ஞாயிறு, ஜூலை 16, 2006

என்ன ஆச்சு நம்ம பெண்களுக்கு?

அனுராதா ரமணன் விகடனில'என்ன ஆச்சு நம்ம பெண்களுக்கு?' என்று ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். சென்ற மாதம் தமிழகத்தை உலுக்கிய இரு கொலைகள் - கொலையாளிகள் இருவருமே பெண்கள் - இந்த கட்டுரைக்கு தூண்டுதல். இதில் அவர் கூறியிருக்கும் பல காரணங்கள் சரியே. கூட்டுக் குடும்பம், யந்திர வாழ்க்கை எல்லாம் இருந்தாலும் ஒரு முக்கியமான கேள்வி யாரும் எழுப்பவில்லை. ஒரு பெண் பிடிக்காத ஒருவனை மணக்கும்படி நேர்ந்தது எப்படி? காதலனை கைப்பிடிக்காமல் ஏன் இன்னொருவனை மணக்கிறாள்? மனது ஒத்துப்போகாத ஒருவனை மணப்பதால்தானே இத்தனை பிரச்சனைகளும்?

நமது நாட்டில் 'காதல்' என்பதே கெட்ட வார்த்தையாக இருக்கிறது. காதலித்து மணப்பது என்பது ஒரு taboo-வான விஷயம். திருமணமான பின்பு கூட கணவன் - மனைவிக்குள் 'காதல்' என்று நினைத்தால் கூட, "அடடா, என்ன அபத்தமா பேசிகிட்டு. அன்பு இருக்கலாம். சும்மா காதல் கத்திரிக்காய் என்பதெல்லாம் சினிமாகாரங்களுக்கு!' என்று விட்டேத்தியாக பேசுவது நான் பலமுறை கேட்டிருக்கிறேன். மகனோ/மகளோ வேறு ஜாதிப் பெண்ணை/பையனை விரும்புகிறாள் என்று தெரிந்தும், கட்டாயமாக வேறு ஒருவருக்கு மணமுடிப்பதேனோ? இதுதான் நாகரீகமா?

இதற்கு கொலைதான் முடிவு என்று சொல்லவில்லை..ஆனாலும், சும்மா 'கலாசாரம்', 'பெண்மை', 'கற்பு' என்ற வார்த்தைகளை இந்த விஷயத்தில் இழுக்க தேவையில்லை. Arranged மேரேஜ் செய்து கொண்டு, மனது ஒத்துக்கொள்ளாமல், ஏதோ arranged-ஆகவே வாழ்க்கையை யந்திரத்தனமாக நடத்துவதால் வரும் விபரீதங்கள் இவை. அந்த காலத்தில் இப்படியெல்லாம் இல்லையே என்று சிலர் கூறுவார்கள். கூட்டு குடும்பத்தில், மாமியார்/மாமனார்/நாத்தனார்/கொழுந்தினன் குட்டுக்கு சதா சர்வகாலமும் பயந்து வாழ்ந்தால் கணவனின் காதல் பற்றி யோசிக்க நேரமேது? நல்ல மருமகளாக பெயர் எடுக்கும் முயற்சியிலேயே வாழ்க்கை ஓடிவிடும். இல்லையென்றால், அவர்கள் வீட்டை விட்டு துறத்திவிட்டால், ஏது நாதி? அக்காலத்தில், பெண்களுக்கு நிதி சுதந்திரம் இல்லாததே அவர்கள் வீட்டை விட்டு வெளியேற பெரும் தடையாக இருந்தது என்பது என் கருத்து. It all boils down to choices and options. அதை விடுத்து, அந்த கால வாழ்க்கையை idealize செய்வது என்பது என்னால் ஒத்துக்கொள்ள முடியாத ஒன்று.

திருமணத்திற்கு பின் உறவினர்கள் எல்லோரும் நல்லவர்களாகவே அமைந்துவிட்டால், கூட்டு குடும்பம் போல் ரம்மியமான வாழ்க்கை வேறெதுவும் இல்லை. கூட்டு குடும்பத்தில் என் தாய் பட்ட பாட்டை நான் பார்த்திருக்கிறேன். ஒரு சிலர் கத்தி போன்ற நாக்கும், சுட்டெரிக்கும் பார்வையும் கொண்டிருந்தால், மருமகளுக்கு என்றுமே நரகம் தான்.

ஒரு வாதத்தில் என்றுமே ஒருவர் மேல் மட்டுமே தவறு என்று இருந்துவிட முடியாது. இன்று இப்படி கொலைகள்/adultery நடப்பதற்கு பெண்களை மட்டுமே தவறு கூறிவிட முடியாது. என்ன தவறு நடந்தது என்பதை அமைதியாக யோசிக்க வேண்டும்....