வியாழன், மார்ச் 19, 2009

அம்மாவின் அடுப்பறை

'வாய் வாழ்தலைன்னாலும் வயிறு வாழ்த்தும்' என்று சொல்லி நிறைய கேட்டிருக்கிறேன். ஆனால் உள்ளத்தளவில் உணர்ந்ததில்லை -- சில மாதங்கள் முன் வரை. Lexington-இல் நான் வந்த புதிதில் தென்னிந்திய உணவகங்கள் கிடையாது. Cincinnati-இல் 'உடிபி' தான் அருகாமையில் உள்ள உணவகம். மாணவியாய் இருந்த காலங்களில் கையில் பணமும், வாகனமும் கிடையாது. ஏதோ ஒரு படத்தில் SVe சேகர், கோழி படத்தை பார்த்து சப்பிக் கொண்டே வெறும் சாதம் சாப்பிடுவான். அந்த மாதிரி, நாக்கில் எச்சில் ஊற எல்லோரும் 'உடிபி'-யை நினைத்துக் கொண்டு, ஏதோ ஒன்று சமைத்து சாப்பிடுவோம். பின்னர், நண்பர்கள் எல்லோரும் பல தடவை 'உடிபி' சென்று சாப்பிட்டோம். மிக சுமார் ரக உணவு. ஆனாலும் ஏதோ இந்த மட்டும் தோசை, இட்லி கிடைத்தே என்று சாப்பிடுவோம். பின்னர், Lexington-இலும் பல தென்னிந்திய உணவகங்கள் வந்துவிட்டன. Familiarity breeds contempt. எப்போதாவது போவதோடு செரி.

நிற்க. இதெல்லாம் 6 மாதம் முன்பு வரை. அப்போது தான் 'உடிபி' 'Amma's Kitchen'-ஆக மாறிவிட்டதாக கேள்விப் பட்டோம். சரி, என்ன தான் இருக்கிறது என்று போய் பார்த்தோம். பார்த்ததோடு மட்டும் இல்லாமல் ஒரேயடியாய் கவிழ்ந்தோம்! அருமையான 'வீட்டு சாப்பாடு'. லஞ்ச் Buffet-க்கு போனால் அப்படியொரு variety, அப்படியொரு மணம், சுவை! பல காலமாக கண்ணால் கூட பார்க்காத தென்னிந்திய 'பரோட்டா', 'இடியாப்பம்', 'சேவை', அசல் 'குர்மா' ஆகிய அயிட்டங்களை பார்த்தே பசி தீர்ந்து விடும் போல இருந்தது. அதை தவிர, சுடச்சுட தோசை பரிமாறுவார்கள். சமையல்காரர் மதுரை என்று அறிந்தோம். நிஜமாகவே 'நள பாகம்' செய்கிறார்! பல முறை போயிருக்கிறோம். ஒரு தரம் கூட சுவை அப்படி இப்படி குறை சொல்லி விட முடியாது! இதில் என்ன விசேஷம் என்றால் வயிற்றையும் ஒன்றும் செய்து விடாது.

அமெரிக்கா-வில் பல உணவகங்கள் ஆரம்பத்தில் நன்றாக இருக்கும். போகப் போக சகிக்காமல் ஆகிவிடும். 'Ammas Kitchen' மட்டும் இது வரையில் அப்படி ஆகவில்லை. அதுவே ஒரு பெரிய வெற்றி! சென்ற வாரம் கூட அங்கு சென்று நன்றாக ஒரு வெட்டு வெட்டினோம். சாப்பிட்டு முடித்த பின்னர் வயிறு மனமார சமையல் செய்தவரை வாழ்த்தியது! அம்மாவின் சாபாட்டை உண்டு பல வருடங்கள் ஆகி நாக்கு ஏங்கி போயிருக்கும் என்னைப் போன்ற NRI மக்களுக்கு இது ஒரு பெரிய வரப்பிரசாதம் -- சுவையான உணவுக்காக மட்டும் அல்ல; அந்த உணவு நினைவுப் படுத்தும் அம்மாவின் நினைப்பிற்கும் தான்!

புதன், மார்ச் 18, 2009

என்றும் ராஜா!

அமெரிக்காவுக்கு வந்து இதோட அஞ்சு வருஷம் ஆச்சு. ஆனாலும் இந்த ஊரு குளிரு நமக்கு பழக்கமாகலை! திருச்சில மலைக்கோட்டை ஓட கானல் புழுக்கததுலயும், சென்னையோட அக்னி நட்சத்திர தாக்குதல்லயும் 22 வருஷம் இருந்துட்டு, இங்க வந்து குளிருல சமாளினா முடிய மாட்டேங்குது. இந்த winter-ல தான் நெறைய இந்தியாவை மிஸ் பண்ணுவேன்!

போன வருஷம் ஒரு நாள் 'ஐயோ இந்தியா போக மாட்டோமானு' ஒரே சோகமா ஒக்காந்திருந்தேன். அப்போ "Raaga.com"-ல 80s சேனல் playlist ஒண்ணு தட்டி விட்டேன். அதுல,

"கொடியிலே மல்லிக பூ மணக்குதே மானே!" -ன்னு பாட்டு.

உண்மையிலே காதுல தேன் வந்து பாய்ஞ்ச மாதிரி இருந்தது. இளையராஜாவின் அருமையான கிராமத்து இசை கண் முன்னால தமிழ்நாட்டோட கிராமங்களை கொண்டு வந்து நிறுத்திடிச்சு! எ.ர. ரஹ்மான் என்ன தான் 'ஆஸ்கார்' வாங்கினாலும், அவரோட பாட்டு எனக்கு என்னிக்குமே தமிழ்நாட்டை குறிப்பா ஞாபகப் படுத்தாது. அந்த இசையை மும்பை, டெல்லி, calcutta எங்க வேணும்னா கேக்கலாம், பொருத்தலாம். ஆனால் இளையராஜா ஓட பாட்டுல ஒரு distinct, un-mistakable தமிழ் மணம்!

ஆயிரம் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் ஒரு இசையானது கடந்து சென்று, ஒரு மனிதனின் உள்ளத்தை தொட்டு, உவகை ஊட்டி , அப்படியே அள்ளிச் சென்று தாய்நாடு மடி சேர்கின்றதென்றால் அதைவிட ஒரு கலைஞனுக்கு பெரிய விருது வேறு என்ன இருக்க முடயும்?!

வாழ்க இளையராஜா!

ஞாயிறு, மார்ச் 15, 2009

ஸ்ரீமான் சுதர்சனம்

நேற்று இரவு தேவன் எழுதிய 'ஸ்ரீமான் சுதர்சனம்' நாவலை படித்து முடித்தேன். ஆரம்பத்தில் சற்று மெதுவாக கதை ஆரம்பித்தது. என்னடா இது, ஒருவன் வீடு மாறுவதைப் பற்றியும், வாடகை குடுப்பதைப் பற்றியும் ஒரு கதையா என்று இருந்தது! ஆனால் போக போக கதை மிக அருமை!

௧௯௩0 காலங்களில் ஒரு மனிதனுக்கு என்ன மாதிரியான வாழ்க்கை, எவ்விதமான அபிலாஷைகள் எல்லாம் அவனுக்கு இருக்கும், என்ன மாதிரி கஷ்டங்கள் எல்லாம் அவன் சந்தித்திருப்பான் என்று மிக அருமையான வர்ணனை. ௨00௯-இல் இதை படிக்க போனால் அந்த நாட்களில் அவர்கள் பிரச்சினை எல்லாம் மிக சாதாரணமானவை என்று தோன்றுகிறது!

கோமளம் ரூ.78-க்கு புடவை வேண்டும் என்று ஆசைப் படும் இடம் மிக பாங்கு! சுதர்சனத்தின் மாப்பிள்ளை 'குடவாசல்' படுத்தி வைக்கும் பாடு, சுதர்சனத்தின் அம்மா சௌந்தரம் கோமளத்ததை குத்தி காமிப்பது, மகன் எங்கே பொண்டாட்டி தாசன் ஆகி விடுவானோ என்று சுதர்சனத்தின் தாய் தந்தையர் கவலை படுவது என்று கதை முழுதும் எங்கும் எதார்த்தம்!

இந்த fast-food உலகத்தில், இப்படி ஒரு கதை படித்தது lexington-இல் காவிரியின் கோடைத் தென்றல் அடித்து போன்ற ஒரு உணர்வு! :)

செவ்வாய், மார்ச் 06, 2007

இன்று போய் நாளை வா...

உடையாரை ஒரு வழியாக படித்து முடித்து விட்டேன். எழுத்துப் பிழைகளும், வர்ணனைப் பிழைகளும், பெயர் பிழைகளும் இருந்தாலும், கதை மிக அழகாக அமைந்திருக்கிறது. ஒரு சில இடங்களில் மிகையான நடை இலேசாக கசந்தது..இராஜராஜனும் இன்னும் பல மன்னர்களும் சேர்ந்து வளர்த்து கொடுத்த தமிழையும், தமிழ் கலாச்சாரத்தையும் இன்று நாம் அழித்துக்கொண்டிருக்கிறோமோ என்ற ஒரு சிறு கவலையும் வந்து கவ்விக் கொள்கிறது!

இந்த வலைப்பூவில் அடிக்கடி பதிவு செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டிருக்கிறேன். எதைப் பற்றி எழுதலாம், என்னென்ன எழுதலாம் என்று அன்பர்கள் idea கொடுத்தால் நன்றாக இருக்கும்! :) ஆகையால், வாசகர்களே, இன்று போய் நாளை வந்து இந்த வலைப்பதிவை அடிக்கடி பார்க்கவும்...

ஞாயிறு, செப்டம்பர் 24, 2006

திருவிடைமருதூர்

"தேக்கும் வரகுணனாந் தென்னவன்கண்சூழ் பழியைப்
போக்கும் இடைமருதிற் பூரணமே." - அருட்பா

எனக்கு சோழநாட்டு திருத்தலங்கள் மீது தனிப் பற்று. அதை நான் இன்று சொல்லி தான் தெரியவேண்டும் என்பது இல்லை! இந்த மின்பதிவில் அதைப்பற்றி எழுதி எழுதியே உங்களை எல்லாம் ரம்பம் போட்டிருக்கிறேன்..:) பல வாசகர்கள் என்னுடைய மின்பதிவில் இதையே குறையாகக் கூறியிருக்கிறார்கள்...:) எப்பொழுதும் கோவில்கள் பற்றியே எழுத
வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள். ஆனால், ஒரு சில விஷயங்கள் ரத்தத்திலே கலந்தவை.

நான் சிறு வயதில் மதுரை, சென்னை, ஒரிஸ்ஸா என்று பல இடங்களில் வசித்திருக்கிறேன். 'என்னுடைய ஊர் இது' என்றெல்லாம் எந்த ஒரு ஊரையும் நினைத்ததில்லை. திருச்சியில் நான்கே ஆண்டுகள் இருந்தாலும், அந்த ஊரிலும், அதன் சுற்றுப்புறங்களுலும் ஏற்ப்பட்ட ஒரு பற்று வேறு எந்த இடத்திலும் எனக்கு இல்லை. 'இதுதான் உன் வீடு. இதுதான் உன் மண்' என்று ஒரு நினைப்பு பலமாக அடிக்கடி தோன்றும். பேருந்தில், கல்லூரி முடிந்து ஸ்ரீரங்கம் செல்லும்போது, காவிரிப் பாலத்தை தாண்டவேண்டும். அந்த இரண்டு நிமிடத்துக்காக தினம் காத்திருப்பேன். காவிரியை கடக்கையில், அந்த வளமான நதியையே ஆசையோடு பார்ப்பேன். மனதில் ஒரு அமைதி பரவும்.

இந்த உணர்வு ஒரு மனிதனுக்கு ஒரு இடத்தில்/ஊரில் மட்டுமே தோன்றும். அதை ரத்தத்தில், நாடி நரம்பில், மனதில், ஊனில் உணர முடியும். இந்த உணர்வு தரும் ஒரு adrenalin rush-ல் தான், கார்கிலில் போர்வீரர்கள் சண்டையிட்டனர். "இது என் தாய்மண். என்னுடைய மண்" என்கிற உணர்வின் பலத்தாலேயே ஒரு போர்வீரன் வெற்றிவாகை சூடி, 'Yeh Dil maange more!" என்று கர்ஜித்தான். 'சோறுடைத்த சோழநாடு' என்று போற்றப்படும் தஞ்சை ஜில்லாவில், எங்கு சென்றாலும் எனக்கு இந்த உணர்வு தான் மேலோங்கும். அதனாலேயே, எனக்கு அதைப் பற்றி எழுதுவதில் ஒரு சுகம். வாசகர்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும்! :)

திருவிடைமருதூர் வரகுண பாண்டியன் பிரம்மஹத்தி தோஷம் நீங்கிய தலம். காவிரி கரையில், வயல்களுக்கு நடுவே உள்ள அழகிய தலம். வரகுண பாண்டியன் கோவிலுக்குள் செல்லும்போது, பிரம்மஹத்தியை வாசலிலேயே நிறுத்தி வைத்துவிட்டு 'இதோ திரும்பி வருகிறேன்' என்று கூறிவிட்டு உள்ளே சென்றானாம். ஈசனை வழிபட்டு, இன்னொரு வாயில் வழியாக வெளியேறி பிரம்மஹத்தியை ஏமாற்றிவிட்டானாம்! இன்றும் அந்த பிரம்மஹத்தி காத்துக் கொண்டிருக்கிறது. ஆகையால், கோவில் நுழையும் அதே வாசலால் திரும்பக் கூடாது என்று ஐதீகம்.

தலைமருது (ஸ்ரீசைலம் - ஆந்திரா - மல்லிகார்ச்சுனம்), இடைமருது (திருவிடைமருதூர் - மத்தியார்ச்சுனம்), கடைமருது (திருப்புடைமருதூர் - நெல்லை மாவட்டம் - புடார்ச்சுனம்) என்று மூன்று தலங்கள். ஸ்ரீசைலத்துக்கும், திருப்புடைமருதூருக்கும் இடையில் இருப்பதாலேயே இடைமருது என்று அழைக்கப்படும். மருது (அர்ச்சுனம்) என்றால் மருதமரம். இதுவே தல விருட்சம். சுவாமி - மகாலிங்கேசுவரர், மருதவனேஸ்வரர். பெரிய லிங்க வடிவு. மிக, மிக அழகான கோவில். அதை விவரிக்க முடியாது. வயல்களுக்கு நடுவே, ஒரு சிறிய ஊரின் நடுவில், அமைதியான, பிரம்மாண்டமான சிவன் கோவில்.

பிரகார சுற்றில், கர்ப்பகிரகத்திற்கு பின்னால், இராவணன் கைலாய மலையை கைகளில் தாங்குவது போன்ற சிலை இருக்கிறது. ஈசன் காலால் அழுத்த, வலியில் நரம்பையே வீணையாக்கி, சாம கானம் பாடும் காட்சி. காம்போதி ராகம் பாடி சிவனார் மனம் குளிரவைத்தான். இன்றும், இரவில் அங்கு வந்து காதை தீட்டிக் கொண்டு கேட்டால், சாம கானம் கேட்கும் என்று சொன்னார்கள். எனக்கு ஒன்றும் கேட்கவில்லை...:)

இந்த கோவிலின் இன்னொரு சிறப்பு, இதை மையமாக வைத்து, இதைச் சுற்றி 'பரிவார தலங்கள்' உள்ளன. என்னளவில், தல மகிமை எல்லாம் மீறி, எனக்கு இந்த தலத்தை பிடிக்க ஒரு தனி காரணம் உண்டு...:) இராஜராஜ சோழன், பட்டத்துக்கு வருமுன், இந்த மகாலிங்கத் தலத்துக்கு வந்தான். 'மகாலிங்கம்' என்று பெயரைக் கேட்டு, மிக பிரம்மாண்டமான லிங்கம் இருக்கும் என எதிர்ப்பார்த்தானாம். அவனுக்கு சற்று ஏமாற்றம். 'உண்மையிலேயே ஒரு மகா லிங்கத்தை நான் ஸ்தாபிக்கிறேன். ஒரு மகா பெரிய கோவிலை இந்த ஈசனுக்கு நான் அர்ப்பணம் செய்கிறேன்' என்று உறுதி பூண்டான். அதுவே பிற்காலத்தில் தஞ்சை பெரிய கோவிலாக உருவெடுத்தது. இந்த ஒரு சம்பந்தத்தாலேயே, எனக்கு இந்த கோவில் பிடிக்கும்..:) இது அரசபக்தி...1000 காலம் ஆனாலும், இராஜராஜ சோழன் ஆண்ட அந்த மண்ணில் வசிக்கும் எவனுக்குமே இருக்கும் இந்த அரச பக்தி. இன்றும் தஞ்சையில் அருண்மொழி வர்மனின் பிறந்த நட்சித்திரமான 'ஐப்பசி சதய'த்தன்று மிக விமரிசையாக விழா நடத்துவார்கள்.

இராஜராஜ சோழனின் குருவான கருவூர்த்தேவராலும் பாடல்பெற்ற தலம் திருவிடைமருதூர். அண்மையில் "Temples of India" documentary-ல் ராஜராஜசோழனோடு ஒரு வயதான ஜடாமுடி முனிவரின் வரைபடமும் கண்டுபிடித்ததாக காண்பித்திருந்தனர். அவரே கருவூர்த்தேவர். அவர் இயற்றிய 'திருவிசைப்பா' ஒன்பதாம் திருமுறையை சேர்ந்தது.

இந்திர லோக முழுவதும் பணிகேட்(டு)
இணையடி தொழுதெழத் தாம்போய்
ஐந்தலை நாகம் மேகலை அரையா
அகந்தொறும் பலிதிரி அடிகள்
தந்திரி வீணை கீதமும் பாடச்
சாதிகின் னரங்கலந்(து) ஒலிப்ப
மந்திர கீதம் தீங்குழல் எங்கும்
மருவிடம் திருவிடை மருதே.

இவர் தஞ்சை பிருகதீஸ்வரர் கோவிலைப் பற்றியும் பாடியுள்ளார்.

குடந்தை, மயிலாடுதுறை அடுத்த முறை சென்றார், நிச்சயாமாக போய் தரிசிக்க வேண்டிய இடம்!

ஞாயிறு, ஜூலை 16, 2006

என்ன ஆச்சு நம்ம பெண்களுக்கு?

அனுராதா ரமணன் விகடனில'என்ன ஆச்சு நம்ம பெண்களுக்கு?' என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சென்ற மாதம் தமிழகத்தை உலுக்கிய இரு கொலைகள் - கொலையாளிகள் இருவருமே பெண்கள் - இந்த கட்டுரைக்கு தூண்டுதல். இதில் அவர் கூறியிருக்கும் பல காரணங்கள் சரியே. கூட்டுக் குடும்பம், யந்திர வாழ்க்கை எல்லாம் இருந்தாலும் ஒரு முக்கியமான கேள்வி யாரும் எழுப்பவில்லை. ஒரு பெண் பிடிக்காத ஒருவனை மணக்கும்படி நேர்ந்தது எப்படி? காதலனை கைப்பிடிக்காமல் ஏன் இன்னொருவனை மணக்கிறாள்? மனது ஒத்துப்போகாத ஒருவனை மணப்பதால்தானே இத்தனை பிரச்சனைகளும்?

நமது நாட்டில் 'காதல்' என்பதே கெட்ட வார்த்தையாக இருக்கிறது. காதலித்து மணப்பது என்பது ஒரு taboo-வான விஷயம். திருமணமான பின்பு கூட கணவன் - மனைவிக்குள் 'காதல்' என்று நினைத்தால் கூட, "அடடா, என்ன அபத்தமா பேசிகிட்டு. அன்பு இருக்கலாம். சும்மா காதல் கத்திரிக்காய் என்பதெல்லாம் சினிமாகாரங்களுக்கு!' என்று விட்டேத்தியாக பேசுவது நான் பலமுறை கேட்டிருக்கிறேன். மகனோ/மகளோ வேறு ஜாதிப் பெண்ணை/பையனை விரும்புகிறாள் என்று தெரிந்தும், கட்டாயமாக வேறு ஒருவருக்கு மணமுடிப்பதேனோ? இதுதான் நாகரீகமா?

இதற்கு கொலைதான் முடிவு என்று சொல்லவில்லை..ஆனாலும், சும்மா 'கலாசாரம்', 'பெண்மை', 'கற்பு' என்ற வார்த்தைகளை இந்த விஷயத்தில் இழுக்க தேவையில்லை. Arranged மேரேஜ் செய்து கொண்டு, மனது ஒத்துக்கொள்ளாமல், ஏதோ arranged-ஆகவே வாழ்க்கையை யந்திரத்தனமாக நடத்துவதால் வரும் விபரீதங்கள் இவை. அந்த காலத்தில் இப்படியெல்லாம் இல்லையே என்று சிலர் கூறுவார்கள். கூட்டு குடும்பத்தில், மாமியார்/மாமனார்/நாத்தனார்/கொழுந்தினன் குட்டுக்கு சதா சர்வகாலமும் பயந்து வாழ்ந்தால் கணவனின் காதல் பற்றி யோசிக்க நேரமேது? நல்ல மருமகளாக பெயர் எடுக்கும் முயற்சியிலேயே வாழ்க்கை ஓடிவிடும். இல்லையென்றால், அவர்கள் வீட்டை விட்டு துறத்திவிட்டால், ஏது நாதி? அக்காலத்தில், பெண்களுக்கு நிதி சுதந்திரம் இல்லாததே அவர்கள் வீட்டை விட்டு வெளியேற பெரும் தடையாக இருந்தது என்பது என் கருத்து. It all boils down to choices and options. அதை விடுத்து, அந்த கால வாழ்க்கையை idealize செய்வது என்பது என்னால் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று.

திருமணத்திற்கு பின் உறவினர்கள் எல்லோரும் நல்லவர்களாகவே அமைந்துவிட்டால், கூட்டு குடும்பம் போல் ரம்மியமான வாழ்க்கை வேறெதுவும் இல்லை. கூட்டு குடும்பத்தில் என் தாய் பட்ட பாட்டை நான் பார்த்திருக்கிறேன். ஒரு சிலர் கத்தி போன்ற நாக்கும், சுட்டெரிக்கும் பார்வையும் கொண்டிருந்தால், மருமகளுக்கு என்றுமே நரகம் தான்.

ஒரு வாதத்தில் என்றுமே ஒருவர் மேல் மட்டுமே தவறு என்று இருந்துவிட முடியாது. இன்று இப்படி கொலைகள்/adultery நடப்பதற்கு பெண்களை மட்டுமே தவறு கூறிவிட முடியாது. என்ன தவறு நடந்தது என்பதை அமைதியாக யோசிக்க வேண்டும்....

வெள்ளி, ஜூன் 02, 2006

இது வசந்த காலம். குளிர்காலம் நீங்கிய களிப்பில், முகம் தெளிந்து இருக்கிறாள் வான மங்கை. அதிகாலையில், அருணோதயத்தில், சூரியதேவனைக் கண்டு நாணி அவள் முகம் சிவந்திருந்தது. சூரியன் வானில் சிம்மாசனத்தில் ஏற ஏற, வானதி தன் வெட்கம் மறந்து அவனது அணைப்பில் நீல நிறமாக பொலிகிறாள்! மறையும் மதியும், ஜொலிக்கும் நட்சத்திரங்களையும் அணிகலனாக பூண்டு சிரித்து மகிழ்கிறாள்.

அவளது அழகைக் கண்டு பூமியில் உயிரினங்கள் முகம் மலரும். கவிகள் பாடல் புனைவார்கள். ஆனால் அழையா விருந்தாளியாக வருணன் அவ்வப்போது வானவீதியில் குடியேறிவிடுகிறான்! சூரியதேவனை மறைத்துவிடுகிறான்! அழையாமல் அவன் வந்ததால் வானதியின் களியாட்ட திருக்கோலத்துக்கு ஒரு அவசர தடங்கல். வான மங்கை முகம் சுளித்து, புருவம் நெறித்து, கோபப்படுவதால் திருமுகம் கருத்ததோ? காதலனிடமிருந்து பிரிந்ததனால், ஆபரணங்களை விடுத்து, கார்முகில்களையே பூணுகிறாள் வானதி!

வருணனும் சளைத்தவன் இல்லை. காற்றை துணைக்கு அழைக்கிறான். தன் அழகிய கோலம் கலைந்ததால், சற்று நேரத்தில் வானதியின் இந்த கோபம் கண்ணீராய் மாறக்கூடும். பின்பு, அவளின் உக்ர தாண்டவமே! அவள் கண் வெட்டுகள் மின்னலாய் வானைப் பிளக்கும். அவள் கோப சிணுங்கல் இடியாக முழங்கும். உலகம் நடுங்கும்.

வானதி, இந்த போர்க்கோலமும் உனக்கு அழகாகவே இருக்கிறது! உனது கோபமும், கண்ணீருமே பூமிக்கு உயிர் தரும்! பஞ்சபூதங்களில் மூன்று மோதிக்கொண்டால், நான்காவதான நிலமகள் களிப்படைவாள். இலையும், கிளையும், புல்லும், பசுவும் வானம் பார்த்து நன்றி கூறும்! பசுமை செழிக்கும்! வானதி, வருணனும் காற்றும் உன் வெறியாட்டம் கண்டு ஓடுவார்கள். மறுபடியும் சூரியதேவனை கண்டு நீ முகம் மலர்வாய்!

வானும், மண்ணும், காற்றும், கடலும் பேதம் பார்ப்பதில்லை என்று கூறுவார்கள். அமெரிக்காவில் தான் நான் நிறைய மழையை பார்த்திருக்கிறேன். இருந்தாலும், 'மழை' என்றவுடன் என் மனது இந்தியாவின் மழைக்காலகாட்சிகளையும், வாசனைகளையுமே அசைபோடுகின்றன...

மாலை வேளையின் வெயில் களைப்பு தீர்க்க விழும் ஜில்லென்ற கோடை மழை...
சட்டென்று குளிர்ந்துவிடும் பூமி...
'கம்' மென்று கிளம்பும் மண் வாசனை....
மழையில் புத்துயிர் பெற்று, வாசம் வீசும் மலர்கள்....
புழுதி நீங்கி பளீர் பச்சையாக காட்சியளிக்கும் இலைகள்...
வருடிச்செல்லும் மெல்லிய, குளிந்த காற்று...
அங்காங்கே, தெருவில் தேங்கி கிடக்கும் குட்டைகள்...
அதில் விளையாடும் சிறுவர்கள்...
லேசான குளிருக்கு இதமாக, டீக்கடைகளில் கூட்டம் கூட்டமாக சூடாக மசாலா டீ அருந்தும் கும்பல்...
மிளகாய் பஜ்ஜி விற்கும் கடைகளில் சிரித்துக் கொண்டிருக்கும் இளசுகள் கூட்டம்....

இந்த மண்வாசனைக்கு கூட பேதம்! இந்திய மண்ணின் வாசனையே தனி...அது கலப்படம் இல்லாத மண்ணின் வாசம். இங்கோ பெர்டிலைசரும், மருந்தும் கலந்து மண் வாசம் எழுகிறது. மனது லயிக்கவில்லை!