வியாழன், மார்ச் 19, 2009

அம்மாவின் அடுப்பறை

'வாய் வாழ்தலைன்னாலும் வயிறு வாழ்த்தும்' என்று சொல்லி நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் உள்ளத்தளவில் உணர்ந்ததில்லை -- சில மாதங்கள் முன் வரை. Lexington-இல் நான் வந்த புதிதில் தென்னிந்திய உணவகங்கள் கிடையாது. Cincinnati-இல் 'உடிபி' தான் அருகாமையில் உள்ள உணவகம். மாணவியாய் இருந்த காலங்களில் கையில் பணமும், வாகனமும் கிடையாது. ஏதோ ஒரு படத்தில் SVe சேகர், கோழி படத்தை பார்த்து சப்பிக் கொண்டே வெறும் சாதம் சாப்பிடுவான். அந்த மாதிரி, நாக்கில் எச்சில் ஊற எல்லோரும் 'உடிபி'-யை நினைத்துக் கொண்டு, ஏதோ ஒன்று சமைத்து சாப்பிடுவோம். பின்னர், நண்பர்கள் எல்லோரும் பல தடவை 'உடிபி' சென்று சாப்பிட்டோம். மிக சுமார் ரக உணவு. ஆனாலும் ஏதோ இந்த மட்டும் தோசை, இட்லி கிடைத்தே என்று சாப்பிடுவோம். பின்னர், Lexington-இலும் பல தென்னிந்திய உணவகங்கள் வந்துவிட்டன. Familiarity breeds contempt. எப்போதாவது போவதோடு செரி.

நிற்க. இதெல்லாம் 6 மாதம் முன்பு வரை. அப்போது தான் 'உடிபி' 'Amma's Kitchen'-ஆக மாறிவிட்டதாக கேள்விப் பட்டோம். சரி, என்ன தான் இருக்கிறது என்று போய் பார்த்தோம். பார்த்ததோடு மட்டும் இல்லாமல் ஒரேயடியாய் கவிழ்ந்தோம்! அருமையான 'வீட்டு சாப்பாடு'. லஞ்ச் Buffet-க்கு போனால் அப்படியொரு variety, அப்படியொரு மணம், சுவை! பல காலமாக கண்ணால் கூட பார்க்காத தென்னிந்திய 'பரோட்டா', 'இடியாப்பம்', 'சேவை', அசல் 'குர்மா' ஆகிய அயிட்டங்களை பார்த்தே பசி தீர்ந்து விடும் போல இருந்தது. அதை தவிர, சுடச்சுட தோசை பரிமாறுவார்கள். சமையல்காரர் மதுரை என்று அறிந்தோம். நிஜமாகவே 'நள பாகம்' செய்கிறார்! பல முறை போயிருக்கிறோம். ஒரு தரம் கூட சுவை அப்படி இப்படி குறை சொல்லி விட முடியாது! இதில் என்ன விசேஷம் என்றால் வயிற்றையும் ஒன்றும் செய்து விடாது.

அமெரிக்கா-வில் பல உணவகங்கள் ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். போகப் போக சகிக்காமல் ஆகிவிடும். 'Ammas Kitchen' மட்டும் இது வரையில் அப்படி ஆகவில்லை. அதுவே ஒரு பெரிய வெற்றி! சென்ற வாரம் கூட அங்கு சென்று நன்றாக ஒரு வெட்டு வெட்டினோம். சாப்பிட்டு முடித்த பின்னர் வயிறு மனமார சமையல் செய்தவரை வாழ்த்தியது! அம்மாவின் சாபாட்டை உண்டு பல வருடங்கள் ஆகி நாக்கு ஏங்கி போயிருக்கும் என்னைப் போன்ற NRI மக்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் -- சுவையான உணவுக்காக மட்டும் அல்ல; அந்த உணவு நினைவுப் படுத்தும் அம்மாவின் நினைப்பிற்கும் தான்!

புதன், மார்ச் 18, 2009

என்றும் ராஜா!

அமெரிக்காவுக்கு வந்து இதோட அஞ்சு வருஷம் ஆச்சு. ஆனாலும் இந்த ஊரு குளிரு நமக்கு பழக்கமாகலை! திருச்சில மலைக்கோட்டை ஓட கானல் புழுக்கததுலயும், சென்னையோட அக்னி நட்சத்திர தாக்குதல்லயும் 22 வருஷம் இருந்துட்டு, இங்க வந்து குளிருல சமாளினா முடிய மாட்டேங்குது. இந்த winter-ல தான் நெறைய இந்தியாவை மிஸ் பண்ணுவேன்!

போன வருஷம் ஒரு நாள் 'ஐயோ இந்தியா போக மாட்டோமானு' ஒரே சோகமா ஒக்காந்திருந்தேன். அப்போ "Raaga.com"-ல 80s சேனல் playlist ஒண்ணு தட்டி விட்டேன். அதுல,

"கொடியிலே மல்லிக பூ மணக்குதே மானே!" -ன்னு பாட்டு.

உண்மையிலே காதுல தேன் வந்து பாய்ஞ்ச மாதிரி இருந்தது. இளையராஜாவின் அருமையான கிராமத்து இசை கண் முன்னால தமிழ்நாட்டோட கிராமங்களை கொண்டு வந்து நிறுத்திடிச்சு! எ.ர. ரஹ்மான் என்ன தான் 'ஆஸ்கார்' வாங்கினாலும், அவரோட பாட்டு எனக்கு என்னிக்குமே தமிழ்நாட்டை குறிப்பா ஞாபகப் படுத்தாது. அந்த இசையை மும்பை, டெல்லி, calcutta எங்க வேணும்னா கேக்கலாம், பொருத்தலாம். ஆனால் இளையராஜா ஓட பாட்டுல ஒரு distinct, un-mistakable தமிழ் மணம்!

ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஒரு இசையானது கடந்து சென்று, ஒரு மனிதனின் உள்ளத்தை தொட்டு, உவகை ஊட்டி , அப்படியே அள்ளிச் சென்று தாய்நாடு மடி சேர்கின்றதென்றால் அதைவிட ஒரு கலைஞனுக்கு பெரிய விருது வேறு என்ன இருக்க முடயும்?!

வாழ்க இளையராஜா!

ஞாயிறு, மார்ச் 15, 2009

ஸ்ரீமான் சுதர்சனம்

நேற்று இரவு தேவன் எழுதிய 'ஸ்ரீமான் சுதர்சனம்' நாவலை படித்து முடித்தேன். ஆரம்பத்தில் சற்று மெதுவாக கதை ஆரம்பித்தது. என்னடா இது, ஒருவன் வீடு மாறுவதைப் பற்றியும், வாடகை குடுப்பதைப் பற்றியும் ஒரு கதையா என்று இருந்தது! ஆனால் போக போக கதை மிக அருமை!

௧௯௩0 காலங்களில் ஒரு மனிதனுக்கு என்ன மாதிரியான வாழ்க்கை, எவ்விதமான அபிலாஷைகள் எல்லாம் அவனுக்கு இருக்கும், என்ன மாதிரி கஷ்டங்கள் எல்லாம் அவன் சந்தித்திருப்பான் என்று மிக அருமையான வர்ணனை. ௨00௯-இல் இதை படிக்க போனால் அந்த நாட்களில் அவர்கள் பிரச்சினை எல்லாம் மிக சாதாரணமானவை என்று தோன்றுகிறது!

கோமளம் ரூ.78-க்கு புடவை வேண்டும் என்று ஆசைப் படும் இடம் மிக பாங்கு! சுதர்சனத்தின் மாப்பிள்ளை 'குடவாசல்' படுத்தி வைக்கும் பாடு, சுதர்சனத்தின் அம்மா சௌந்தரம் கோமளத்ததை குத்தி காமிப்பது, மகன் எங்கே பொண்டாட்டி தாசன் ஆகி விடுவானோ என்று சுதர்சனத்தின் தாய் தந்தையர் கவலை படுவது என்று கதை முழுதும் எங்கும் எதார்த்தம்!

இந்த fast-food உலகத்தில், இப்படி ஒரு கதை படித்தது lexington-இல் காவிரியின் கோடைத் தென்றல் அடித்து போன்ற ஒரு உணர்வு! :)

செவ்வாய், மார்ச் 06, 2007

இன்று போய் நாளை வா...

உடையாரை ஒரு வழியாக படித்து முடித்து விட்டேன். எழுத்துப் பிழைகளும், வர்ணனைப் பிழைகளும், பெயர் பிழைகளும் இருந்தாலும், கதை மிக அழகாக அமைந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் மிகையான நடை இலேசாக கசந்தது..இராஜராஜனும் இன்னும் பல மன்னர்களும் சேர்ந்து வளர்த்து கொடுத்த தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் இன்று நாம் அழித்துக்கொண்டிருக்கிறோமோ என்ற ஒரு சிறு கவலையும் வந்து கவ்விக் கொள்கிறது!

இந்த வலைப்பூவில் அடிக்கடி பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டிருக்கிறேன். எதைப் பற்றி எழுதலாம், என்னென்ன எழுதலாம் என்று அன்பர்கள் idea கொடுத்தால் நன்றாக இருக்கும்! :) ஆகையால், வாசகர்களே, இன்று போய் நாளை வந்து இந்த வலைப்பதிவை அடிக்கடி பார்க்கவும்...

ஞாயிறு, செப்டம்பர் 24, 2006

திருவிடைமருதூர்

"தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண்சூழ் பழியைப்
போக்கும் இடைமருதிற் பூரணமே." - அருட்பா

எனக்கு சோழநாட்டு திருத்தலங்கள் மீது தனிப் பற்று. அதை நான் இன்று சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை! இந்த மின்பதிவில் அதைப்பற்றி எழுதி எழுதியே உங்களை எல்லாம் ரம்பம் போட்டிருக்கிறேன்..:) பல வாசகர்கள் என்னுடைய மின்பதிவில் இதையே குறையாகக் கூறியிருக்கிறார்கள்...:) எப்பொழுதும் கோவில்கள் பற்றியே எழுத
வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சில விஷயங்கள் ரத்தத்திலே கலந்தவை.

நான் சிறு வயதில் மதுரை, சென்னை, ஒரிஸ்ஸா என்று பல இடங்களில் வசித்திருக்கிறேன். 'என்னுடைய ஊர் இது' என்றெல்லாம் எந்த ஒரு ஊரையும் நினைத்ததில்லை. திருச்சியில் நான்கே ஆண்டுகள் இருந்தாலும், அந்த ஊரிலும், அதன் சுற்றுப்புறங்களுலும் ஏற்ப்பட்ட ஒரு பற்று வேறு எந்த இடத்திலும் எனக்கு இல்லை. 'இதுதான் உன் வீடு. இதுதான் உன் மண்' என்று ஒரு நினைப்பு பலமாக அடிக்கடி தோன்றும். பேருந்தில், கல்லூரி முடிந்து ஸ்ரீரங்கம் செல்லும்போது, காவிரிப் பாலத்தை தாண்டவேண்டும். அந்த இரண்டு நிமிடத்துக்காக தினம் காத்திருப்பேன். காவிரியை கடக்கையில், அந்த வளமான நதியையே ஆசையோடு பார்ப்பேன். மனதில் ஒரு அமைதி பரவும்.

இந்த உணர்வு ஒரு மனிதனுக்கு ஒரு இடத்தில்/ஊரில் மட்டுமே தோன்றும். அதை ரத்தத்தில், நாடி நரம்பில், மனதில், ஊனில் உணர முடியும். இந்த உணர்வு தரும் ஒரு adrenalin rush-ல் தான், கார்கிலில் போர்வீரர்கள் சண்டையிட்டனர். "இது என் தாய்மண். என்னுடைய மண்" என்கிற உணர்வின் பலத்தாலேயே ஒரு போர்வீரன் வெற்றிவாகை சூடி, 'Yeh Dil maange more!" என்று கர்ஜித்தான். 'சோறுடைத்த சோழநாடு' என்று போற்றப்படும் தஞ்சை ஜில்லாவில், எங்கு சென்றாலும் எனக்கு இந்த உணர்வு தான் மேலோங்கும். அதனாலேயே, எனக்கு அதைப் பற்றி எழுதுவதில் ஒரு சுகம். வாசகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்! :)

திருவிடைமருதூர் வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம். காவிரி கரையில், வயல்களுக்கு நடுவே உள்ள அழகிய தலம். வரகுண பாண்டியன் கோவிலுக்குள் செல்லும்போது, பிரம்மஹத்தியை வாசலிலேயே நிறுத்தி வைத்துவிட்டு 'இதோ திரும்பி வருகிறேன்' என்று கூறிவிட்டு உள்ளே சென்றானாம். ஈசனை வழிபட்டு, இன்னொரு வாயில் வழியாக வெளியேறி பிரம்மஹத்தியை ஏமாற்றிவிட்டானாம்! இன்றும் அந்த பிரம்மஹத்தி காத்துக் கொண்டிருக்கிறது. ஆகையால், கோவில் நுழையும் அதே வாசலால் திரும்பக் கூடாது என்று ஐதீகம்.

தலைமருது (ஸ்ரீசைலம் - ஆந்திரா - மல்லிகார்ச்சுனம்), இடைமருது (திருவிடைமருதூர் - மத்தியார்ச்சுனம்), கடைமருது (திருப்புடைமருதூர் - நெல்லை மாவட்டம் - புடார்ச்சுனம்) என்று மூன்று தலங்கள். ஸ்ரீசைலத்துக்கும், திருப்புடைமருதூருக்கும் இடையில் இருப்பதாலேயே இடைமருது என்று அழைக்கப்படும். மருது (அர்ச்சுனம்) என்றால் மருதமரம். இதுவே தல விருட்சம். சுவாமி - மகாலிங்கேசுவரர், மருதவனேஸ்வரர். பெரிய லிங்க வடிவு. மிக, மிக அழகான கோவில். அதை விவரிக்க முடியாது. வயல்களுக்கு நடுவே, ஒரு சிறிய ஊரின் நடுவில், அமைதியான, பிரம்மாண்டமான சிவன் கோவில்.

பிரகார சுற்றில், கர்ப்பகிரகத்திற்கு பின்னால், இராவணன் கைலாய மலையை கைகளில் தாங்குவது போன்ற சிலை இருக்கிறது. ஈசன் காலால் அழுத்த, வலியில் நரம்பையே வீணையாக்கி, சாம கானம் பாடும் காட்சி. காம்போதி ராகம் பாடி சிவனார் மனம் குளிரவைத்தான். இன்றும், இரவில் அங்கு வந்து காதை தீட்டிக் கொண்டு கேட்டால், சாம கானம் கேட்கும் என்று சொன்னார்கள். எனக்கு ஒன்றும் கேட்கவில்லை...:)

இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு, இதை மையமாக வைத்து, இதைச் சுற்றி 'பரிவார தலங்கள்' உள்ளன. என்னளவில், தல மகிமை எல்லாம் மீறி, எனக்கு இந்த தலத்தை பிடிக்க ஒரு தனி காரணம் உண்டு...:) இராஜராஜ சோழன், பட்டத்துக்கு வருமுன், இந்த மகாலிங்கத் தலத்துக்கு வந்தான். 'மகாலிங்கம்' என்று பெயரைக் கேட்டு, மிக பிரம்மாண்டமான லிங்கம் இருக்கும் என எதிர்ப்பார்த்தானாம். அவனுக்கு சற்று ஏமாற்றம். 'உண்மையிலேயே ஒரு மகா லிங்கத்தை நான் ஸ்தாபிக்கிறேன். ஒரு மகா பெரிய கோவிலை இந்த ஈசனுக்கு நான் அர்ப்பணம் செய்கிறேன்' என்று உறுதி பூண்டான். அதுவே பிற்காலத்தில் தஞ்சை பெரிய கோவிலாக உருவெடுத்தது. இந்த ஒரு சம்பந்தத்தாலேயே, எனக்கு இந்த கோவில் பிடிக்கும்..:) இது அரசபக்தி...1000 காலம் ஆனாலும், இராஜராஜ சோழன் ஆண்ட அந்த மண்ணில் வசிக்கும் எவனுக்குமே இருக்கும் இந்த அரச பக்தி. இன்றும் தஞ்சையில் அருண்மொழி வர்மனின் பிறந்த நட்சித்திரமான 'ஐப்பசி சதய'த்தன்று மிக விமரிசையாக விழா நடத்துவார்கள்.

இராஜராஜ சோழனின் குருவான கருவூர்த்தேவராலும் பாடல்பெற்ற தலம் திருவிடைமருதூர். அண்மையில் "Temples of India" documentary-ல் ராஜராஜசோழனோடு ஒரு வயதான ஜடாமுடி முனிவரின் வரைபடமும் கண்டுபிடித்ததாக காண்பித்திருந்தனர். அவரே கருவூர்த்தேவர். அவர் இயற்றிய 'திருவிசைப்பா' ஒன்பதாம் திருமுறையை சேர்ந்தது.

இந்திர லோக முழுவதும் பணிகேட்(டு)
இணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாகம் மேகலை அரையா
அகந்தொறும் பலிதிரி அடிகள்
தந்திரி வீணை கீதமும் பாடச்
சாதிகின் னரங்கலந்(து) ஒலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும்
மருவிடம் திருவிடை மருதே.

இவர் தஞ்சை பிருகதீஸ்வரர் கோவிலைப் பற்றியும் பாடியுள்ளார்.

குடந்தை, மயிலாடுதுறை அடுத்த முறை சென்றார், நிச்சயாமாக போய் தரிசிக்க வேண்டிய இடம்!

ஞாயிறு, ஜூலை 16, 2006

என்ன ஆச்சு நம்ம பெண்களுக்கு?

அனுராதா ரமணன் விகடனில'என்ன ஆச்சு நம்ம பெண்களுக்கு?' என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சென்ற மாதம் தமிழகத்தை உலுக்கிய இரு கொலைகள் - கொலையாளிகள் இருவருமே பெண்கள் - இந்த கட்டுரைக்கு தூண்டுதல். இதில் அவர் கூறியிருக்கும் பல காரணங்கள் சரியே. கூட்டுக் குடும்பம், யந்திர வாழ்க்கை எல்லாம் இருந்தாலும் ஒரு முக்கியமான கேள்வி யாரும் எழுப்பவில்லை. ஒரு பெண் பிடிக்காத ஒருவனை மணக்கும்படி நேர்ந்தது எப்படி? காதலனை கைப்பிடிக்காமல் ஏன் இன்னொருவனை மணக்கிறாள்? மனது ஒத்துப்போகாத ஒருவனை மணப்பதால்தானே இத்தனை பிரச்சனைகளும்?

நமது நாட்டில் 'காதல்' என்பதே கெட்ட வார்த்தையாக இருக்கிறது. காதலித்து மணப்பது என்பது ஒரு taboo-வான விஷயம். திருமணமான பின்பு கூட கணவன் - மனைவிக்குள் 'காதல்' என்று நினைத்தால் கூட, "அடடா, என்ன அபத்தமா பேசிகிட்டு. அன்பு இருக்கலாம். சும்மா காதல் கத்திரிக்காய் என்பதெல்லாம் சினிமாகாரங்களுக்கு!' என்று விட்டேத்தியாக பேசுவது நான் பலமுறை கேட்டிருக்கிறேன். மகனோ/மகளோ வேறு ஜாதிப் பெண்ணை/பையனை விரும்புகிறாள் என்று தெரிந்தும், கட்டாயமாக வேறு ஒருவருக்கு மணமுடிப்பதேனோ? இதுதான் நாகரீகமா?

இதற்கு கொலைதான் முடிவு என்று சொல்லவில்லை..ஆனாலும், சும்மா 'கலாசாரம்', 'பெண்மை', 'கற்பு' என்ற வார்த்தைகளை இந்த விஷயத்தில் இழுக்க தேவையில்லை. Arranged மேரேஜ் செய்து கொண்டு, மனது ஒத்துக்கொள்ளாமல், ஏதோ arranged-ஆகவே வாழ்க்கையை யந்திரத்தனமாக நடத்துவதால் வரும் விபரீதங்கள் இவை. அந்த காலத்தில் இப்படியெல்லாம் இல்லையே என்று சிலர் கூறுவார்கள். கூட்டு குடும்பத்தில், மாமியார்/மாமனார்/நாத்தனார்/கொழுந்தினன் குட்டுக்கு சதா சர்வகாலமும் பயந்து வாழ்ந்தால் கணவனின் காதல் பற்றி யோசிக்க நேரமேது? நல்ல மருமகளாக பெயர் எடுக்கும் முயற்சியிலேயே வாழ்க்கை ஓடிவிடும். இல்லையென்றால், அவர்கள் வீட்டை விட்டு துறத்திவிட்டால், ஏது நாதி? அக்காலத்தில், பெண்களுக்கு நிதி சுதந்திரம் இல்லாததே அவர்கள் வீட்டை விட்டு வெளியேற பெரும் தடையாக இருந்தது என்பது என் கருத்து. It all boils down to choices and options. அதை விடுத்து, அந்த கால வாழ்க்கையை idealize செய்வது என்பது என்னால் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று.

திருமணத்திற்கு பின் உறவினர்கள் எல்லோரும் நல்லவர்களாகவே அமைந்துவிட்டால், கூட்டு குடும்பம் போல் ரம்மியமான வாழ்க்கை வேறெதுவும் இல்லை. கூட்டு குடும்பத்தில் என் தாய் பட்ட பாட்டை நான் பார்த்திருக்கிறேன். ஒரு சிலர் கத்தி போன்ற நாக்கும், சுட்டெரிக்கும் பார்வையும் கொண்டிருந்தால், மருமகளுக்கு என்றுமே நரகம் தான்.

ஒரு வாதத்தில் என்றுமே ஒருவர் மேல் மட்டுமே தவறு என்று இருந்துவிட முடியாது. இன்று இப்படி கொலைகள்/adultery நடப்பதற்கு பெண்களை மட்டுமே தவறு கூறிவிட முடியாது. என்ன தவறு நடந்தது என்பதை அமைதியாக யோசிக்க வேண்டும்....

வெள்ளி, ஜூன் 02, 2006

இது வசந்த காலம். குளிர்காலம் நீங்கிய களிப்பில், முகம் தெளிந்து இருக்கிறாள் வான மங்கை. அதிகாலையில், அருணோதயத்தில், சூரியதேவனைக் கண்டு நாணி அவள் முகம் சிவந்திருந்தது. சூரியன் வானில் சிம்மாசனத்தில் ஏற ஏற, வானதி தன் வெட்கம் மறந்து அவனது அணைப்பில் நீல நிறமாக பொலிகிறாள்! மறையும் மதியும், ஜொலிக்கும் நட்சத்திரங்களையும் அணிகலனாக பூண்டு சிரித்து மகிழ்கிறாள்.

அவளது அழகைக் கண்டு பூமியில் உயிரினங்கள் முகம் மலரும். கவிகள் பாடல் புனைவார்கள். ஆனால் அழையா விருந்தாளியாக வருணன் அவ்வப்போது வானவீதியில் குடியேறிவிடுகிறான்! சூரியதேவனை மறைத்துவிடுகிறான்! அழையாமல் அவன் வந்ததால் வானதியின் களியாட்ட திருக்கோலத்துக்கு ஒரு அவசர தடங்கல். வான மங்கை முகம் சுளித்து, புருவம் நெறித்து, கோபப்படுவதால் திருமுகம் கருத்ததோ? காதலனிடமிருந்து பிரிந்ததனால், ஆபரணங்களை விடுத்து, கார்முகில்களையே பூணுகிறாள் வானதி!

வருணனும் சளைத்தவன் இல்லை. காற்றை துணைக்கு அழைக்கிறான். தன் அழகிய கோலம் கலைந்ததால், சற்று நேரத்தில் வானதியின் இந்த கோபம் கண்ணீராய் மாறக்கூடும். பின்பு, அவளின் உக்ர தாண்டவமே! அவள் கண் வெட்டுகள் மின்னலாய் வானைப் பிளக்கும். அவள் கோப சிணுங்கல் இடியாக முழங்கும். உலகம் நடுங்கும்.

வானதி, இந்த போர்க்கோலமும் உனக்கு அழகாகவே இருக்கிறது! உனது கோபமும், கண்ணீருமே பூமிக்கு உயிர் தரும்! பஞ்சபூதங்களில் மூன்று மோதிக்கொண்டால், நான்காவதான நிலமகள் களிப்படைவாள். இலையும், கிளையும், புல்லும், பசுவும் வானம் பார்த்து நன்றி கூறும்! பசுமை செழிக்கும்! வானதி, வருணனும் காற்றும் உன் வெறியாட்டம் கண்டு ஓடுவார்கள். மறுபடியும் சூரியதேவனை கண்டு நீ முகம் மலர்வாய்!

வானும், மண்ணும், காற்றும், கடலும் பேதம் பார்ப்பதில்லை என்று கூறுவார்கள். அமெரிக்காவில் தான் நான் நிறைய மழையை பார்த்திருக்கிறேன். இருந்தாலும், 'மழை' என்றவுடன் என் மனது இந்தியாவின் மழைக்காலகாட்சிகளையும், வாசனைகளையுமே அசைபோடுகின்றன...

மாலை வேளையின் வெயில் களைப்பு தீர்க்க விழும் ஜில்லென்ற கோடை மழை...
சட்டென்று குளிர்ந்துவிடும் பூமி...
'கம்' மென்று கிளம்பும் மண் வாசனை....
மழையில் புத்துயிர் பெற்று, வாசம் வீசும் மலர்கள்....
புழுதி நீங்கி பளீர் பச்சையாக காட்சியளிக்கும் இலைகள்...
வருடிச்செல்லும் மெல்லிய, குளிந்த காற்று...
அங்காங்கே, தெருவில் தேங்கி கிடக்கும் குட்டைகள்...
அதில் விளையாடும் சிறுவர்கள்...
லேசான குளிருக்கு இதமாக, டீக்கடைகளில் கூட்டம் கூட்டமாக சூடாக மசாலா டீ அருந்தும் கும்பல்...
மிளகாய் பஜ்ஜி விற்கும் கடைகளில் சிரித்துக் கொண்டிருக்கும் இளசுகள் கூட்டம்....

இந்த மண்வாசனைக்கு கூட பேதம்! இந்திய மண்ணின் வாசனையே தனி...அது கலப்படம் இல்லாத மண்ணின் வாசம். இங்கோ பெர்டிலைசரும், மருந்தும் கலந்து மண் வாசம் எழுகிறது. மனது லயிக்கவில்லை!

செவ்வாய், மார்ச் 21, 2006

காதல்- 2

நான் நினைத்த மாதிரியே, வெகு நாட்கள் எழுதமுடியாமல் போய்விட்டது. வாசகர்கள் பொறுத்துகிட்டதுக்கு நன்றி! :)

"காதல் ஒரு தேவையில்லாத எமோஷன் என்பது எனது அசைக்க முடியாத நம்பிக்கைகளில் ஒன்று."- சுஜாதா.

அண்மையில், சுஜாதா ஆ.வி யில் காதலைப் பற்றி எழுதிய மற்றுமொரு கட்டுரை படித்தேன். மனிதர், காதலை அக்குஅக்காக பிரித்து எடுத்து, 'அது வெறும் இயற்கையின் தூண்டுதலுக்கு கொடுக்கப்பட்ட நாகரீகப் பெயர்' என்ற ரேஞ்சுக்கு எழுதியிருந்தார்! விஞ்ஞான பூர்வமாக உண்மைதான். ஆனால், அப்படி பார்த்தால் மனித உடலென்பதே வெறும் ரசாயனங்களின் விளையாட்டு. மனித மனது என்று ஒரு வஸ்து கிடையவே கிடையாது. அது பல ந்யூரான்களின் இணைப்பால் விளையும் மின்சக்தி பிரவாகம். ஒவ்வொரு விதமாக அந்த பிரவாகம், நியூரான்கள் வழி சென்றால் (Neuronal pathways), ஒவ்வொரு விதமான எண்ணம்/உணர்ச்சி மனதினில் உருவாகிறது. இப்படியெல்லாம் யோசித்தால், அப்புறம் எல்லாமே மாயை என்கிற ரீதியில் தோன்றிவிடும். 'எல்லாம் மாயை' என்பது உயர்ந்த சித்தாந்தம். அதை மனதின் ஒரு மூலை உணர்ந்தாலும், அதை முழுமையாக ஏற்றுக் கொள்ள மனப்பக்குவம் வேண்டும். அதனால், என் சிறு மூளைக்கு எட்டியவரை 'காதல்' என்று ஒன்று இருக்கிறது என்றே வைத்து கொள்கிறேன்..:)

ஆனால் எதை 'காதல்' எனக் குறிப்பிடுகிறோம்? ஆங்கிலத்தில் எல்லாவற்றையுமே பொதுப்படையாக 'love' என்று தான் கூறுவார்கள். நடைமுறைத் தமிழில் அப்படியல்ல. இருபாலருக்கிடையே ஏற்படும் romantic love மற்றுமே இப்போது 'காதல்' என அழைக்கின்றனர். ஆனால், காதலோ பல வகைப்பட்டது. நம் தாய் தந்தையரிடம் வைக்கும் பாசம், கால்நடை பிராணிகளை பார்த்து ஏற்படும் பரிவு, வீட்டில் பூனை நாய்களிடம் காட்டும் பிரியம், நண்பர்களிடம் பாசம், யாரோ ஒரு வழிப்போக்கரிடம் ஏற்படும் பச்சாதாபம் எல்லாமே காதலின் பரிணாமங்கள் தான்!

"காதலாகி கசிந்து கண்ணீர் மல்கி
ஓதுவார் தம்மை நன்னெறிக்குய்ப்பதுவும்
வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாவதும்
நாதன் நாமம் நமச்சிவாயவே!"

என்று அப்பர் பெருமான் தேவாரத்தில் பாடியதும் காதல் தான்! ஆனால் அதை கொச்சையாகப் பார்க்க தோன்றுகிறதா? நான் என்ன சொல்ல வரேன்னா, ஒரு வகையிலாவது காதலை உணராதவர்கள் உலகில் இல்லை. ஆனால் அதற்கு வேறு பெயர் சூட்டி அழைக்கலாம்.இதைத் தான் சுஜாதா கூறியிருக்கலாம்.

அதற்காக காதல் தெய்வீகமானது என்று எல்லாம் டயலாக் அடிக்க விரும்பவில்லை! என்னை பொறுத்த வரையில் காதலைப் பற்றி ரொம்ப ஓவராக ஹைப் கொடுத்து, டயலாக் அடிச்சே கெடுத்துட்டாங்க. எதிர்ப்பாலரிடம் ஈர்ப்பு ஏற்படுவது இயற்கை. வாழ்க்கையின் ஒவ்வொரு நிலையை நாம் கடந்து செல்ல செல்ல, அந்த ஈர்ப்பும் உருமாறும்; அன்பும் வேறு வகையாக வளரும். Growing old together is perhaps the best way to describe love. 'நான் வானத்தில் குதித்தேன். நிலவை பிடித்தேன். ஆகாசத்தில் பறந்தேன்' என்று சொல்வதெல்லாம் கவிதைக்காக. அப்படி அக்னி ஜ்வாலையாக, மனிதரை அழிக்கும் வகையிலும் காதல் பிறக்கலாம். அதற்காக, 'எனக்கு அப்படியெல்லாம் தோன்றவில்லை. அதனால் எனக்கு காதல் இல்லை' என்று நிறைய பேர் உண்மை அன்பை நிராகரித்ததையும் பார்த்திருக்கிறேன். அமைதியாக, ஆரவாரம் இல்லாமல், தீபத்தில் சுடர்விடும் அழகிய நெருப்பு முத்து போல் மிதக்கும் காதலும் ஏற்படலாமே?!?!

இந்த கதைக்கு பல பேர் தங்கள் கருத்துக்களை எழுதியிருக்கிறீர்கள். எனக்கு விதியில் நம்பிக்கை உண்டு. அன்பின் சக்தியிலும் நம்பிக்கை உண்டு. Faith moves mountains, என்று ஆங்கிலத்தில் ஒரு வாக்கியம் உண்டு. ரோசாலியின் அபிரிமிதமான நம்பிக்கைக் காரணமாக விஞ்ஞானி பிறக்கிறாரோ? கடவுளே இல்லை என்று நினைத்த விஞ்ஞானிக்கு, கடைசியில் கடவுள் முன் நிற்பதே ஒரு irony. ரோசாலியின் அன்பின் பிணைப்பு ஒரு வேளை அவரை பூமிக்கு கட்டுண்டு இழுத்திருக்கலாம்! எத்தனையோ விதத்தில் விவரிக்கலாம். உங்கள் எண்ணங்களும் சரியென்றே தோன்றுகிறது! விஞ்ஞானத்துக்கும், சாத்திரத்துக்கும் அப்பாற்பட்ட அன்பின் சக்திதான் இந்த உலகை ஆட்டுவிக்கிறது என்பதில் எனக்கு அளவுக்கடந்த நம்பிக்கை!

அண்மையில் படித்த காதல் கவிதை ஒன்று. (http://www.nilacharal.com/stage/kavithai/tamil_poem_246b.asp)

என் ப்ரியமானவனே...

மல்லிகைப்பூவின்
இதழ் போல்
மிருதுவாய்
உன் பிடிவாதம்.

அழுதபின் தோன்றும்
நிறைந்தெ அமைதியாய்
உன் மெளனம்.

பொம்மைகளுடன்
சண்டையிடும் குழந்தையாய்
உன் கோபம்.

உயிர் நனைக்கும்
அதிகாலை பனித்துளியாய்
உன் ஸ்பரிசம்.

பெண்மையின் மென்மை
உணர்ந்த உன்
ஆண்மையால்
தினம் புதிதாய் பிறக்கும்
பூவாய் நான்!

-நிலாரசிகன

சனி, பிப்ரவரி 11, 2006

காதல் - 1!

'காதலர் தினம்' வெகு அருகில் இருக்கிறது. அன்று பதிவு எழுத நேரம் கிடைக்கிறதோ இல்லையோ. இன்றே எழுதி விடுகிறேன்..:) காதலைப் பற்றி என்னமோ அறிவுஜீவித்தனமாக எழுதலாம் என்று நினைத்திருந்தேன். 'உனக்கு அவ்வளவு அதிகபிரசங்கித்தனமா?' என்று ஆண்டவன் வைத்தான் ஒரு ஆப்பு. காலை கையில் காபியுடன் சுஜாதாவின் 'கற்றதும் பெற்றதும்' படித்துக் கொண்டிருந்தேன். அதில் மார்ட்டின் கார்ட்னரின் ஒரு குட்டி கதையை சுஜாதா மொழிப்பெயர்த்திருந்தார். எனக்கு பிடித்திருந்தது. அதை சுஜாதாவிடமிருந்து சுட்டு இதோ கீழே போட்டிருக்கிறேன் (கற்றதும் பெற்றதும்- 'ஜீனோம்'). சுஜாதா மன்னிப்பாராக! -

ஒரு பெரிய விஞ்ஞானி சாகும் தறுவாயில் இருந்தார். அவரருகே அவருடைய காதலி ரோசாலி உட்கார்ந்திருந்தாள். அவளுக்கு அவர் மேல் மிகுந்த காதல். விஞ்ஞானிக்கு முதல் காதல் விஞ்ஞானம் தான்.அப்புறம்தான் ரோசாலி.

"நாம் நிச்சயம் மறுபடி சந்திப்போம்....எங்கேயாவது, எப்போதாவது.." என்றாள்.

விஞ்ஞானி கஷ்டப்பட்டு இருமிக்கொண்டு சொன்னார்: "அபத்தமாக பேசாதே..உனக்கு விஞ்ஞானம் தெரியாதா..?"

ரோசாலிக்கு நிஜமாகவே விஞ்ஞானம் தெரியாது.
"ஆனால், நிச்சயம் நாம் சந்திப்போம் என்று நம்பிக்கை வைக்க மாட்டாயா..?"

விஞ்ஞானி தலையாட்டினார். "எனக்கு ஒரு வாழ்நாள் போதும்..எளிதாக,அழகாக அது முடிவடைகிறது...இல்லையேல் பிரபஞ்சம் மிகவும் சிக்கலாகிவிடும்.."

அவர் இறந்துபோனார்.

சில லட்சம் வருடங்கள் கடந்த பின் விஞ்ஞானி திடீரென்று கடவுளுக்கு முன் தான் நிற்பதை உணர்ந்தார். அவருக்கு குழப்பமாக இருந்தது.

"எனக்கு புரியவில்லை...எப்படி விஞ்ஞான விதிகள்படி நான் மறுபடி வாழ முடியும்?"

'எப்படி விஞ்ஞான விதிகளின்படி விஞ்ஞான விதிகள் வரமுடியும்?' என்று கடவுள் கேட்டார்.


'ஆனால் நான் மறுபடி வாழ விரும்பவில்லையே..திருப்தியுடன் வாழ்ந்தேன்...இறந்தேன். ஏன், எதற்காக இங்கே இருக்கிறேன்..?"

"நீ இங்கே இருப்பதற்கு ஒரேயொரு காரணம் ரோசாலி வேண்டிக்கொண்டது தான்" என்றார் கடவுள்.

இந்த கதையின் உள்ளர்த்தத்தை இரவின் தனிமையில் யோசித்துப் பாருங்கள்.

நானும் சற்று நேரம் யோசித்தேன். எனக்கு தோன்றியதை நாளைக்கு பதிவாக போடுகிறேன். அதற்குள்ளாக, உங்களுக்கு என்ன தோன்றியது என்று சொல்லுங்கள்...:)

ஞாயிறு, பிப்ரவரி 05, 2006

உடையார்

இம்முறை இந்தியா சென்றபோது, மும்பையிலேயே வாசம் எனக்கு. அதிகமாக பரிச்சயம் இல்லாத ஊர் என்பதாலும், எங்காவது செல்லலாம் என்று கிளம்பினால் குறைந்தபட்சம் 1 மணி நேரம் டிராபிக்கில் மாட்டி கொள்வோம் என்ற பயத்தினாலும், நண்பர்கள் யாரும் அங்கு இல்லாததாலும், வீட்டில் இருந்த புத்தககங்களை எல்லாம் எடுத்து புரட்டி பார்த்து கொண்டிருந்தேன். முன்பொரு முறை பாலகுமாரனின் 'உடையார்' குமுதத்தில் தொடராக வந்து கொண்டிருந்தது. அப்போது அதை படிக்கும் மனப்பக்குவமும் இல்லை. என் அப்பாவுடைய நண்பர் ஒருவர் 'உடையார்' பரிந்துரைத்தார். படிக்க ஆரம்பித்தேன். முதலில் பிடிக்கவில்லை. பிடிக்கவில்லை என்று சொல்வதைவிட, வித்தியாசமாக இருந்தது என்றே சொல்லவேண்டும். கல்கியின் நடையை படித்துவிட்டு, இதை படிப்பவர்களுக்கு கண்டிப்பாக முதலில் சற்று மாறுதலாக தான் இருக்கும். 'பொன்னியின் செல்வ'னின் தொடர்ச்சியாக இதை பார்க்க தோன்றும். எனக்கு அப்படிதான் இருந்தது. பிறகு, அந்த நினைப்பு இல்லாமல், இதை ஒரு தனிப்பட்ட இலக்கிய படைப்பாக ரசித்தல் வேண்டும்.

உடையார் என்பது அரசரை குறிப்பது. நாடு, மக்கள், செல்வம், வெற்றி, அழகு, பண்பு என்று அனைத்தும் உடையவனாதலால் அரசன் 'உடையார்' என்று அழைக்க படுகின்றான். இந்த படைப்பு முற்றிலும் ராஜராஜ சோழனுக்கே உரியது. ராஜராஜ சோழன் சிம்மாசனம் ஏறி 23 ஆண்டுகளுக்கு பிறகான காலகட்டத்தில் நடக்கும் சம்பவங்கள். வந்தியத்தேவனுக்கு மூட்டுவலி, குந்தவைக்கு முதுகுவலி, பொன்னியின் செல்வனுக்கு ஜலதோஷம் என்று படிக்கும்போது சற்று அதிர்ச்சியாக இருந்தது..:) எல்லோருக்கும் வயதான காலத்தில் கதை நடக்கிறது என்பதை ஒத்துக்கொள்ள எனக்கு சற்று நேரம் பிடித்தது. முக்கியமாக தஞ்சை பெரிய கோவிலின் படைப்பும், அதற்கான முயற்சிகள், அதனாலான பாதிப்புக்கள், மக்கள் வாழ்க்கை மாறுதல்கள், இவைகளை சுற்றியே கதை புனைந்திருக்கிறார். இதில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் சரித்திர ஆதாரம் பெற்றவர்கள். எதுவுமே கற்பனை கிடையாது.

ஒரு கட்டிடம் கட்டுவது என்பது இந்த காலத்தில் அவ்வளவு பெரிய விஷயமில்லை. அதற்குண்டான சாமான்கள், பொருள் வசதி, ஆட்கள், அவர்களை நகர்த்த வண்டிகள், வசதியான சாலைகள், கட்டிட கணக்குகளை பார்க்க கணிணி, அளவுகளை துல்லியமாக போட்டு கொடுக்க மென்பொருள் என்று அனைத்துமே சுலபம்தான். அந்த காலத்தில் இதெல்லாம் எவ்வளவு கடினம் என்பதை அழகாக உணர்த்தியது 'உடையார்'. காவிரி பாயும், அழகிய விளைநிலங்கள் கொண்ட சமதரையான சோழ ராஜ்யத்தில் கற்கள் எப்படி கொண்டு வருவது? ஆட்கள் யாரைக்கொண்டு கோவில் கட்டுவது? எங்கு தங்க வைப்பது? ஒரு இடத்தில் கூடியிருக்கும் அவ்வளவு பெரிய ஆட்படைக்கு உணவளிப்பது எப்படி? அதனால் சமூகத்தில் எவ்விதமான மாறுதல்கள் ஏற்படும்? பொருள் கொண்டு வருவது எப்படி?

இந்த காலத்தில் இவ்வளவு வசதியிருந்தாலும், தொழில்நுட்பம் இருந்தாலும் நமக்கு தஞ்சை பெரிய கோவிலை போல ஒரு படைப்பை அமைக்க முடியவில்லையே! உலகத்தில் நம் நாட்டில் மட்டும்தான் கலாசாரம், கலை இருந்தது என்று சொல்வது முட்டாள்தனம். ப்ரான்சில் 'வெர்சாய்' அரண்மனை, லண்டனில் 'செயின்ட் பால்' என்று உலகெங்கும் மனிதன் படைப்பாளியாகத் தான் இருந்திருக்கிறான். ஆனால், ஐரோப்பா 'dark ages'ல் காட்டுமிராண்டித்தனமாக இருந்தபோது, செந்தமிழ்நாட்டில் மிக பண்புடைய, அறிவுடைய, தெய்வபக்தியும், தர்ம சிந்தனையும் உள்ள ஒரு அரசன் நெறி வழுவாமல் ஆட்சி புரிந்தான் என்பதை நினைக்கையில் பெருமையாக இருக்கிறது! :) உலகில் எத்தனையோ பெரிய அரசர்கள் இருந்தாலும், தர்மத்துக்கு தலைவணங்கி ஆட்சி செய்தவர்கள் இந்தியாவில் தான் இருந்திருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது. தனக்கென்று அரண்மனைகளையும், மாடமாளிகைகளையும் அமைத்துக் கொள்ளாமல், சிவனுக்கு ஆலயம் அமைத்திருக்கிறான் ராஜராஜன். செந்தமிழில் நால்வர் பொழிந்த அமுதான தேவாரப்பாடல்களை அழியாமல் மீட்டு கொடுத்து 'சிவபாதசேகரன்' என்ற பட்டம் பெற்றவன். பெளத்தமும், ஜைனமும் தலைதூக்க விடாமல் சைவமதம் தழைத்தோங்குவதற்கு அடிகோலியவன். அந்த கால தமிழர் நாகரீகமும், கலையும், பக்தியும் உலகமறியும் சின்னமாகவே தஞ்சை பெரிய கோவிலை அமைத்திருக்கிறான். முயற்சி வீண்போகவில்லை! இன்றும் கம்பீரமாக இராஜராஜன் பெயரை சொல்லி வானளாவி நிற்கிறது பெரிய கோவில்.

11 பாகங்கள் வெளிவந்திருக்கின்றன. இன்னும் இரண்டு பாகம் வரும். நிச்சயமாக ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டும். ஆவலுடன் காத்திருக்கிறேன்.

பின்குறிப்பு:

'பொன்னியின் செல்வன்' ரசிகர்களுக்கு ஆதித்த கரிகாலன் கொலைக்கு யார் காரணம், அவர்கள் என்ன ஆனார்கள், உத்தம சோழன் ஆட்சி எப்படியமைந்தது, வந்தியத்தேவன் என்னவானான் என்ற பல கேள்விகளுக்கும் பதில் இருக்கிறது..:) நீங்கள் எதிர்பார்க்காத பதிலாகக் கூட இருக்கலாம்!

திங்கள், ஜனவரி 09, 2006

காட்டழகிய சிங்கபெருமாள்

திருவரங்கத்துக்கும் திருவானைக்காவுக்கும் நடுவில் ஒரு இரயில்வே க்ராசிங் உள்ளது. திருவரங்கம் இரயில்நிலையம் அருகே இருக்கும். அதைத் தாண்டி அப்பால் சென்றால் திருவானைக்கா. திருவரங்கம் கிழக்கு வெள்ளை கோபுரத்துக்கு நேர்கோட்டில், திருவானைக்கா பக்கத்தில் உள்ளது ஸ்ரீ காட்டழகிய சிங்கபெருமாள் கோவில். பெரிய ஆடம்பர கோபுரங்களோ, மாடங்களோ எதுவும் இல்லாத மிக எளிமையான கோவில். அண்மையில், மூன்று வருடங்களுக்கு முன்னால் கும்பாபிஷேகம் செய்வித்தார்கள். திருவரங்கம் கோவில் நிர்வாகத்தை சேர்ந்த கோவில்.

பெருமாள் அழகிய நரசிம்மமூர்த்தியாக காட்சியளிக்கிறார். இடது தொடையில் தாயாரை மடியில் வைத்து, ஒரு கையால் அணைத்து கொண்டு இருப்பார். இன்னொரு கையால் அபயஹஸ்தம் அளித்துக்கொண்டிருப்பார். பெரிய, தத்ரூபமான மூர்த்தி. என்னதான் பயமுறுத்தும் தோற்றமுடையவராயிருந்தாலும், முகத்தில் ஒரு புன்முருவல் பூத்திருக்கும்.

முன்காலத்தில், இப்பகுதிகளில் அடர்ந்து மண்டி கிடந்த காடுகளில் யானைகள் அட்டகாசம் தாங்காமல், காட்டினிடையே சிங்கபெருமாள் கோவில் அமைத்திருக்கிறார்கள். கேசரி கஜராஜனுக்கு இயற்கை பகைவனாயிற்றே? நான் ஸ்ரீரங்கம் சென்ற புதிதில், எனக்கு மிகவும் பொழுது போகாது. பெரிய நகரங்களில் உள்ள பொழுது போக்குகளோ, hang-outs அங்கு கிடையாது. சரித்திரத்திலும், அந்தகால கோவில் கட்டிடக்கலையிலும் ஈடுபாடு உண்டென்பதால், திருச்சியை சுற்றியிருக்கும் பல கோவில்களை சென்று பார்ப்பதிலேயே பொழுது போக்குவேன்.

ஒரு நாள், திருவரங்கம் கோவிலில் கூட்டம் ஆளை நெரித்துவிடும் போல் இருந்தது. கோவிலிருந்து விடுபட்டு, சற்று காற்று வாங்கினால் போதும் என்று எனக்கு ஆகிவிட்டது. அதனால், ஒரு நோக்கமே இல்லாமல், திருவரங்கம் இரயில் நிலையத்தை பார்த்து நடந்தேன். அங்கு சற்று காற்று வரும். அந்த நேரத்தில், எந்த வண்டியும் வராது. அப்போதெல்லாம், மனத்தில் அமைதியில்லாமல் எதையோ நினைத்து தவித்த காலம். கொஞ்சம் தனிமையில் இருக்கலாமே என்று சென்றேன். அப்போது தூரத்தில் விளக்கு எரிவது தெரிந்தது. அதை நோக்கி கால்போன போக்கில் நடந்தேன். சென்றால், காட்டழகிய சிங்கர் கிடைத்தார்!

அப்போதெல்லாம் அந்த கோவிலில் அதிக ஜனநடமாட்டம் கிடையாது. வெரிச்சோடியே இருக்கும். சாந்தி குடிகொண்டிருக்கும். ஸ்ரீரங்கத்தின்அலை மோதும் ஜன சமுத்திரத்துக்கு நடுவே ஒரு அமைதித்தீவாகவே அந்த திருக்கோவிலை நாடி செல்வேன். இப்போதெல்லாம், அங்கும் கூட்டம் ஜாஸ்தியாகிவிட்டது. ஒரு வகையில் நல்லது தான். வருகிற திரவியத்தால் கோவில் திருப்பணி நடக்க உதவுமே!

நாளை வைகுண்ட ஏகாதசி உத்சவம். திருவரங்கத்தின் சுவர்க்க வாசல் திறக்கும். திருவரங்கம் வைகுண்டமாக உருவெடுக்கும். காவிரி, வைகுண்டத்தின் விராஜ நதியாகவே மாறி விடுவாள். எல்லோருக்கும் எனது தாமதமான இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

வெள்ளி, டிசம்பர் 23, 2005

மறுபடியும் காவிரி...

செங்கதிர்ச் செல்வன் திருக்குலம் விளக்கும்
கஞ்ச வேட்கையில் காந்தமன் வேண்ட
அமர முனிவன் அகத்தியன் தனாது
கரகம் கவிழ்த்த காவிரிப் பாவை
செங்குணக் கொழுகிய சம்பாபதி அயல்
பொங்குநீர்ப் பரப்போடு பொருந்தித் தோன்ற

திருச்சி கொள்ளிடத்தில் தண்ணீர் இருந்து நான் பார்த்தேயில்லை. சங்ககால சோழர்கள் காலத்தில், காவிரி கரைபுரண்டு ஓடி நாட்டை அழித்துவிடுகிறது என்று தண்ணீருக்கு மாற்றுபாதையாக அமைக்கப்பெற்றதே கொள்ளிடம். காவிரி நீருக்கு 'கொள்ளும் இட' மாக அமைக்கப்பெற்ற செயற்கை நதி, திருச்சியில் பலகாலமாக வற்றிப்போய் ஒரு சிறிய வாய்க்காலாகவே ஓடிக்கொண்டிருந்தது. கடந்த 50-70 வருட காலத்தில், இப்படி கொள்ளிடம் கரைபுரண்டு ஓடியதைப் யாருமே பார்த்ததில்லையென என் நண்பரின் அன்னை நேற்றுக் கூறினார். திருவரங்கத்தில், இராஜகோபுரத்துக்கு சற்று தெற்கே ஓடும் திருமஞ்சன காவேரி, ரோட்டை தொட்டுக்கொண்டு ஓடுகிறதாம். இப்படி, காவிரி பேச்சு வந்த போது, என்றோ படித்த இந்த பாடல் ஞாபகம் வந்தது.

சூரிய வம்சத்தாரான சோழர் குலத்தில் தோன்றியவன் காந்தமன் என்ற அரசன். சோழ நாட்டில் ஜீவநதி எதுவுமில்லையே என்ற வருந்தினான். சஹ்யாத்ரி மலைமகளான காவிரியை சோழநாட்டுக்கு அழைத்து வருவதற்காக இறைவனிடம் வேண்டி வரம் பெற்றான். அப்படிப்பட்ட காவிரியை, அகத்திய முனிவர் காவிரிக்குமரி மீது பாசம் கொண்டு தன் கமண்டலுவில் அடைத்து வைத்தார். விநாயகர் காக்கை உருவத்தில் அந்த நதியை விடுதலை செய்ய, அவள் விரிந்து, பரந்து சோழ தேசத்தில் ஒய்யார நடைப் போட்டாள். அவள் ஓடிய இடத்திலெல்லாம், காந்தமன் எண்ணியபடியே, சோழ தேசம் வனப்புப் பெற்றது. காவிரி கடைசியில் காவிரிபூம்பட்டினத்தில் கடலுடன் கலக்கிறாள். அந்த காலத்தில், காவிரிபூம்பட்டினத்துக்கு, 'சம்பாபதி' என்று பெயர். இத்தகைய அழகிய பாடலை இயற்றியவர் யாரென எனக்கு தெரியவில்லை. காஞ்சி மஹாபெரியவரின் 'அருளுரை' யில் படித்ததாக நினைவு.

இப்போது கரைகொள்ளாமல் ஓடும் காவிரியை கூடிய சீக்கிரம் பார்க்க ஆவலுடன் காத்திருக்கிறேன்....:)

செவ்வாய், டிசம்பர் 20, 2005

வல்லவரையன் வந்தியத்தேவன்

ஒரு ஆறு வருட காலம் முன்னால் 'பொன்னியின் செல்வன்' படித்தேன். படித்ததிலிருந்து, வல்லவரையன் வந்தியத்தேவன் மேல் ஒரே காதல் தான்! :) இப்பொழுது, மறுபடியும் படிக்கிறேன். வந்தியத்தேவன் மீது பற்றுக் கொண்டு, Google இணையதளத்தில் அவன் பெயரைப் போட்டால் என்னதான் வருகிறது பார்ப்போமே என்று போட்டேன். அப்போது கிடைத்த ஒரு தளம் இது.
அதிலிருந்து கிடைத்த இன்னொரு தளம்: www.varalaaru.com
தமிழ் சரித்திர வரலாறு பற்றிய e-zine ஆரம்பித்திருக்கிறார்கள். வந்தியத்தேவன் எந்தெந்த ஊருக்கெல்லாம் 'பொன்னியின் செல்வ'னில் சென்றிருந்தானோ, அந்த ஊருக்கெல்லாம் சென்று கருத்து சேகரித்திருக்கின்றனர்! பார்க்கவே மிக சந்தோஷமாக இருந்தது...:)

காதல் கவிதை!

'ஐ லவ் யூ' விகடன் ஸ்பெஷலில் நடிகர் பரத் 'காதல் பத்து' என்று ஒரு பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவர் எழுதிய காதல் கவிதை எனக்கு பிடித்திருந்தது:

உயரத்தில் இருப்பதால் நீ நிலாதான்!
ஆனால் உன்னையே நீ பார்க்க என்னிடம் தான் வர வேண்டும்!
ஏனெனில்,
காதல் நீர் நிறைந்த குளம் நான்!

நிலவும், தாமரை குளமும், அல்லி தண்டுகளை வைத்தும், பல ஆயிரம் காலங்களாக ஸ்ருங்கார ரசத்தில் கவிதை வரித்து கொண்டிருக்கிறார்கள். ஆனாலும் அதையே புதிதான வகையில் புனைந்தால் இன்றும் ரசிக்கத்தான் செய்கிறோம். காதல் என்றும் இளமையானதன்றோ? :) 'அடடா, என்னால் இப்படி எழுத முடியவில்லையே' என்று ஆதங்கப்பட வைத்த கவிதை இது!

வியாழன், டிசம்பர் 01, 2005

அன்பே சிவம்

ப்ரியா "சிந்தனை சிதரல்" என்று அவருடைய வலைப்பதிவில் எழுதி வருகிறார். மனநோயாளிகள் பற்றியும், அவர்களை குணமாக்குதல் பற்றியும் மிக அழகான சில விஷயங்களை கூறியிருக்கிறார். ப்ரியாவின் சிந்தனைகள் சிதறி என் மனதில் சில எண்ணங்களை கிளப்பின...

என்னுடைய உறவுக்காறர் ஒருவருக்கு மன வளர்ச்சி குன்றிய ஒரு பையன் இருக்கிறான். குழந்தை பிரசவத்தின் போது, பிரசவம் பார்த்த நர்ஸ் ஒரு பிழை செய்ததால் குழந்தையின் மூளைக்கு ரத்த ஓட்டம் ஒரு நோடி போகாமல் மூளை வளர்ச்சி குன்றி விட்டது என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள். வயது பல ஆனாலும், இரண்டு வயதிற்குறிய ஒரு குழந்தையின் மன வளர்ச்சிதான் அவனுக்கு. இரண்டு வயது குழந்தையை கையாள எவ்வளவு பொறுமை வேண்டுமோ, அதே பொறுமையுடன் தான் அவனையும் நடத்த வேண்டும். சிசுருஷை செய்ய வேண்டும். அவனது தாய், தந்தையர் நான் மிகவும் வியக்கும், மதிக்கும் மனிதர்கள். அசாத்திய பொறுமைசாலிகள். "அய்யோ, நமக்கு இப்படி நேர்ந்து விட்டதே!" என்று அங்கலாய்த்துக் கொண்டு, சதா அழுது கொண்டிருக்காமல், அதையும் மீறி வாழ்க்கையை சுவாரஸ்யத்துடன் நடத்தும் பாராட்டுதற்குறிய மனிதர்கள் அவர்கள். தன் குழந்தையை வெறுக்காமல், பொறுமையிழக்காமல், அவன் நிலைமையை உணர்ந்து அவனை மிக்க பாசத்துடன், அவனை அரவணைத்து அவனுக்கு உதவும் நல் மனது மிக்கவர்கள்.

ஏதோ மனநோய் காரணமாக மருந்து உண்டு, மிக பருமனாக இருக்கும் பெண்ணை அவர்கள் வீட்டாரே வெறுப்பதாக ப்ரியா எழுதியிருந்தார். சாதாரணமாகவே ஏதோ ஊனம் இருப்பவரை கண்டாலோ, அல்லது சற்று அழகு குறைந்து காணப்பட்டவரை பார்த்தாலோ, மனிதர்களுக்கு ஏளனமும், அருவருப்பும் தான் முதலில் வருகிறது. இந்த மனப்போக்கு குழந்தை பருவத்திலோ, டீனேஜ் பருவத்திலோ வரும் மனப்பக்குவமில்லாத response என்று நான் நினைத்த காலமுண்டு. ஆனால் வயதும், அனுபவமும், படிப்பும் மிக்க மனிதர்களும் இப்படித்தான் அருவருப்படைகிறார்கள் என்று ஒரு கசப்பான பாடம் பின்னர் கற்றுக்கொண்டேன். இதில் ஒரு superiority complex வேறு சிலபேருக்கு. "எனக்கு இப்படியெல்லாம் இல்லை. நான் உயர்ந்தவன்!" என்று ஜம்பமாக அவர்கள் மனதில் நினைப்பது முகத்திலேயே பிரதிபலிக்கும். மேலும் சிலர், "இவர் ஏதோ பாவம் செய்திருக்கிறான். நன்றாய் வேண்டும்.நான் பெரிய புண்யாத்மாவாக்கும்" என்று தேவையில்லாத ஆன்மீகத்தை புகட்ட பார்ப்பார்கள். அந்த பையன் அருகில் வந்தாலே ஏதோ தீண்டத்தகாதவன் அருகில் வந்த மாதிரி, விலகி போவார்கள். அவன் ஏதாவது கேட்டால் எரிந்து விழுவார்கள். அவனுடைய நிலைமை அவனை மீறியது என்பதை அறியாமல் நடந்து கொள்வார்கள். நான் இதை கண்கூடாக பார்த்ததினால் தான் ப்ரியாவின் பதிவு எனக்கு பிடித்திருந்தது.

என்னை பொறுத்த வரையில், நமக்கு ஒன்று நேர்ந்து விட்டால் சமாளிப்பது அவ்வளவு பெரிய காரியம் இல்லை. ஏனென்றால், வேறு வழி கிடையாது, சமாளித்து தான் ஆக வேண்டும். பிறர் துன்பப்படும் போது, கண்ணை மூடிக்கொண்டு போய்விடலாம். கண்ணை விட்டு அகன்றதும், அந்த காட்சி மறந்தும் போய்விடும். ஆனால் என்ன தர்மசங்கடமான விஷயமாயிருந்தாலும், அதை எதிர்நோக்குவது கடினமல்லவா? பிறர் படும் கஷ்டத்தை புரிந்து கொண்டு அனுசரணையாக நடந்து கொள்ள மன வலிமையும், ஆத்மபலமும் வேண்டும். அழ்ந்த அன்பினாலேயே வரக்கூடிய குணங்கள் அவை என்று நான் நினைக்கிறேன்.

இதில் வேடிக்கை என்னவென்றால், இவ்வளவு மூளையுள்ள, சுவாதீனமுள்ள மனிதர்கள் பாசமாக நடந்து கொள்வதில்லை. ஆனால், அந்த பையனோ மனிதர்கள் மீது மிகவும் பாசமாக இருப்பான். வீட்டிற்கு யார் வந்தாலும், வாஞ்சையுடன் "காபி சாப்பிடறியா?" என்று கேட்பான். அவர்கள் கோபப்பட்டால் கூட பொருட்படுத்தாமல், "மறுபடியும் எப்போ வர? பார்க்கணும் போல இருக்கு..." என்று விடைகூறுவான். ஆத்திகமும் நாத்திகமும், நல்லதும் கெடுதலும், சரியும் தவறும் உணர்ந்தும் புரிந்துகொள்ளுதல் இல்லாமல் இயங்கும் மனிதர்கள் மேலா? எதுவுமே அறியாமல், தன்னை வெறுபோரிடமும் பாசமாக நடந்து கொள்ளும் அவன் மேலா?

"ஆத்திகம் பேசும் அடியார்க்கெல்லாம் சிவமே அன்பாகும்
நாத்திகம் பேசும் நல்லவருக்கோ அன்பே சிவமாகும்"

என்ற வரிகள் தான் மனதிற்கு நினைவு வருகின்றன....

புதன், நவம்பர் 09, 2005

வாழ்க்கையின் அவசரத்தில் கால்களில் சக்கரம் கட்டி கொண்டு ஓடுகையில், அன்றாடம் என்னை சுற்றியிருக்கும் பல அழகிய காட்சிகளை, சம்பவங்களை ரசிக்க மறந்துவிடுகிறேன். படைப்பின் அற்புதங்களான பல விஷயங்களை நாம் வாஸ்தவமாக எடுத்து கொண்டு போய்விடுகிறோம். ஒரு குழந்தைக்கு உலகில் எல்லாமே புதியது. தன்னை சுற்றியிருக்கும் அனைத்தையும் தெரிந்து கொள்ள வேண்டும், அனுபவிக்க வேண்டும் என்கின்ற உற்சாகமும், ஆர்வமும் இருக்கும். இதே வயது ஆக, ஆக பல அனுபவங்கள்/விஷயங்கள் தெரிந்து விடுகின்றன.அல்லது தெரிந்து விட்டது என்று நினைத்து கொண்டு விடுகிறோம். ஆங்கிலத்தில் "Been there. Done that." என்று கூறுவார்கள். காணும் எல்லா காட்சியும், பார்க்கும் மனிதர் அனைவரையும் பாகுபடுத்தி பார்த்தால் தான் நிம்மதியாக இருக்கிறது. "இது அன்று நடந்ததை போலல்லவா இருக்கிறது? இவர் நம் பக்கத்து வீட்டு நண்பரை போலவே நடந்து கொள்கிறாரே!" என்று எப்போதும் ஒரு பக்கம் pattern match செய்து கொண்டே எண்ண அலைகள் எழும்பி, எழும்பி தாழ்கின்றன. இந்த pattern-matching தான் நமக்கு வாழ்வில் பிரச்சினைகளை தீர்க்கவும், முடிவுகளை எடுக்கவும் உதவுகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள். அனுபவம் கூடும் போது, இன்னும் நிறைய முன்மாதிரிகள் தெரிய வருகின்றன. அதற்கேற்றார்போல், நாம் இன்னும் பல பாகுபாடுகளை உருவாக்கி, அதற்குள் எல்லாவற்றையும் அடக்க முனைகிறோம். ஆக, எதையுமே புதுமை என்று நினைக்க விரும்பாத மனதுக்கு எப்படி புத்துணர்வு இருக்கும்? எல்லாவற்றையுமே பழைய கண்ணோட்டம், தவறுகள், திருத்தங்களால் செய்த கண்ணாடியால் பார்த்தல் எவ்விதத்தில் நல்லது? என் நண்பன் ஒருவன் கூறுவான், "Subha, you should let yourself be surprised everyday!". மிக உண்மை என்று இன்று தோன்றுகிறது. நான் இவ்வளவு கடுமையான விஷயத்தை கூற நினைத்து எழுத ஆரம்பிக்கவில்லை...:)

என்னையும், என் அவசரத்தையும் மீறி என்னை தினமும் அசத்தும் ஒரு விஷயம்: மலர்கள். அழகான, வெள்ளை மொட்டுக்களில் சிறிய நீர் முத்துக்கள் விளையாட, நறுமணம் வீசும் மல்லிகை, முல்லை, ஜாதி, ரோஜா பூக்களுக்கு என் மேல் ஒரு தனி ஆளுமையுண்டு! எவ்வளவு முறை பார்த்தாலும், சூடினாலும் எனக்கு இன்று வரை அலுத்தது கிடையாது! அதிகாலையிலும், அந்தி சாயும் நேரத்திலும் பூக்காரர்கள் மிக வேகமாக ஆனால் லாவகமாக, தாளம் தவறாமல் (ஆம் அவர்களின் அந்த பூக்கட்டும் கலையிலும் சங்கீதாம்சம் இருக்கத்தான் செய்கிறது..:))மலர்களை, அடர்த்தியான சரங்களாக கோர்க்கும் கலையே மிக அழகு. ஸ்ரீரங்கத்தின் சாத்தார வீதிதான் பூச்சந்தை. கற்பூரமும், ஊதுவத்தியும், பன்னீர் வாசனையுடனும் கலந்து வரும் பூவாசம் நாசியை துளைக்கும்! அம்மா அருகே இருக்கும் கடைகளில் காய்கறி வாங்குகையில், பூச்சந்தையில் இங்கும் அங்கும் நான்கு முறை நடந்து, வேடிக்கை பார்த்துவிட்டு வருவேன்.

அரங்கனுக்கு கோடை வெயில் தெரியாமல் இருக்க, ரங்கநாயகி சமேதராய் வசந்த மண்டபத்தில் தண்ணீருக்கு நடுவே சந்தியா வேளையில் சேவையாற்றுவார்கள். அருகேயிருக்கும் நந்தவனத்திலிருந்து துளசி மணமும், பூமணமும் கலந்து வீசும் மிக ரம்மியமான சூழல்! சில நாட்கள், கோடை மழை சற்று பூமியை நனைக்கும் நேரம், மண்வாசனையும் கலந்து மிக ஆனந்தமாக இருக்கும்! எத்தனை முறைதான் இதை ரசித்தாலும், ஒரு சிறு பிள்ளையின் கண்ணோட்டத்தோடு, புத்துணர்வுடன் நான் விரும்பும் விஷயங்களில் இதுவும் ஒன்று!

ஞாயிறு, அக்டோபர் 23, 2005

தர்மஸ்தலா

பல ஆண்டுகளுக்கு முன்பு கர்னாடகா டூர் சென்றோம். சுப்ரமண்யா, தர்மஸ்தலா, தலைக்காவிரி, உடிபி, மங்களூர் என்று ஒரு பெரிய பயணம். கர்னாடகாவில் என்னை முதலில் கவர்ந்தது, அடர்ந்த காடுகளும், நீர்வளமும். எல்லா ஊரிலுமே வெயில் தணிந்து, குளுமையாக இருந்ததால், தமிழ்நாட்டிலிருந்து வந்த எனக்கு பிடித்திருந்தது..:) பல வருடங்கள் முன் சென்ற ஊராதலால், நினைவில் பல விஷயங்கள் நிற்கவில்லை.

தர்மஸ்தலாவில் ஒரு சோமவாரம் சென்றிருந்தோம். ஏதோ ஒரு காரணத்தால் ஒரு சத்திரத்தில் தங்கும்படியாக நேர்ந்தது. ஹோட்ட்ல் புக்கிங்கில் ஏதோ குளறுபடியால் இப்படி ஆகியது என்று நினைக்கிறேன். "ஐயோ சத்திரமா!" என்று நாங்கள் எல்லோரும் அலுத்து கொண்டிருந்தோம். தர்ம சத்திரம் என்றாலே அது நன்றாக இருக்காது என்று ஒரு prejudice. வெறும் Prejudice என்று சொல்வதை விட, ஒரு காரணத்துடன் தான் ப்ரஜூடிஸ் என்று சொல்லலாம். சங்க காலத்தில், என்னதான் சத்திரங்கள் பயணியர்க்கு அடைக்கலம் தந்து, ராஜோபசாரம் செய்ததாக இருந்தாலும், இப்போது தமிழ்நாட்டில் அப்படி இல்லையல்லவா? ஆனால் எங்களுடன் வந்த டிரைவர், தர்மஸ்தலா சத்திரங்கள் மிக நன்றாக இருக்கும் என்று கூறி அழைத்து சென்றான். உண்மையிலேயே, மிக தூய்மையாகவும், வசதியாகவும் இருந்தது. இன்பமான அதிர்ச்சி அது.

சோமவாரம் மிக விசேஷம். நேத்ராவதி நதிக்கரையில், மரங்கள் சூழ்ந்திருக்க அமைந்திருக்கும் தீர்த்தம். அருள்மிகு மஞ்சுநாதஸ்வாமியையும், அம்மானவாருவையும், சுப்ரமண்யரையும் தரிசனம் செய்தோம். தர்மஸ்தலாவில் விசேஷம், அது ஒரு மதத்தை சார்ந்த கோவில் அல்ல. என்னதான் சிவ-சக்தி அம்சங்களாக தெய்வங்கள் அமைந்திருந்தாலும், அவை தர்ம தேவதைகளாகவே பூஜிக்கப்படுகின்றன. ஆக, அது தர்மத்துக்கும், தர்ம ரக்ஷணை செய்யும் பொதுவான கடவுளுக்கும் தான் கோவில். பல மதத்தினர், இஸ்லாமியர் உட்பட, அங்கு வழிபாடு செய்கின்றனர். தினம் வரும் பக்தர்களுக்கு எல்லாம், தேவஸ்தானம் இலவசமாக உணவளிக்கிறது. மிகவும் ருசியான, கல்யாண சாப்பாடு..:)

தர்மத்தை பற்றி பேச எனக்கு மூளையும் போதாது, வயதும் போதாது. ஆனால், ஒரு சில எண்ணங்கள் இதோ. "தர்மம்" என்ற ஒரு கருத்துக்கு ஆங்கிலத்தில் ஒரு சமமான வார்த்தை கிடையாது. இது பரதக்கண்டத்துக்கே சாசுவதமான ஒன்று. இதை மதத்தோடு கோர்ப்பதில் எனக்கு இஷ்டம் இல்லை. தர்மம் மதத்துக்கெல்லாம் அப்பார்ப்பட்டது. Duty என்பது கடமை. அது தர்மத்தின் ஒரு அங்கம் மட்டுமே. அதுவே தர்மமா? இல்லை. Obligation? சில நேரங்களில் தர்மத்தின் பொருட்டு சில obligations செய்ய நேர்ந்தாலும் அது மட்டுமே தர்மமாகாது. புண்ணியம் தேடி மற்றவர்க்கு அன்னதானமும், charity-உம் கொடுத்தால் அது தர்மமா? பலன் தேடி எதை செய்தாலும் அது தர்மமாகாது. எல்லோருக்கும் ஒரே தர்மம் என்பதும் ஒப்புக்கொள்ள முடியாதது. ஒரு சிலருக்கு, நேரத்தை பொறுத்து தான் தர்மம் விதிக்கப் படுகிறது. ஸ்ரீராமர் சீதையை தீக்குளிக்க சொன்னதும் தர்மமே. துரியனை இடுப்பின் கீழ், பீமனை அடிக்க சொன்னதும் தர்மமே. காந்தாரி, புத்திர சோகத்தில் இறையம்சமான கிருஷ்ணனை வம்சம் அழியும்படி சபித்ததும் தர்மமே.

இப்படி பல குழப்பங்கள். இதற்கு கிருஷ்ணர் கீதோபதேசமே செய்திருக்கிறார். நான் என் சொல்வது? :) என்னை பொறுத்த வரையில், நடைமுறை வாழ்க்கையில், பிறரை அனாவசியமாக மனதில் தூஷிக்காமல் இருப்பது; வஞ்சனை எண்ணம் கொள்ளாமலிருப்பது; பொறாமை படாமல் இருப்பது; அடுத்தவரை அவமதிக்காமல் இருப்பது போன்று சிறிய விஷயங்கள் கூட தர்ம சிந்தனை தான்! எவ்வளவு முறை பிறரைப் பற்றி, அவசரமாக ஒரு தவறான முடிவுக்கு வருகிறோம்? நமக்கு தான் analytical mind இருக்கிறது என்று நினைத்துக் கொண்டு, அரைகுறை விஷயங்கள் தெரிந்து கொண்டு, எதையோ ஆராய்ந்து, மொட்டைதலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சு போட்டு, பலவாறான முடிவுகளுக்கு வருகிறோம். இதுவும் அதர்மம் தான். People can never be pegged as round or square. பல மனிதர்கள் தயாரிக்கும் பொருள்களை தினசரி உபயோகம் செய்கிறோம். அதை மதிக்காமல், அனாவசியமாக வீணாக்குதலும் அதர்மம் தான்!

இதெல்லாம் நானும் கடைபிடிக்கிறேன் என்று சொல்வதற்கில்லை. முடிந்த வரை முயல்கிறேன். ஆனால் இப்படி ஒரு விஷயம் இருக்கிறது என்ற awareness இருக்க வேண்டும். அப்போது தான், அடுத்த முறை எதாவது ஒரு எண்ணம் வரும்போது, அது நல்ல சிந்தையா, கெடுதலா என்று எண்ணி பார்க்கவாவது தோன்றும்!

விஷ்ணு சஹஸ்ரநாமத்தின் கடைசி மந்திரமும், சந்தியா வந்தனத்தின் கடைசி மந்திரமும்

"காயேன வாசா மனசேந்த்ரியேர்வா புத்யாத்மனாவா ப்ரக்ருதே ஸ்வபாவாத்"

என்றே ஆரம்பிக்கிறது. மனஸ், உடல், இந்திரியம், புத்தி, வாக்கு, ஆத்மா ஆகிய அனைத்தாலும் நான் செய்பவை இறைவனுக்கே சமர்ப்பணம் என்பதே பொருள். இதில் சிலவற்றையாவது கடைபிடிக்க முயல்கிறேன்.

செவ்வாய், அக்டோபர் 18, 2005

திருப்பேர்நகர்

தமிழில் எழுதி பல மாதங்கள் ஆகிவிட்டன. இன்று ஒரு மாலை இளவெயில் நேரத்தில் இளந்தென்றல் வீச, அதற்கிசைந்து தலை சாய்த்து, சோம்பல் முறித்து மரங்கள் பலவர்ண இலைகளையுதிர்க்க, எனக்கு மறுபடியும் காவிரியாற்றங்கரையின் இளந்தென்றல் மனதில் வீசியது...

திருப்பேர் நகரான் திருமாலிரும்சோலை
பொருப்பே உறைகின்ற பிரான் இன்று வந்து
"இருப்பேன்" அன்று என் நெஞ்சு நிறையப் புகுந்தான்
விருப்பே பெற்று அமுதுண்டு களித்தேனே!"

- நம்மாழ்வார் திருவாய்மொழி

வைணவ §க்ஷத்திரங்களில் 'பஞ்சரங்க' §க்ஷத்திரங்களுக்கு தனி சிறப்புண்டு. பஞ்சரங்கம் எனக் கூறப்படுபவை: ஆதிரங்கம் அல்லது ஸ்ரீரங்கப்பட்டினம், அப்பாலரங்கம் அல்லது திருப்பேர்நகர், பரிமளரங்கம் அல்லது மாயவரம், ஸ்ரீரங்கம் மற்றும் சீர்காழி அருகே இருக்கும் வடரங்கம். இந்த பஞ்சரங்கத்திலும் எம்பெருமான் பள்ளிகொண்டானாக காட்சியளிக்கிறார்.
திருப்பேர் நகருக்கு கோவிலடி என்றும் பெயர். பெருமாள் அங்கு அமர்ந்து அந்த இடத்தை விட்டு பெயரேன் எனவருளியதால், திருப்பேர்நகர் என்று பெயர்க்காரணம். பூலோக வைகுண்டமாம் திருவரங்கத்துக்கு வாயிலாக இருப்பதனால் "கோவில் அடி" என்றும் பெயர் ஏற்ப்பட்டது. ஸ்ரீரங்கத்துக்கு அப்பால் காவிரியாற்றங்கரையின் கரையில் அமைந்திருப்பதால், 'அப்பாலரங்கம்' என்று பெயர். அன்பில் மற்றும் கோவிலடி இரண்டையுமே சேர்த்து தான் சொல்வார்கள். அன்பில் காவிரியின் திருச்சி கரையிலும், கோவிலடி காவிரியின் தஞ்சை கரையிலும் அமைந்திருக்கிறது. திருமழிசையாழ்வார் தன் பாசுரத்தில் அன்பில் மற்றும் திருப்பேர்நகரை சேர்த்து "பேரன்பில்" என்றே கூறுகிறார்.

நான் சென்ற பல கோவில்கள் போல, இதுவும் எதேச்சையாக சென்ற கோவில் தான். முதலில் சென்ற போது, அந்த தலத்தை பற்றி எதுவுமே தெரியாமல்தான் போனேன். மிக சிறிய ஊர். திருச்சியிலிருந்து சுமார் 45 நிமிட பயணம். ஆற்றங்கரையிலேயே கோவில். அழகிய, எளிமையான தஞ்சை ஜில்லா ஊர். மாலை நேரத்தில், காவிரியின் காற்று வந்து வருடிச்சென்றது. பள்ளிகொண்டப் பெருமாள் அப்பக்குடத்தான் என்று பெயர் பெற்றிருக்கிறார். இறைவனின் வலக்கையருகே ஒரு பெரிய அப்பக்குடம் இருக்கும். உபரிஸ்ரவசு என்னும் மன்னன், கிழவன் ரூபத்தில் வந்த இறைவனுக்கு அன்னமளித்தும் பசியடங்காமல் போக, விருந்து தயார் செய்யும் வேளையில், snack-ஆக அப்பங்கள் செய்து படைத்தான். அந்த அப்பக்குடத்தோடு அங்கேயே பெருமான் கமலவல்லி நாச்சியார் சமேத அப்பாலரங்கனாக அமர்ந்து விட்டதாக தலபுராணம்.

பெருமாளுக்கு தசாவதார ஒட்டியானம் மிக பிரசித்தி. 6000 வருடத்துக்கும் மேலான பழமையான கோவில் எனக் கூறுகின்றனர்! எந்தவிதமான வெப்பத்திலும் கூட, எப்பொழுதும் ஜில்லென்று காற்றை கிளப்பி பெருமாள் மனம் குளிர வைப்பாள் காவிரியன்னை என்று பட்டர் கூறினார். அதை ஆமோதிப்பதைப் போல், அப்போது ஒரு குளிர்தென்றல் கிளம்பியது.
கோவிலடியிலிருந்து பல கலை வல்லுனர்களும், ஆசார்யார்களும், அனுஷ்டானங்களில் சிறந்தவர்களும் தோன்றியதாக பேச்சு. திருச்சியில், கோவிலடி மத்வப்ரசாத் என்று ஒரு வித்வானின் கச்சேரிகள் கேட்டிருக்கிறேன். மிக பிரமாதமாக இருக்கும்! அந்த கூற்றிலும் உண்மை இருக்கத்தான் செய்யுமோ என்று என்னை யோசிக்க வைத்தது. யோசனையிலேயே, காவிரி ஆற்றின் ஓரமாக பயணம் செய்து, திருச்சியும் அடைந்து விட்டோம். இவ்வளவு நாள் இந்த ஊரைப் பற்றி தெரியவில்லையே என்று ஒரு சின்ன வருத்தம். ஆனால், இப்போதாவது, அரங்கன் அனுக்கிரகத்தில் காணக்கிடைத்ததே என்றும் ஒரு சந்தோஷம்.

'இன்று என்னைப் பொருளாக்கி தன்னை என்னுள் வைத்தான்
அன்று என்னைப் புறம் போகப் புணர்த்து என் செய்வான்?
குன்றெனத் திகழ் மாடங்கள் சூழ் திருப்பேரான்
ஒன்று எனக்கு அருள் செய்ய உணர்தலுற்றேனே!'
- நம்மாழ்வார் திருவாய்மொழி

(O Lord, how could you have ignored me all my life and suddenly thought it fit to enter my heart? What answer can you give except hang your head in shame like a pupil before a teacher!)
என்று முணுமுணுத்துக் கொண்டே மனதால் விடைப்பெற்றேன். மறுபடியும் வாய்ப்பு கிடைத்தால் அந்த §க்ஷத்திரம் செல்வேன்.

திங்கள், செப்டம்பர் 12, 2005

அண்மையில் முத்துக்குமார் இந்த இணையத்தளத்தை பரிந்துரை செய்தார். ரம்யா என்பவரின் பதிவு இது. மனதை மிகவும் பாதித்தது! கிராமத்தில் ஏழை எளியவர்களாக இருந்தாலே வாழ்க்கையில் பல துன்பங்களை சந்திக்க நேரிடும். அதுவும் பெண்ணாக இருந்தால், அன்றைய வாழ்க்கையின் பிரச்சினைகள் போதாது என்று, உடல் ரீதியான கொடுமைகள் வேறு!
தயவு செய்து படித்துப் பாருங்கள்.

ஞாயிறு, ஆகஸ்ட் 21, 2005

மலைக்கோட்டை (தாயும் ஆனவர்)

திருச்சி மலைக்கோட்டையை சுற்றி பல கதைகள் கேள்விப்பட்டிருக்கிறேன். 'திரிசரன்' என்ற அசுரன் இறைவனை இங்கு வழிபட்டதால் 'திரிசரபுரம்' என்று பெயர்க்காரணம் கூறுவார்கள். கைலாய மலையிலிருந்து துகளாகி மூன்று பாகங்கள் பறந்து வந்ததாகவும், அதில் ஒன்று திருச்சி மலைக்கோட்டை என்றும் கதை இருக்கிறது. மூன்று குன்றுகளில் பிள்ளையார், தாயுமானவர் மற்றும் மட்டுவார்குழலியம்மன் அருள்புரிகிறார்கள்.

ரத்னவதி என்னும் கர்ப்பிணி பெண்ணுக்கு, தாயாக காட்சியருளி பிரசவத்துக்கு உதவிபுரிந்ததால், இறைவனுக்கு "தாயும் ஆனவர்" என்று பெயர். தாயுமானவர் சந்நிதியில், கர்ப்பிணி பெண்கள் சொல்லக்கூடிய ஒரு ஸ்தோத்திரம் இருக்கிறது. பலர் வேண்டிக்கொண்டு, வாழைப்பழக் குலைகள் காணிக்கையாக கொண்டு வந்து தருவார்கள்.

தாயுமானவர் சந்நிதி மேற்கே நோக்கி இருக்கும். உறையூரில் ஆட்சிபுரிந்த சோழ மன்னன் மீது கோபம் கொண்டு, கிழக்கே நோக்கி இருந்த தாயுமானவர், மேற்கே திரும்பி விட்டதாக கதை. உறையூரில் பெரிய மணற்புயல் உருவாகி, ஊரையே அழிக்கும் நிலையில், வெக்காளியம்மன் தலையிட்டு, சிவ பெருமானின் கோபத்தை தணித்தாளாம். இன்றும் வெக்காளியம்மன் தான் ஊரின் காவல் தெய்வம். இந்த மணற்புயலுக்கு இன்னொரு காரணமும் கூறுவார்கள். அம்பிகாபதியை, சோழ மன்னன் தண்டித்ததால், புத்திர சோகம் கொண்ட கம்பன் சோழநாட்டை சபித்ததான். அதனால், பெரிய மணற்புயல் உருவாகி, வளமான உறையூரை வெற்று நிலமாக மாற்றிவிட்டதாக வரலாறு.

உறையூர் 300 கி.மு-விலிருந்தே சோழமன்னர்களின் தலைநகரம். உறையூரில் மன்னர்களின் மாளிகையிலிருந்து, மலைக்கோட்டைக்கு ஒரு சுரங்கம் இருந்ததாகவும் ஒரு கதையிருக்கிறது! பின்னர் பல்லவர்களும், பாண்டியர்களும், நாயக்கர்களும் மலைக்கோட்டைக்கு contribute செய்ததாக வரலாறு கூறுகிறது. கலா ரசிகனான மகேந்திர வர்ம பல்லவன் மலைக்கோட்டையில், அழகான சித்திரங்களும், சிற்பங்களும் அற்பணித்தது சரித்திரம். நாயக்க மன்னன் ஒருவன் தெப்பக்குளத்தையும், கோட்டையையும் கட்டினான்.

இப்படி பல சுவாரஸ்யமான கதைகள் நிறைந்த ஊர் திருச்சி. மலைக்கோட்டையின் உச்சியிலிருந்து திருச்சியை ஒரு கழுகு பார்வை பார்க்கலாம். அமைதியாக பாயும் காவிரியும், திருவரங்கத்தின் ராஜகோபுரமும், ஆனைக்கா அண்ணலின் கோபுர உச்சியும், அரியமங்கலத்தின் பசுமையான வயல்களும், மலைக்கோட்டையை சுற்றி பரபரப்பான வாழ்க்கையின் அவசரத்தையும் அந்திவானில் மறையும் சூரியனின் செங்கதிர்கள் சிவப்பு கலந்த தங்க வெளிச்சத்தில் எடுத்துக்காட்டும். மலைக்கோட்டையின் அந்த பழமையான பாறைகள் கடந்த காலத்து மன்னாதி மன்னர்களையும், வீரர்களையும், கவிகளையும், பக்தர்களையும்,அழகே உருவான வடிவு சுந்தரிகளையும் பார்த்திருக்கின்றன; மாபெரும் ராஜ்யங்களின் உயர்வையும், வீழ்ச்சியையும் கண்டிருக்கின்றன; விபீடணன், வல்லவரையன் வந்தியத்தேவன், குந்தவை நாச்சியார், மகேந்திர வர்ம பல்லவன், ராஜ ராஜன், சாரமாமுனிவர்,என்று பலர் வந்து போன சுவடுகளை தாங்கும் கதை சொல்லும் கற்கள் அவை...வருங்காலத்துக்கும் இதே கதைகளை கூறும்.