வியாழன், மார்ச் 19, 2009

அம்மாவின் அடுப்பறை

'வாய் வாழ்தலைன்னாலும் வயிறு வாழ்த்தும்' என்று சொல்லி நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் உள்ளத்தளவில் உணர்ந்ததில்லை -- சில மாதங்கள் முன் வரை. Lexington-இல் நான் வந்த புதிதில் தென்னிந்திய உணவகங்கள் கிடையாது. Cincinnati-இல் 'உடிபி' தான் அருகாமையில் உள்ள உணவகம். மாணவியாய் இருந்த காலங்களில் கையில் பணமும், வாகனமும் கிடையாது. ஏதோ ஒரு படத்தில் SVe சேகர், கோழி படத்தை பார்த்து சப்பிக் கொண்டே வெறும் சாதம் சாப்பிடுவான். அந்த மாதிரி, நாக்கில் எச்சில் ஊற எல்லோரும் 'உடிபி'-யை நினைத்துக் கொண்டு, ஏதோ ஒன்று சமைத்து சாப்பிடுவோம். பின்னர், நண்பர்கள் எல்லோரும் பல தடவை 'உடிபி' சென்று சாப்பிட்டோம். மிக சுமார் ரக உணவு. ஆனாலும் ஏதோ இந்த மட்டும் தோசை, இட்லி கிடைத்தே என்று சாப்பிடுவோம். பின்னர், Lexington-இலும் பல தென்னிந்திய உணவகங்கள் வந்துவிட்டன. Familiarity breeds contempt. எப்போதாவது போவதோடு செரி.

நிற்க. இதெல்லாம் 6 மாதம் முன்பு வரை. அப்போது தான் 'உடிபி' 'Amma's Kitchen'-ஆக மாறிவிட்டதாக கேள்விப் பட்டோம். சரி, என்ன தான் இருக்கிறது என்று போய் பார்த்தோம். பார்த்ததோடு மட்டும் இல்லாமல் ஒரேயடியாய் கவிழ்ந்தோம்! அருமையான 'வீட்டு சாப்பாடு'. லஞ்ச் Buffet-க்கு போனால் அப்படியொரு variety, அப்படியொரு மணம், சுவை! பல காலமாக கண்ணால் கூட பார்க்காத தென்னிந்திய 'பரோட்டா', 'இடியாப்பம்', 'சேவை', அசல் 'குர்மா' ஆகிய அயிட்டங்களை பார்த்தே பசி தீர்ந்து விடும் போல இருந்தது. அதை தவிர, சுடச்சுட தோசை பரிமாறுவார்கள். சமையல்காரர் மதுரை என்று அறிந்தோம். நிஜமாகவே 'நள பாகம்' செய்கிறார்! பல முறை போயிருக்கிறோம். ஒரு தரம் கூட சுவை அப்படி இப்படி குறை சொல்லி விட முடியாது! இதில் என்ன விசேஷம் என்றால் வயிற்றையும் ஒன்றும் செய்து விடாது.

அமெரிக்கா-வில் பல உணவகங்கள் ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். போகப் போக சகிக்காமல் ஆகிவிடும். 'Ammas Kitchen' மட்டும் இது வரையில் அப்படி ஆகவில்லை. அதுவே ஒரு பெரிய வெற்றி! சென்ற வாரம் கூட அங்கு சென்று நன்றாக ஒரு வெட்டு வெட்டினோம். சாப்பிட்டு முடித்த பின்னர் வயிறு மனமார சமையல் செய்தவரை வாழ்த்தியது! அம்மாவின் சாபாட்டை உண்டு பல வருடங்கள் ஆகி நாக்கு ஏங்கி போயிருக்கும் என்னைப் போன்ற NRI மக்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் -- சுவையான உணவுக்காக மட்டும் அல்ல; அந்த உணவு நினைவுப் படுத்தும் அம்மாவின் நினைப்பிற்கும் தான்!

புதன், மார்ச் 18, 2009

என்றும் ராஜா!

அமெரிக்காவுக்கு வந்து இதோட அஞ்சு வருஷம் ஆச்சு. ஆனாலும் இந்த ஊரு குளிரு நமக்கு பழக்கமாகலை! திருச்சில மலைக்கோட்டை ஓட கானல் புழுக்கததுலயும், சென்னையோட அக்னி நட்சத்திர தாக்குதல்லயும் 22 வருஷம் இருந்துட்டு, இங்க வந்து குளிருல சமாளினா முடிய மாட்டேங்குது. இந்த winter-ல தான் நெறைய இந்தியாவை மிஸ் பண்ணுவேன்!

போன வருஷம் ஒரு நாள் 'ஐயோ இந்தியா போக மாட்டோமானு' ஒரே சோகமா ஒக்காந்திருந்தேன். அப்போ "Raaga.com"-ல 80s சேனல் playlist ஒண்ணு தட்டி விட்டேன். அதுல,

"கொடியிலே மல்லிக பூ மணக்குதே மானே!" -ன்னு பாட்டு.

உண்மையிலே காதுல தேன் வந்து பாய்ஞ்ச மாதிரி இருந்தது. இளையராஜாவின் அருமையான கிராமத்து இசை கண் முன்னால தமிழ்நாட்டோட கிராமங்களை கொண்டு வந்து நிறுத்திடிச்சு! எ.ர. ரஹ்மான் என்ன தான் 'ஆஸ்கார்' வாங்கினாலும், அவரோட பாட்டு எனக்கு என்னிக்குமே தமிழ்நாட்டை குறிப்பா ஞாபகப் படுத்தாது. அந்த இசையை மும்பை, டெல்லி, calcutta எங்க வேணும்னா கேக்கலாம், பொருத்தலாம். ஆனால் இளையராஜா ஓட பாட்டுல ஒரு distinct, un-mistakable தமிழ் மணம்!

ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஒரு இசையானது கடந்து சென்று, ஒரு மனிதனின் உள்ளத்தை தொட்டு, உவகை ஊட்டி , அப்படியே அள்ளிச் சென்று தாய்நாடு மடி சேர்கின்றதென்றால் அதைவிட ஒரு கலைஞனுக்கு பெரிய விருது வேறு என்ன இருக்க முடயும்?!

வாழ்க இளையராஜா!

ஞாயிறு, மார்ச் 15, 2009

ஸ்ரீமான் சுதர்சனம்

நேற்று இரவு தேவன் எழுதிய 'ஸ்ரீமான் சுதர்சனம்' நாவலை படித்து முடித்தேன். ஆரம்பத்தில் சற்று மெதுவாக கதை ஆரம்பித்தது. என்னடா இது, ஒருவன் வீடு மாறுவதைப் பற்றியும், வாடகை குடுப்பதைப் பற்றியும் ஒரு கதையா என்று இருந்தது! ஆனால் போக போக கதை மிக அருமை!

௧௯௩0 காலங்களில் ஒரு மனிதனுக்கு என்ன மாதிரியான வாழ்க்கை, எவ்விதமான அபிலாஷைகள் எல்லாம் அவனுக்கு இருக்கும், என்ன மாதிரி கஷ்டங்கள் எல்லாம் அவன் சந்தித்திருப்பான் என்று மிக அருமையான வர்ணனை. ௨00௯-இல் இதை படிக்க போனால் அந்த நாட்களில் அவர்கள் பிரச்சினை எல்லாம் மிக சாதாரணமானவை என்று தோன்றுகிறது!

கோமளம் ரூ.78-க்கு புடவை வேண்டும் என்று ஆசைப் படும் இடம் மிக பாங்கு! சுதர்சனத்தின் மாப்பிள்ளை 'குடவாசல்' படுத்தி வைக்கும் பாடு, சுதர்சனத்தின் அம்மா சௌந்தரம் கோமளத்ததை குத்தி காமிப்பது, மகன் எங்கே பொண்டாட்டி தாசன் ஆகி விடுவானோ என்று சுதர்சனத்தின் தாய் தந்தையர் கவலை படுவது என்று கதை முழுதும் எங்கும் எதார்த்தம்!

இந்த fast-food உலகத்தில், இப்படி ஒரு கதை படித்தது lexington-இல் காவிரியின் கோடைத் தென்றல் அடித்து போன்ற ஒரு உணர்வு! :)