ஞாயிறு, செப்டம்பர் 24, 2006

திருவிடைமருதூர்

"தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண்சூழ் பழியைப்
போக்கும் இடைமருதிற் பூரணமே." - அருட்பா

எனக்கு சோழநாட்டு திருத்தலங்கள் மீது தனிப் பற்று. அதை நான் இன்று சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை! இந்த மின்பதிவில் அதைப்பற்றி எழுதி எழுதியே உங்களை எல்லாம் ரம்பம் போட்டிருக்கிறேன்..:) பல வாசகர்கள் என்னுடைய மின்பதிவில் இதையே குறையாகக் கூறியிருக்கிறார்கள்...:) எப்பொழுதும் கோவில்கள் பற்றியே எழுத
வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சில விஷயங்கள் ரத்தத்திலே கலந்தவை.

நான் சிறு வயதில் மதுரை, சென்னை, ஒரிஸ்ஸா என்று பல இடங்களில் வசித்திருக்கிறேன். 'என்னுடைய ஊர் இது' என்றெல்லாம் எந்த ஒரு ஊரையும் நினைத்ததில்லை. திருச்சியில் நான்கே ஆண்டுகள் இருந்தாலும், அந்த ஊரிலும், அதன் சுற்றுப்புறங்களுலும் ஏற்ப்பட்ட ஒரு பற்று வேறு எந்த இடத்திலும் எனக்கு இல்லை. 'இதுதான் உன் வீடு. இதுதான் உன் மண்' என்று ஒரு நினைப்பு பலமாக அடிக்கடி தோன்றும். பேருந்தில், கல்லூரி முடிந்து ஸ்ரீரங்கம் செல்லும்போது, காவிரிப் பாலத்தை தாண்டவேண்டும். அந்த இரண்டு நிமிடத்துக்காக தினம் காத்திருப்பேன். காவிரியை கடக்கையில், அந்த வளமான நதியையே ஆசையோடு பார்ப்பேன். மனதில் ஒரு அமைதி பரவும்.

இந்த உணர்வு ஒரு மனிதனுக்கு ஒரு இடத்தில்/ஊரில் மட்டுமே தோன்றும். அதை ரத்தத்தில், நாடி நரம்பில், மனதில், ஊனில் உணர முடியும். இந்த உணர்வு தரும் ஒரு adrenalin rush-ல் தான், கார்கிலில் போர்வீரர்கள் சண்டையிட்டனர். "இது என் தாய்மண். என்னுடைய மண்" என்கிற உணர்வின் பலத்தாலேயே ஒரு போர்வீரன் வெற்றிவாகை சூடி, 'Yeh Dil maange more!" என்று கர்ஜித்தான். 'சோறுடைத்த சோழநாடு' என்று போற்றப்படும் தஞ்சை ஜில்லாவில், எங்கு சென்றாலும் எனக்கு இந்த உணர்வு தான் மேலோங்கும். அதனாலேயே, எனக்கு அதைப் பற்றி எழுதுவதில் ஒரு சுகம். வாசகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்! :)

திருவிடைமருதூர் வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம். காவிரி கரையில், வயல்களுக்கு நடுவே உள்ள அழகிய தலம். வரகுண பாண்டியன் கோவிலுக்குள் செல்லும்போது, பிரம்மஹத்தியை வாசலிலேயே நிறுத்தி வைத்துவிட்டு 'இதோ திரும்பி வருகிறேன்' என்று கூறிவிட்டு உள்ளே சென்றானாம். ஈசனை வழிபட்டு, இன்னொரு வாயில் வழியாக வெளியேறி பிரம்மஹத்தியை ஏமாற்றிவிட்டானாம்! இன்றும் அந்த பிரம்மஹத்தி காத்துக் கொண்டிருக்கிறது. ஆகையால், கோவில் நுழையும் அதே வாசலால் திரும்பக் கூடாது என்று ஐதீகம்.

தலைமருது (ஸ்ரீசைலம் - ஆந்திரா - மல்லிகார்ச்சுனம்), இடைமருது (திருவிடைமருதூர் - மத்தியார்ச்சுனம்), கடைமருது (திருப்புடைமருதூர் - நெல்லை மாவட்டம் - புடார்ச்சுனம்) என்று மூன்று தலங்கள். ஸ்ரீசைலத்துக்கும், திருப்புடைமருதூருக்கும் இடையில் இருப்பதாலேயே இடைமருது என்று அழைக்கப்படும். மருது (அர்ச்சுனம்) என்றால் மருதமரம். இதுவே தல விருட்சம். சுவாமி - மகாலிங்கேசுவரர், மருதவனேஸ்வரர். பெரிய லிங்க வடிவு. மிக, மிக அழகான கோவில். அதை விவரிக்க முடியாது. வயல்களுக்கு நடுவே, ஒரு சிறிய ஊரின் நடுவில், அமைதியான, பிரம்மாண்டமான சிவன் கோவில்.

பிரகார சுற்றில், கர்ப்பகிரகத்திற்கு பின்னால், இராவணன் கைலாய மலையை கைகளில் தாங்குவது போன்ற சிலை இருக்கிறது. ஈசன் காலால் அழுத்த, வலியில் நரம்பையே வீணையாக்கி, சாம கானம் பாடும் காட்சி. காம்போதி ராகம் பாடி சிவனார் மனம் குளிரவைத்தான். இன்றும், இரவில் அங்கு வந்து காதை தீட்டிக் கொண்டு கேட்டால், சாம கானம் கேட்கும் என்று சொன்னார்கள். எனக்கு ஒன்றும் கேட்கவில்லை...:)

இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு, இதை மையமாக வைத்து, இதைச் சுற்றி 'பரிவார தலங்கள்' உள்ளன. என்னளவில், தல மகிமை எல்லாம் மீறி, எனக்கு இந்த தலத்தை பிடிக்க ஒரு தனி காரணம் உண்டு...:) இராஜராஜ சோழன், பட்டத்துக்கு வருமுன், இந்த மகாலிங்கத் தலத்துக்கு வந்தான். 'மகாலிங்கம்' என்று பெயரைக் கேட்டு, மிக பிரம்மாண்டமான லிங்கம் இருக்கும் என எதிர்ப்பார்த்தானாம். அவனுக்கு சற்று ஏமாற்றம். 'உண்மையிலேயே ஒரு மகா லிங்கத்தை நான் ஸ்தாபிக்கிறேன். ஒரு மகா பெரிய கோவிலை இந்த ஈசனுக்கு நான் அர்ப்பணம் செய்கிறேன்' என்று உறுதி பூண்டான். அதுவே பிற்காலத்தில் தஞ்சை பெரிய கோவிலாக உருவெடுத்தது. இந்த ஒரு சம்பந்தத்தாலேயே, எனக்கு இந்த கோவில் பிடிக்கும்..:) இது அரசபக்தி...1000 காலம் ஆனாலும், இராஜராஜ சோழன் ஆண்ட அந்த மண்ணில் வசிக்கும் எவனுக்குமே இருக்கும் இந்த அரச பக்தி. இன்றும் தஞ்சையில் அருண்மொழி வர்மனின் பிறந்த நட்சித்திரமான 'ஐப்பசி சதய'த்தன்று மிக விமரிசையாக விழா நடத்துவார்கள்.

இராஜராஜ சோழனின் குருவான கருவூர்த்தேவராலும் பாடல்பெற்ற தலம் திருவிடைமருதூர். அண்மையில் "Temples of India" documentary-ல் ராஜராஜசோழனோடு ஒரு வயதான ஜடாமுடி முனிவரின் வரைபடமும் கண்டுபிடித்ததாக காண்பித்திருந்தனர். அவரே கருவூர்த்தேவர். அவர் இயற்றிய 'திருவிசைப்பா' ஒன்பதாம் திருமுறையை சேர்ந்தது.

இந்திர லோக முழுவதும் பணிகேட்(டு)
இணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாகம் மேகலை அரையா
அகந்தொறும் பலிதிரி அடிகள்
தந்திரி வீணை கீதமும் பாடச்
சாதிகின் னரங்கலந்(து) ஒலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும்
மருவிடம் திருவிடை மருதே.

இவர் தஞ்சை பிருகதீஸ்வரர் கோவிலைப் பற்றியும் பாடியுள்ளார்.

குடந்தை, மயிலாடுதுறை அடுத்த முறை சென்றார், நிச்சயாமாக போய் தரிசிக்க வேண்டிய இடம்!

ஞாயிறு, ஜூலை 16, 2006

என்ன ஆச்சு நம்ம பெண்களுக்கு?

அனுராதா ரமணன் விகடனில'என்ன ஆச்சு நம்ம பெண்களுக்கு?' என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சென்ற மாதம் தமிழகத்தை உலுக்கிய இரு கொலைகள் - கொலையாளிகள் இருவருமே பெண்கள் - இந்த கட்டுரைக்கு தூண்டுதல். இதில் அவர் கூறியிருக்கும் பல காரணங்கள் சரியே. கூட்டுக் குடும்பம், யந்திர வாழ்க்கை எல்லாம் இருந்தாலும் ஒரு முக்கியமான கேள்வி யாரும் எழுப்பவில்லை. ஒரு பெண் பிடிக்காத ஒருவனை மணக்கும்படி நேர்ந்தது எப்படி? காதலனை கைப்பிடிக்காமல் ஏன் இன்னொருவனை மணக்கிறாள்? மனது ஒத்துப்போகாத ஒருவனை மணப்பதால்தானே இத்தனை பிரச்சனைகளும்?

நமது நாட்டில் 'காதல்' என்பதே கெட்ட வார்த்தையாக இருக்கிறது. காதலித்து மணப்பது என்பது ஒரு taboo-வான விஷயம். திருமணமான பின்பு கூட கணவன் - மனைவிக்குள் 'காதல்' என்று நினைத்தால் கூட, "அடடா, என்ன அபத்தமா பேசிகிட்டு. அன்பு இருக்கலாம். சும்மா காதல் கத்திரிக்காய் என்பதெல்லாம் சினிமாகாரங்களுக்கு!' என்று விட்டேத்தியாக பேசுவது நான் பலமுறை கேட்டிருக்கிறேன். மகனோ/மகளோ வேறு ஜாதிப் பெண்ணை/பையனை விரும்புகிறாள் என்று தெரிந்தும், கட்டாயமாக வேறு ஒருவருக்கு மணமுடிப்பதேனோ? இதுதான் நாகரீகமா?

இதற்கு கொலைதான் முடிவு என்று சொல்லவில்லை..ஆனாலும், சும்மா 'கலாசாரம்', 'பெண்மை', 'கற்பு' என்ற வார்த்தைகளை இந்த விஷயத்தில் இழுக்க தேவையில்லை. Arranged மேரேஜ் செய்து கொண்டு, மனது ஒத்துக்கொள்ளாமல், ஏதோ arranged-ஆகவே வாழ்க்கையை யந்திரத்தனமாக நடத்துவதால் வரும் விபரீதங்கள் இவை. அந்த காலத்தில் இப்படியெல்லாம் இல்லையே என்று சிலர் கூறுவார்கள். கூட்டு குடும்பத்தில், மாமியார்/மாமனார்/நாத்தனார்/கொழுந்தினன் குட்டுக்கு சதா சர்வகாலமும் பயந்து வாழ்ந்தால் கணவனின் காதல் பற்றி யோசிக்க நேரமேது? நல்ல மருமகளாக பெயர் எடுக்கும் முயற்சியிலேயே வாழ்க்கை ஓடிவிடும். இல்லையென்றால், அவர்கள் வீட்டை விட்டு துறத்திவிட்டால், ஏது நாதி? அக்காலத்தில், பெண்களுக்கு நிதி சுதந்திரம் இல்லாததே அவர்கள் வீட்டை விட்டு வெளியேற பெரும் தடையாக இருந்தது என்பது என் கருத்து. It all boils down to choices and options. அதை விடுத்து, அந்த கால வாழ்க்கையை idealize செய்வது என்பது என்னால் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று.

திருமணத்திற்கு பின் உறவினர்கள் எல்லோரும் நல்லவர்களாகவே அமைந்துவிட்டால், கூட்டு குடும்பம் போல் ரம்மியமான வாழ்க்கை வேறெதுவும் இல்லை. கூட்டு குடும்பத்தில் என் தாய் பட்ட பாட்டை நான் பார்த்திருக்கிறேன். ஒரு சிலர் கத்தி போன்ற நாக்கும், சுட்டெரிக்கும் பார்வையும் கொண்டிருந்தால், மருமகளுக்கு என்றுமே நரகம் தான்.

ஒரு வாதத்தில் என்றுமே ஒருவர் மேல் மட்டுமே தவறு என்று இருந்துவிட முடியாது. இன்று இப்படி கொலைகள்/adultery நடப்பதற்கு பெண்களை மட்டுமே தவறு கூறிவிட முடியாது. என்ன தவறு நடந்தது என்பதை அமைதியாக யோசிக்க வேண்டும்....

வெள்ளி, ஜூன் 02, 2006

இது வசந்த காலம். குளிர்காலம் நீங்கிய களிப்பில், முகம் தெளிந்து இருக்கிறாள் வான மங்கை. அதிகாலையில், அருணோதயத்தில், சூரியதேவனைக் கண்டு நாணி அவள் முகம் சிவந்திருந்தது. சூரியன் வானில் சிம்மாசனத்தில் ஏற ஏற, வானதி தன் வெட்கம் மறந்து அவனது அணைப்பில் நீல நிறமாக பொலிகிறாள்! மறையும் மதியும், ஜொலிக்கும் நட்சத்திரங்களையும் அணிகலனாக பூண்டு சிரித்து மகிழ்கிறாள்.

அவளது அழகைக் கண்டு பூமியில் உயிரினங்கள் முகம் மலரும். கவிகள் பாடல் புனைவார்கள். ஆனால் அழையா விருந்தாளியாக வருணன் அவ்வப்போது வானவீதியில் குடியேறிவிடுகிறான்! சூரியதேவனை மறைத்துவிடுகிறான்! அழையாமல் அவன் வந்ததால் வானதியின் களியாட்ட திருக்கோலத்துக்கு ஒரு அவசர தடங்கல். வான மங்கை முகம் சுளித்து, புருவம் நெறித்து, கோபப்படுவதால் திருமுகம் கருத்ததோ? காதலனிடமிருந்து பிரிந்ததனால், ஆபரணங்களை விடுத்து, கார்முகில்களையே பூணுகிறாள் வானதி!

வருணனும் சளைத்தவன் இல்லை. காற்றை துணைக்கு அழைக்கிறான். தன் அழகிய கோலம் கலைந்ததால், சற்று நேரத்தில் வானதியின் இந்த கோபம் கண்ணீராய் மாறக்கூடும். பின்பு, அவளின் உக்ர தாண்டவமே! அவள் கண் வெட்டுகள் மின்னலாய் வானைப் பிளக்கும். அவள் கோப சிணுங்கல் இடியாக முழங்கும். உலகம் நடுங்கும்.

வானதி, இந்த போர்க்கோலமும் உனக்கு அழகாகவே இருக்கிறது! உனது கோபமும், கண்ணீருமே பூமிக்கு உயிர் தரும்! பஞ்சபூதங்களில் மூன்று மோதிக்கொண்டால், நான்காவதான நிலமகள் களிப்படைவாள். இலையும், கிளையும், புல்லும், பசுவும் வானம் பார்த்து நன்றி கூறும்! பசுமை செழிக்கும்! வானதி, வருணனும் காற்றும் உன் வெறியாட்டம் கண்டு ஓடுவார்கள். மறுபடியும் சூரியதேவனை கண்டு நீ முகம் மலர்வாய்!

வானும், மண்ணும், காற்றும், கடலும் பேதம் பார்ப்பதில்லை என்று கூறுவார்கள். அமெரிக்காவில் தான் நான் நிறைய மழையை பார்த்திருக்கிறேன். இருந்தாலும், 'மழை' என்றவுடன் என் மனது இந்தியாவின் மழைக்காலகாட்சிகளையும், வாசனைகளையுமே அசைபோடுகின்றன...

மாலை வேளையின் வெயில் களைப்பு தீர்க்க விழும் ஜில்லென்ற கோடை மழை...
சட்டென்று குளிர்ந்துவிடும் பூமி...
'கம்' மென்று கிளம்பும் மண் வாசனை....
மழையில் புத்துயிர் பெற்று, வாசம் வீசும் மலர்கள்....
புழுதி நீங்கி பளீர் பச்சையாக காட்சியளிக்கும் இலைகள்...
வருடிச்செல்லும் மெல்லிய, குளிந்த காற்று...
அங்காங்கே, தெருவில் தேங்கி கிடக்கும் குட்டைகள்...
அதில் விளையாடும் சிறுவர்கள்...
லேசான குளிருக்கு இதமாக, டீக்கடைகளில் கூட்டம் கூட்டமாக சூடாக மசாலா டீ அருந்தும் கும்பல்...
மிளகாய் பஜ்ஜி விற்கும் கடைகளில் சிரித்துக் கொண்டிருக்கும் இளசுகள் கூட்டம்....

இந்த மண்வாசனைக்கு கூட பேதம்! இந்திய மண்ணின் வாசனையே தனி...அது கலப்படம் இல்லாத மண்ணின் வாசம். இங்கோ பெர்டிலைசரும், மருந்தும் கலந்து மண் வாசம் எழுகிறது. மனது லயிக்கவில்லை!

செவ்வாய், மார்ச் 21, 2006

காதல்- 2

நான் நினைத்த மாதிரியே, வெகு நாட்கள் எழுதமுடியாமல் போய்விட்டது. வாசகர்கள் பொறுத்துகிட்டதுக்கு நன்றி! :)

"காதல் ஒரு தேவையில்லாத எமோஷன் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று."- சுஜாதா.

அண்மையில், சுஜாதா ஆ.வி யில் காதலைப் பற்றி எழுதிய மற்றுமொரு கட்டுரை படித்தேன். மனிதர், காதலை அக்குஅக்காக பிரித்து எடுத்து, 'அது வெறும் இயற்கையின் தூண்டுதலுக்கு கொடுக்கப்பட்ட நாகரீகப் பெயர்' என்ற ரேஞ்சுக்கு எழுதியிருந்தார்! விஞ்ஞான பூர்வமாக உண்மைதான். ஆனால், அப்படி பார்த்தால் மனித உடலென்பதே வெறும் ரசாயனங்களின் விளையாட்டு. மனித மனது என்று ஒரு வஸ்து கிடையவே கிடையாது. அது பல ந்யூரான்களின் இணைப்பால் விளையும் மின்சக்தி பிரவாகம். ஒவ்வொரு விதமாக அந்த பிரவாகம், நியூரான்கள் வழி சென்றால் (Neuronal pathways), ஒவ்வொரு விதமான எண்ணம்/உணர்ச்சி மனதினில் உருவாகிறது. இப்படியெல்லாம் யோசித்தால், அப்புறம் எல்லாமே மாயை என்கிற ரீதியில் தோன்றிவிடும். 'எல்லாம் மாயை' என்பது உயர்ந்த சித்தாந்தம். அதை மனதின் ஒரு மூலை உணர்ந்தாலும், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள மனப்பக்குவம் வேண்டும். அதனால், என் சிறு மூளைக்கு எட்டியவரை 'காதல்' என்று ஒன்று இருக்கிறது என்றே வைத்து கொள்கிறேன்..:)

ஆனால் எதை 'காதல்' எனக் குறிப்பிடுகிறோம்? ஆங்கிலத்தில் எல்லாவற்றையுமே பொதுப்படையாக 'love' என்று தான் கூறுவார்கள். நடைமுறைத் தமிழில் அப்படியல்ல. இருபாலருக்கிடையே ஏற்படும் romantic love மற்றுமே இப்போது 'காதல்' என அழைக்கின்றனர். ஆனால், காதலோ பல வகைப்பட்டது. நம் தாய் தந்தையரிடம் வைக்கும் பாசம், கால்நடை பிராணிகளை பார்த்து ஏற்படும் பரிவு, வீட்டில் பூனை நாய்களிடம் காட்டும் பிரியம், நண்பர்களிடம் பாசம், யாரோ ஒரு வழிப்போக்கரிடம் ஏற்படும் பச்சாதாபம் எல்லாமே காதலின் பரிணாமங்கள் தான்!

"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பதுவும்
வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவதும்
நாதன் நாமம் நமச்சிவாயவே!"

என்று அப்பர் பெருமான் தேவாரத்தில் பாடியதும் காதல் தான்! ஆனால் அதை கொச்சையாகப் பார்க்க தோன்றுகிறதா? நான் என்ன சொல்ல வரேன்னா, ஒரு வகையிலாவது காதலை உணராதவர்கள் உலகில் இல்லை. ஆனால் அதற்கு வேறு பெயர் சூட்டி அழைக்கலாம்.இதைத் தான் சுஜாதா கூறியிருக்கலாம்.

அதற்காக காதல் தெய்வீகமானது என்று எல்லாம் டயலாக் அடிக்க விரும்பவில்லை! என்னை பொறுத்த வரையில் காதலைப் பற்றி ரொம்ப ஓவராக ஹைப் கொடுத்து, டயலாக் அடிச்சே கெடுத்துட்டாங்க. எதிர்ப்பாலரிடம் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையை நாம் கடந்து செல்ல செல்ல, அந்த ஈர்ப்பும் உருமாறும்; அன்பும் வேறு வகையாக வளரும். Growing old together is perhaps the best way to describe love. 'நான் வானத்தில் குதித்தேன். நிலவை பிடித்தேன். ஆகாசத்தில் பறந்தேன்' என்று சொல்வதெல்லாம் கவிதைக்காக. அப்படி அக்னி ஜ்வாலையாக, மனிதரை அழிக்கும் வகையிலும் காதல் பிறக்கலாம். அதற்காக, 'எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. அதனால் எனக்கு காதல் இல்லை' என்று நிறைய பேர் உண்மை அன்பை நிராகரித்ததையும் பார்த்திருக்கிறேன். அமைதியாக, ஆரவாரம் இல்லாமல், தீபத்தில் சுடர்விடும் அழகிய நெருப்பு முத்து போல் மிதக்கும் காதலும் ஏற்படலாமே?!?!

இந்த கதைக்கு பல பேர் தங்கள் கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள். எனக்கு விதியில் நம்பிக்கை உண்டு. அன்பின் சக்தியிலும் நம்பிக்கை உண்டு. Faith moves mountains, என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. ரோசாலியின் அபிரிமிதமான நம்பிக்கைக் காரணமாக விஞ்ஞானி பிறக்கிறாரோ? கடவுளே இல்லை என்று நினைத்த விஞ்ஞானிக்கு, கடைசியில் கடவுள் முன் நிற்பதே ஒரு irony. ரோசாலியின் அன்பின் பிணைப்பு ஒரு வேளை அவரை பூமிக்கு கட்டுண்டு இழுத்திருக்கலாம்! எத்தனையோ விதத்தில் விவரிக்கலாம். உங்கள் எண்ணங்களும் சரியென்றே தோன்றுகிறது! விஞ்ஞானத்துக்கும், சாத்திரத்துக்கும் அப்பாற்பட்ட அன்பின் சக்திதான் இந்த உலகை ஆட்டுவிக்கிறது என்பதில் எனக்கு அளவுக்கடந்த நம்பிக்கை!

அண்மையில் படித்த காதல் கவிதை ஒன்று. (http://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_246b.asp)

என் ப்ரியமானவனே...

மல்லிகைப்பூவின்
இதழ் போல்
மிருதுவாய்
உன் பிடிவாதம்.

அழுதபின் தோன்றும்
நிறைந்தெ அமைதியாய்
உன் மெளனம்.

பொம்மைகளுடன்
சண்டையிடும் குழந்தையாய்
உன் கோபம்.

உயிர் நனைக்கும்
அதிகாலை பனித்துளியாய்
உன் ஸ்பரிசம்.

பெண்மையின் மென்மை
உணர்ந்த உன்
ஆண்மையால்
தினம் புதிதாய் பிறக்கும்
பூவாய் நான்!

-நிலாரசிகன

சனி, பிப்ரவரி 11, 2006

காதல் - 1!

'காதலர் தினம்' வெகு அருகில் இருக்கிறது. அன்று பதிவு எழுத நேரம் கிடைக்கிறதோ இல்லையோ. இன்றே எழுதி விடுகிறேன்..:) காதலைப் பற்றி என்னமோ அறிவுஜீவித்தனமாக எழுதலாம் என்று நினைத்திருந்தேன். 'உனக்கு அவ்வளவு அதிகபிரசங்கித்தனமா?' என்று ஆண்டவன் வைத்தான் ஒரு ஆப்பு. காலை கையில் காபியுடன் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' படித்துக் கொண்டிருந்தேன். அதில் மார்ட்டின் கார்ட்னரின் ஒரு குட்டி கதையை சுஜாதா மொழிப்பெயர்த்திருந்தார். எனக்கு பிடித்திருந்தது. அதை சுஜாதாவிடமிருந்து சுட்டு இதோ கீழே போட்டிருக்கிறேன் (கற்றதும் பெற்றதும்- 'ஜீனோம்'). சுஜாதா மன்னிப்பாராக! -

ஒரு பெரிய விஞ்ஞானி சாகும் தறுவாயில் இருந்தார். அவரருகே அவருடைய காதலி ரோசாலி உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அவர் மேல் மிகுந்த காதல். விஞ்ஞானிக்கு முதல் காதல் விஞ்ஞானம் தான்.அப்புறம்தான் ரோசாலி.

"நாம் நிச்சயம் மறுபடி சந்திப்போம்....எங்கேயாவது, எப்போதாவது.." என்றாள்.

விஞ்ஞானி கஷ்டப்பட்டு இருமிக்கொண்டு சொன்னார்: "அபத்தமாக பேசாதே..உனக்கு விஞ்ஞானம் தெரியாதா..?"

ரோசாலிக்கு நிஜமாகவே விஞ்ஞானம் தெரியாது.
"ஆனால், நிச்சயம் நாம் சந்திப்போம் என்று நம்பிக்கை வைக்க மாட்டாயா..?"

விஞ்ஞானி தலையாட்டினார். "எனக்கு ஒரு வாழ்நாள் போதும்..எளிதாக,அழகாக அது முடிவடைகிறது...இல்லையேல் பிரபஞ்சம் மிகவும் சிக்கலாகிவிடும்.."

அவர் இறந்துபோனார்.

சில லட்சம் வருடங்கள் கடந்த பின் விஞ்ஞானி திடீரென்று கடவுளுக்கு முன் தான் நிற்பதை உணர்ந்தார். அவருக்கு குழப்பமாக இருந்தது.

"எனக்கு புரியவில்லை...எப்படி விஞ்ஞான விதிகள்படி நான் மறுபடி வாழ முடியும்?"

'எப்படி விஞ்ஞான விதிகளின்படி விஞ்ஞான விதிகள் வரமுடியும்?' என்று கடவுள் கேட்டார்.


'ஆனால் நான் மறுபடி வாழ விரும்பவில்லையே..திருப்தியுடன் வாழ்ந்தேன்...இறந்தேன். ஏன், எதற்காக இங்கே இருக்கிறேன்..?"

"நீ இங்கே இருப்பதற்கு ஒரேயொரு காரணம் ரோசாலி வேண்டிக்கொண்டது தான்" என்றார் கடவுள்.

இந்த கதையின் உள்ளர்த்தத்தை இரவின் தனிமையில் யோசித்துப் பாருங்கள்.

நானும் சற்று நேரம் யோசித்தேன். எனக்கு தோன்றியதை நாளைக்கு பதிவாக போடுகிறேன். அதற்குள்ளாக, உங்களுக்கு என்ன தோன்றியது என்று சொல்லுங்கள்...:)

ஞாயிறு, பிப்ரவரி 05, 2006

உடையார்

இம்முறை இந்தியா சென்றபோது, மும்பையிலேயே வாசம் எனக்கு. அதிகமாக பரிச்சயம் இல்லாத ஊர் என்பதாலும், எங்காவது செல்லலாம் என்று கிளம்பினால் குறைந்தபட்சம் 1 மணி நேரம் டிராபிக்கில் மாட்டி கொள்வோம் என்ற பயத்தினாலும், நண்பர்கள் யாரும் அங்கு இல்லாததாலும், வீட்டில் இருந்த புத்தககங்களை எல்லாம் எடுத்து புரட்டி பார்த்து கொண்டிருந்தேன். முன்பொரு முறை பாலகுமாரனின் 'உடையார்' குமுதத்தில் தொடராக வந்து கொண்டிருந்தது. அப்போது அதை படிக்கும் மனப்பக்குவமும் இல்லை. என் அப்பாவுடைய நண்பர் ஒருவர் 'உடையார்' பரிந்துரைத்தார். படிக்க ஆரம்பித்தேன். முதலில் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட, வித்தியாசமாக இருந்தது என்றே சொல்லவேண்டும். கல்கியின் நடையை படித்துவிட்டு, இதை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக முதலில் சற்று மாறுதலாக தான் இருக்கும். 'பொன்னியின் செல்வ'னின் தொடர்ச்சியாக இதை பார்க்க தோன்றும். எனக்கு அப்படிதான் இருந்தது. பிறகு, அந்த நினைப்பு இல்லாமல், இதை ஒரு தனிப்பட்ட இலக்கிய படைப்பாக ரசித்தல் வேண்டும்.

உடையார் என்பது அரசரை குறிப்பது. நாடு, மக்கள், செல்வம், வெற்றி, அழகு, பண்பு என்று அனைத்தும் உடையவனாதலால் அரசன் 'உடையார்' என்று அழைக்க படுகின்றான். இந்த படைப்பு முற்றிலும் ராஜராஜ சோழனுக்கே உரியது. ராஜராஜ சோழன் சிம்மாசனம் ஏறி 23 ஆண்டுகளுக்கு பிறகான காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்கள். வந்தியத்தேவனுக்கு மூட்டுவலி, குந்தவைக்கு முதுகுவலி, பொன்னியின் செல்வனுக்கு ஜலதோஷம் என்று படிக்கும்போது சற்று அதிர்ச்சியாக இருந்தது..:) எல்லோருக்கும் வயதான காலத்தில் கதை நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள எனக்கு சற்று நேரம் பிடித்தது. முக்கியமாக தஞ்சை பெரிய கோவிலின் படைப்பும், அதற்கான முயற்சிகள், அதனாலான பாதிப்புக்கள், மக்கள் வாழ்க்கை மாறுதல்கள், இவைகளை சுற்றியே கதை புனைந்திருக்கிறார். இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சரித்திர ஆதாரம் பெற்றவர்கள். எதுவுமே கற்பனை கிடையாது.

ஒரு கட்டிடம் கட்டுவது என்பது இந்த காலத்தில் அவ்வளவு பெரிய விஷயமில்லை. அதற்குண்டான சாமான்கள், பொருள் வசதி, ஆட்கள், அவர்களை நகர்த்த வண்டிகள், வசதியான சாலைகள், கட்டிட கணக்குகளை பார்க்க கணிணி, அளவுகளை துல்லியமாக போட்டு கொடுக்க மென்பொருள் என்று அனைத்துமே சுலபம்தான். அந்த காலத்தில் இதெல்லாம் எவ்வளவு கடினம் என்பதை அழகாக உணர்த்தியது 'உடையார்'. காவிரி பாயும், அழகிய விளைநிலங்கள் கொண்ட சமதரையான சோழ ராஜ்யத்தில் கற்கள் எப்படி கொண்டு வருவது? ஆட்கள் யாரைக்கொண்டு கோவில் கட்டுவது? எங்கு தங்க வைப்பது? ஒரு இடத்தில் கூடியிருக்கும் அவ்வளவு பெரிய ஆட்படைக்கு உணவளிப்பது எப்படி? அதனால் சமூகத்தில் எவ்விதமான மாறுதல்கள் ஏற்படும்? பொருள் கொண்டு வருவது எப்படி?

இந்த காலத்தில் இவ்வளவு வசதியிருந்தாலும், தொழில்நுட்பம் இருந்தாலும் நமக்கு தஞ்சை பெரிய கோவிலை போல ஒரு படைப்பை அமைக்க முடியவில்லையே! உலகத்தில் நம் நாட்டில் மட்டும்தான் கலாசாரம், கலை இருந்தது என்று சொல்வது முட்டாள்தனம். ப்ரான்சில் 'வெர்சாய்' அரண்மனை, லண்டனில் 'செயின்ட் பால்' என்று உலகெங்கும் மனிதன் படைப்பாளியாகத் தான் இருந்திருக்கிறான். ஆனால், ஐரோப்பா 'dark ages'ல் காட்டுமிராண்டித்தனமாக இருந்தபோது, செந்தமிழ்நாட்டில் மிக பண்புடைய, அறிவுடைய, தெய்வபக்தியும், தர்ம சிந்தனையும் உள்ள ஒரு அரசன் நெறி வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது! :) உலகில் எத்தனையோ பெரிய அரசர்கள் இருந்தாலும், தர்மத்துக்கு தலைவணங்கி ஆட்சி செய்தவர்கள் இந்தியாவில் தான் இருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தனக்கென்று அரண்மனைகளையும், மாடமாளிகைகளையும் அமைத்துக் கொள்ளாமல், சிவனுக்கு ஆலயம் அமைத்திருக்கிறான் ராஜராஜன். செந்தமிழில் நால்வர் பொழிந்த அமுதான தேவாரப்பாடல்களை அழியாமல் மீட்டு கொடுத்து 'சிவபாதசேகரன்' என்ற பட்டம் பெற்றவன். பெளத்தமும், ஜைனமும் தலைதூக்க விடாமல் சைவமதம் தழைத்தோங்குவதற்கு அடிகோலியவன். அந்த கால தமிழர் நாகரீகமும், கலையும், பக்தியும் உலகமறியும் சின்னமாகவே தஞ்சை பெரிய கோவிலை அமைத்திருக்கிறான். முயற்சி வீண்போகவில்லை! இன்றும் கம்பீரமாக இராஜராஜன் பெயரை சொல்லி வானளாவி நிற்கிறது பெரிய கோவில்.

11 பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. இன்னும் இரண்டு பாகம் வரும். நிச்சயமாக ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பின்குறிப்பு:

'பொன்னியின் செல்வன்' ரசிகர்களுக்கு ஆதித்த கரிகாலன் கொலைக்கு யார் காரணம், அவர்கள் என்ன ஆனார்கள், உத்தம சோழன் ஆட்சி எப்படியமைந்தது, வந்தியத்தேவன் என்னவானான் என்ற பல கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது..:) நீங்கள் எதிர்பார்க்காத பதிலாகக் கூட இருக்கலாம்!

திங்கள், ஜனவரி 09, 2006

காட்டழகிய சிங்கபெருமாள்

திருவரங்கத்துக்கும் திருவானைக்காவுக்கும் நடுவில் ஒரு இரயில்வே க்ராசிங் உள்ளது. திருவரங்கம் இரயில்நிலையம் அருகே இருக்கும். அதைத் தாண்டி அப்பால் சென்றால் திருவானைக்கா. திருவரங்கம் கிழக்கு வெள்ளை கோபுரத்துக்கு நேர்கோட்டில், திருவானைக்கா பக்கத்தில் உள்ளது ஸ்ரீ காட்டழகிய சிங்கபெருமாள் கோவில். பெரிய ஆடம்பர கோபுரங்களோ, மாடங்களோ எதுவும் இல்லாத மிக எளிமையான கோவில். அண்மையில், மூன்று வருடங்களுக்கு முன்னால் கும்பாபிஷேகம் செய்வித்தார்கள். திருவரங்கம் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த கோவில்.

பெருமாள் அழகிய நரசிம்மமூர்த்தியாக காட்சியளிக்கிறார். இடது தொடையில் தாயாரை மடியில் வைத்து, ஒரு கையால் அணைத்து கொண்டு இருப்பார். இன்னொரு கையால் அபயஹஸ்தம் அளித்துக்கொண்டிருப்பார். பெரிய, தத்ரூபமான மூர்த்தி. என்னதான் பயமுறுத்தும் தோற்றமுடையவராயிருந்தாலும், முகத்தில் ஒரு புன்முருவல் பூத்திருக்கும்.

முன்காலத்தில், இப்பகுதிகளில் அடர்ந்து மண்டி கிடந்த காடுகளில் யானைகள் அட்டகாசம் தாங்காமல், காட்டினிடையே சிங்கபெருமாள் கோவில் அமைத்திருக்கிறார்கள். கேசரி கஜராஜனுக்கு இயற்கை பகைவனாயிற்றே? நான் ஸ்ரீரங்கம் சென்ற புதிதில், எனக்கு மிகவும் பொழுது போகாது. பெரிய நகரங்களில் உள்ள பொழுது போக்குகளோ, hang-outs அங்கு கிடையாது. சரித்திரத்திலும், அந்தகால கோவில் கட்டிடக்கலையிலும் ஈடுபாடு உண்டென்பதால், திருச்சியை சுற்றியிருக்கும் பல கோவில்களை சென்று பார்ப்பதிலேயே பொழுது போக்குவேன்.

ஒரு நாள், திருவரங்கம் கோவிலில் கூட்டம் ஆளை நெரித்துவிடும் போல் இருந்தது. கோவிலிருந்து விடுபட்டு, சற்று காற்று வாங்கினால் போதும் என்று எனக்கு ஆகிவிட்டது. அதனால், ஒரு நோக்கமே இல்லாமல், திருவரங்கம் இரயில் நிலையத்தை பார்த்து நடந்தேன். அங்கு சற்று காற்று வரும். அந்த நேரத்தில், எந்த வண்டியும் வராது. அப்போதெல்லாம், மனத்தில் அமைதியில்லாமல் எதையோ நினைத்து தவித்த காலம். கொஞ்சம் தனிமையில் இருக்கலாமே என்று சென்றேன். அப்போது தூரத்தில் விளக்கு எரிவது தெரிந்தது. அதை நோக்கி கால்போன போக்கில் நடந்தேன். சென்றால், காட்டழகிய சிங்கர் கிடைத்தார்!

அப்போதெல்லாம் அந்த கோவிலில் அதிக ஜனநடமாட்டம் கிடையாது. வெரிச்சோடியே இருக்கும். சாந்தி குடிகொண்டிருக்கும். ஸ்ரீரங்கத்தின்அலை மோதும் ஜன சமுத்திரத்துக்கு நடுவே ஒரு அமைதித்தீவாகவே அந்த திருக்கோவிலை நாடி செல்வேன். இப்போதெல்லாம், அங்கும் கூட்டம் ஜாஸ்தியாகிவிட்டது. ஒரு வகையில் நல்லது தான். வருகிற திரவியத்தால் கோவில் திருப்பணி நடக்க உதவுமே!

நாளை வைகுண்ட ஏகாதசி உத்சவம். திருவரங்கத்தின் சுவர்க்க வாசல் திறக்கும். திருவரங்கம் வைகுண்டமாக உருவெடுக்கும். காவிரி, வைகுண்டத்தின் விராஜ நதியாகவே மாறி விடுவாள். எல்லோருக்கும் எனது தாமதமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!