும்போது, அது நல்ல சிந்தையா, கெடுதலா என்று எண்ணி பார்க்கவாவது தோன்றும்!

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசி மந்திரமும், சந்தியா வந்தனத்தின் கடைசி மந்திரமும்

"காயேன வாசா மனசேந்த்ரியேர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்"

என்றே ஆரம்பிக்கிறது. மனஸ், உடல், இந்திரியம், புத்தி, வாக்கு, ஆத்மா ஆகிய அனைத்தாலும் நான் செய்பவை இறைவனுக்கே சமர்ப்பணம் என்பதே பொருள். இதில் சிலவற்றையாவது கடைபிடிக்க முயல்கிறேன்.

செவ்வாய், அக்டோபர் 18, 2005

திருப்பேர்நகர்

தமிழில் எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்று ஒரு மாலை இளவெயில் நேரத்தில் இளந்தென்றல் வீச, அதற்கிசைந்து தலை சாய்த்து, சோம்பல் முறித்து மரங்கள் பலவர்ண இலைகளையுதிர்க்க, எனக்கு மறுபடியும் காவிரியாற்றங்கரையின் இளந்தென்றல் மனதில் வீசியது...

திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
"இருப்பேன்" அன்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேனே!"

- நம்மாழ்வார் திருவாய்மொழி

வைணவ §க்ஷத்திரங்களில் 'பஞ்சரங்க' §க்ஷத்திரங்களுக்கு தனி சிறப்புண்டு. பஞ்சரங்கம் எனக் கூறப்படுபவை: ஆதிரங்கம் அல்லது ஸ்ரீரங்கப்பட்டினம், அப்பாலரங்கம் அல்லது திருப்பேர்நகர், பரிமளரங்கம் அல்லது மாயவரம், ஸ்ரீரங்கம் மற்றும் சீர்காழி அருகே இருக்கும் வடரங்கம். இந்த பஞ்சரங்கத்திலும் எம்பெருமான் பள்ளிகொண்டானாக காட்சியளிக்கிறார்.
திருப்பேர் நகருக்கு கோவிலடி என்றும் பெயர். பெருமாள் அங்கு அமர்ந்து அந்த இடத்தை விட்டு பெயரேன் எனவருளியதால், திருப்பேர்நகர் என்று பெயர்க்காரணம். பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்துக்கு வாயிலாக இருப்பதனால் "கோவில் அடி" என்றும் பெயர் ஏற்ப்பட்டது. ஸ்ரீரங்கத்துக்கு அப்பால் காவிரியாற்றங்கரையின் கரையில் அமைந்திருப்பதால், 'அப்பாலரங்கம்' என்று பெயர். அன்பில் மற்றும் கோவிலடி இரண்டையுமே சேர்த்து தான் சொல்வார்கள். அன்பில் காவிரியின் திருச்சி கரையிலும், கோவிலடி காவிரியின் தஞ்சை கரையிலும் அமைந்திருக்கிறது. திருமழிசையாழ்வார் தன் பாசுரத்தில் அன்பில் மற்றும் திருப்பேர்நகரை சேர்த்து "பேரன்பில்" என்றே கூறுகிறார்.

நான் சென்ற பல கோவில்கள் போல, இதுவும் எதேச்சையாக சென்ற கோவில் தான். முதலில் சென்ற போது, அந்த தலத்தை பற்றி எதுவுமே தெரியாமல்தான் போனேன். மிக சிறிய ஊர். திருச்சியிலிருந்து சுமார் 45 நிமிட பயணம். ஆற்றங்கரையிலேயே கோவில். அழகிய, எளிமையான தஞ்சை ஜில்லா ஊர். மாலை நேரத்தில், காவிரியின் காற்று வந்து வருடிச்சென்றது. பள்ளிகொண்டப் பெருமாள் அப்பக்குடத்தான் என்று பெயர் பெற்றிருக்கிறார். இறைவனின் வலக்கையருகே ஒரு பெரிய அப்பக்குடம் இருக்கும். உபரிஸ்ரவசு என்னும் மன்னன், கிழவன் ரூபத்தில் வந்த இறைவனுக்கு அன்னமளித்தும் பசியடங்காமல் போக, விருந்து தயார் செய்யும் வேளையில், snack-ஆக அப்பங்கள் செய்து படைத்தான். அந்த அப்பக்குடத்தோடு அங்கேயே பெருமான் கமலவல்லி நாச்சியார் சமேத அப்பாலரங்கனாக அமர்ந்து விட்டதாக தலபுராணம்.

பெருமாளுக்கு தசாவதார ஒட்டியானம் மிக பிரசித்தி. 6000 வருடத்துக்கும் மேலான பழமையான கோவில் எனக் கூறுகின்றனர்! எந்தவிதமான வெப்பத்திலும் கூட, எப்பொழுதும் ஜில்லென்று காற்றை கிளப்பி பெருமாள் மனம் குளிர வைப்பாள் காவிரியன்னை என்று பட்டர் கூறினார். அதை ஆமோதிப்பதைப் போல், அப்போது ஒரு குளிர்தென்றல் கிளம்பியது.
கோவிலடியிலிருந்து பல கலை வல்லுனர்களும், ஆசார்யார்களும், அனுஷ்டானங்களில் சிறந்தவர்களும் தோன்றியதாக பேச்சு. திருச்சியில், கோவிலடி மத்வப்ரசாத் என்று ஒரு வித்வானின் கச்சேரிகள் கேட்டிருக்கிறேன். மிக பிரமாதமாக இருக்கும்! அந்த கூற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்யுமோ என்று என்னை யோசிக்க வைத்தது. யோசனையிலேயே, காவிரி ஆற்றின் ஓரமாக பயணம் செய்து, திருச்சியும் அடைந்து விட்டோம். இவ்வளவு நாள் இந்த ஊரைப் பற்றி தெரியவில்லையே என்று ஒரு சின்ன வருத்தம். ஆனால், இப்போதாவது, அரங்கன் அனுக்கிரகத்தில் காணக்கிடைத்ததே என்றும் ஒரு சந்தோஷம்.

'இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்து என் செய்வான்?
குன்றெனத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்தலுற்றேனே!'
- நம்மாழ்வார் திருவாய்மொழி

(O Lord, how could you have ignored me all my life and suddenly thought it fit to enter my heart? What answer can you give except hang your head in shame like a pupil before a teacher!)
என்று முணுமுணுத்துக் கொண்டே மனதால் விடைப்பெற்றேன். மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் அந்த §க்ஷத்திரம் செல்வேன்.