திங்கள், மே 23, 2005

காவிரியும் கம்பனும் (திருவரங்கம்-3)

"கன்னியிழந்தனள், கங்கை திறம்பினள்
காவிரி நெறியிழந்தாள் என்றுரை கேட்கலாமோ
உலகுடைய தாயே! நீ கரைகடக்கலாகாது காண்!
"
-கம்பன்

(Rough translation: Even the sacred, holy Ganga lost her sense of propriety and purity when she altered course and rushed headlong into her lover, Samudra Raja's arms. Lest the world might say that you lost your womanhood, O Kaveri! Please don't cross your banks.)

(இந்த பாடல், நான் இணையதளத்தில் தேடியும் கிடைக்கவில்லை. ஆகையால், என் நினைவிலிருந்து எழுதியிருக்கிறேன். தவறுகள் இருந்தால் மன்னிக்கவும்! :))

ஒரு முறை காவிரி பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருந்ததாம். என்னதான் இப்போது லிட்டர் கணக்கில் தான் காவிரியில் தண்ணீர் ஓடி கொண்டிருந்தாலும், ஒரு காலத்தில் அப்படி வெள்ளம் வந்தது என்று நம்புவோமே..:) வெள்ளம் ஊரையே விழுங்கி விடும் என்று அனைவரும் பயந்து கொண்டிருந்த போது, கம்பன் ஊருக்கு வந்தானாம்.

உலகத்திலேயே மிக புனிதமான நதியென்று கருதப்படும் கங்கை கூட, காதல் வயப்பட்டு, தன் காதலனான சமுத்திர ராஜனை கண்டவுடன் பாதை மாறி, கடமை மறந்து, கரை கடந்து, அவனோடு சென்று கலந்து விட்டாள். உலகம் போற்றும் காவிரியே! படி தாண்டாப் பத்தினியான ந,£ உன் பெண்மைக்கு இழக்கு நேரும்படியாக, இப்படி கரை கடக்கலாகாது!

என்று காவிரி கரையில் நின்று இந்த பாடலை பாடினானாம்.

கரைகளை உடைத்துக் கொண்டு வெளியே பாய துடித்துக் கொண்டிருந்த காவேரியானவள், இந்த பாடலுக்கு மயங்கி, அப்படியே சாந்த ஸ்வரூபியாக போய்விட்டாளாம்! இந்த பாடல்தான் கம்பனுக்கு "கவி சக்கரவர்த்தி" என்ற பட்டத்தை வாங்கிக் கொடுத்ததாக கேள்வி.

இன்றும் கம்பன் நினைவாக, ரங்கநாயகி தாயார் சந்நிதிக்கு நேராக, கம்பன் ராமாயணம் அரங்கேற்றிய மண்டபம் இருக்கிறது. கிழக்கு வாசல், வெள்ளை கோபுரத்திற்கு மிக அருகாமை. சந்தியா வேளையில், மிக ரம்மியமான சூழலாக இருக்கும்! அரங்கனிடம் கூட்டதை அலைமோத விட்டு, தாமரை மலர்கள் வாசத்தின் நடுவில், பெண்களும், வயதானவர்களும் நிதானமாக மண்டபத்தில் அரட்டை அடிக்க, குழந்தைகள் விளையாடிக் கொண்டிருக்க ரங்கநாச்சியார் அமைதியாக சிரித்துக் கொண்டிருப்பாள். இன்று சிறுவர்களும், மனிதர்களும் casual-ஆக, அன்றாட வாழ்க்கை கதைகள் பேசும் அதே இடத்தில் தான், ஒரு காலத்தில் கம்பனுக்கு இறைவன் முதலடி எடுத்துக் கொடுக்க, அவன் ராமயணத்தை அரங்கேற்றினான்!

கம்பன் பாடலில் புகழ் பெற்ற பொன்னி திருச்சியில் தான் "அகண்ட" காவிரியாக காட்சியளிப்பாள். தஞ்சை, கும்பகோணம் (delta regions) போன்ற இடங்களில், தன் கணவனை (கடல்) சேறுவதற்காக, மணப்பெண்ணை போல், அடக்க ஒடுக்கமாக குறுகிவிடுவாள். திருச்சியில், இளம் பெண்ணை போல், குதூகலமாக நன்று அகன்று, பரந்து இருப்பாள். திருவரங்கம் வந்தவுடன், அரங்கனுக்கு மாலை இடுவது போல், இரண்டாக (காவிரி, கொள்ளிடம்) பிரிந்து ஸ்ரீரங்கத்தை அணைத்திருப்பாள். காவிரி ரங்கனை அணைப்பதால், திருமாலுக்கு அவளும் ஒரு மனைவியாவாள். நான் இப்படி dry-ஆகக் கூறுவதை தொண்டரடிப்பொடியாழ்வார் மிக அழகாக ஒரு பாசுரத்தில் வர்ணித்திருப்பார்:


"பாயும் நீர் அரங்கம் தன்னுள் பாம்பனை பள்ளி கொண்ட
மாயனார் திருநன்மார்வும் மரகதவுருவும் தோளும்
தூய தாமரைகண்களும் துவரிதபவளவாயும்
ஆயசீர் முடியும் தேசும் அடியரோர்க்கு அகலலாமே"



காவிரி பற்றி எழுதும் போது, கல்கியின் "பொன்னியின் செல்வன்" பற்றிக் கூறாமல் இருக்க முடியவில்லை! என்னை மிகவும் கவர்ந்த சரித்திர கதை. காவிரிக்கு பொன்னி என்றின்னொரு பெயர் உண்டு. தமிழகத்தின் "rice bowl" என்று கருதப்படும் தஞ்சை மாவட்டத்தில் பாய்ந்து, செல்வமும் செழிப்பும் உண்டாக்குவதால், "பொன்னி" என்று அழைக்கிறார்கள் என்பது என் அபிப்பிராயம். அந்த காலத்தில் சோழ நாடு செழிப்புடன் இருந்ததற்கு முதற்காரணம்: காவிரி (நம்ம பல்லவ நாடு (சென்னை,காஞ்சி etc..), இப்போ எப்படி இருக்கோ, அப்பவும் அப்படி தான். தண்ணி கொஞ்சம் கம்மி தான்...LOL). சோழ நாட்டை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றவன் ராஜ ராஜ சோழன். இயற்பெயர் அருண்மொழி வர்மன் ஆயினும், காவிரியோடு identify பண்ணும் வகையில், அவனுக்கு பொன்னியின் செல்வன் என்றே கல்கி சூட்டிவிட்டார்! பொன்னியின் செல்வனில் வருவது போல், இன்று கூட, ஆடிப் பெருக்கு (பெருக்கு இருக்கிறதோ இல்லையோ!) திருச்சியில் மிக விமரிசையாக நடைபெறும்!

இந்த அழகான காவிரி, மிக ஆழமானவள் கூட! அம்மா மண்டப படித்துரையில், ஏகப்பட்ட மக்கள் இறந்திருக்கிறார்கள். கம்பிகளை தாண்டி, நீந்த சென்று, புதை மணலில் மாட்டி கொள்வார்கள். காவிரியின் புதைமணல் மிக treacherous. பிடித்தால் உடனே மரணம் தான்! அரசாங்கமும், தேவஸ்தானமும் பல precautions எடுத்தும், இன்றும் பல பேர் மடிகிறார்கள். வருத்த பட வேண்டிய விஷயம்.

ஞாயிறு, மே 22, 2005

அழகிய மணவாளன் (திருவரங்கம்-2 )

ஸ்ரீரங்கம் பற்றி எழுத ஒரு சில வார்த்தைகள் போதாது! இது என்றும் ஒரு தொடர்கதை. எனவே, இதோ என் அடுத்த பதிவு...


ஸ்ரீரங்கத்திலிருந்து ஒரு முறை ஸ்ரீவில்லிப்புத்தூர் சென்றிருந்தோம். மதுரையில் இருக்கும் போது முதன் முறை செல்ல நேர்ந்தது. பின்பு, மதுரை சென்றால் அங்கு செல்வது பழக்கம் ஆகிவிட்டது. ஆண்டாளுக்கு நில மாலை சாத்துவதற்காக சந்நதியில் இருந்த பட்டருடன் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.
"எந்த ஊர்லேர்ந்து வரேள்?"- பட்டர்.
" நாங்க திருச்சிலேர்ந்து வரோம்."- தந்தை
"திருச்சிலதான் என் மச்சினன் இருக்கான். நீங்க எந்த இடம்?"
"நாங்க ஸ்ரீரங்கம், மாமா..."
பட்டர் முகத்தில் ஒரே சந்தோஷம்!
"அப்படியா! இன்னிக்கு ஆண்டாளுக்கு விசேஷம். நல்ல நாளன்னிக்கு தான் வந்திருக்கேள்..நீங்க எல்லாரும் எங்களுக்கு மாப்பிள்ளை ஆத்துக்காரா! நன்னா சேவை பண்ணி வெக்கறேன்...வடபத்ர சாயி சன்னிதானத்துக்கு நானே வரேன்..அப்பறம், மாப்பிள்ளை கோச்சுண்டுடக் கூடாதே..." (பலத்த சிரிப்பு)

அன்று மனதுக்கு திருப்தியாக நல்ல தரிசனம் செய்து வைத்தார் அந்த பட்டர். திருவரங்கத்தின் ஸ்ரீரங்கநாதரை தான் ஆண்டாள் மணந்தாள். ஆகையால், நாங்கள் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ஆகிவிட்டோம்..! என்னவோ, அதைக் கேட்டபோது ஒரு sense of belonging,ஒரு சின்ன அல்ப பூரிப்பு, பட்டர் முகத்தில் தெரிந்த சந்தோஷத்தை பார்த்து பெருமை...அந்த அழகிய மணவாளனின் மாப்பிள்ளை கோஷ்டியில் இருப்பது என்றால் சும்மாவா..:)

ஸ்ரீரங்கத்தில் எப்போதும் திருவிழாதான். பெருமாள் எப்போதும் busy. எனக்கு தெரிந்து ஸ்ரீரங்கம் சற்று அமைதியாய் இருப்பது புரட்டாசி மாச வாக்கில் தான். ஐப்பசி மாசம், சபரிமலை செல்லும் கூட்டம் ஸ்ரீரங்கம் வந்துவிட்டு தான் போகும். என் கருத்துபடி, சிலர் மட்டும் தான், சிரத்தையாக, ஐயப்பனை வேண்டிக்கொண்டு, மலைக்கு மாலை போடுகிறார்கள். பலர் அதை ஒரு annual vacation time with the boys மாதிரி தான் நடத்துகிறார்கள் (கர்ம சிரத்தையாக மாலை போட்டுக்கொண்டு, பக்தியுடன் சாஸ்தாவை பார்க்க செல்லும் பக்தர்களுக்கு எனது sincere apologies. அவமதிப்பது எனது நோக்கம் இல்லை!).

ஸ்ரீரங்கத்துக்குள் செல்வது ஒரே ஒரு பிரதான சாலை மட்டும் தான். அம்மா மண்டபம் ரோடு தான் artery. இப்போது திருவானைக்கா வழியாக ஒரு சாலை திறந்திருக்கிறார்கள். ஆனாலும், அம்மா மண்டபம் ரோடு தான் main. "அம்மா மண்டபம்" என்பது காவிரி படித்துரை. தெற்கு வாசல் ராஜகோபுரத்திற்கு நேர் கோட்டில் இருக்கும். அரங்கனுக்கு திருமஞ்சனத்துக்கு தினம், யானை இங்கிருந்து தான் தண்ணீர் எடுத்துக் கொண்டு செல்லும். எனவே, இந்த சாலையில் தான் எல்லா tourist பேருந்துகளும் நிற்கும். நவம்பர், டிசம்பர் மாதங்களில் ரொம்பி வழியும்! வைகுண்ட ஏகாதசி நேரம் நெருங்கி விட்டால், கேட்கவே வேண்டாம்! அந்த முழு சாலையுமே, தின்பண்ட கடைகள், பலூன், காத்தாடி விற்பவற்கள், நீர் மோர் கடைகள், பெண்களுக்கு காதணி, பாசி மாலைகள் விற்பவர்கள் என்று அல்லோல கல்லோல பட்டுக் கொண்டு இருக்கும்! திருவிழா பிச்சை கேட்க வேண்டும்!

ஸ்ரீரங்கம் வாசிகள், அரங்கனை பார்க்க இந்த tourist கும்பல்களுடன் செல்ல மாட்டார்கள். 1 வினாடி கூட பெருமாளை பார்க்க முடியாது! "ஜரகண்டி" என்று தள்ளி விட்டு விடுவார்கள். மதியம் 3.00 மணிக்கு நடை திறந்தவுடன் பார்க்கப் போனால், நிம்மதியாக தரிசிக்கலாம். திருச்சியின் கொடூர மதிய வெய்யிலை கண்டு பயந்து, (உண்ட மயக்கத்தில் :))கூட்டங்கள் நிழலை தேடி ஒதுங்கிவிடும். இல்லையென்றால், இரவு 8.30 மணிவாக்கில் சென்றாலும், நல்ல தரிசனம் கிடைக்கும். நான், சனிக்கிழமைகளில் மதிய நேரத்தில் செல்வேன். பெருமாள் சந்நிதி பட்டர்கள் எனக்கு நல்ல தோஸ்த். அதனால் நல்ல தரிசனமும், மலர் பிரசாதமும் எனக்கு நிச்சயம்..:) "என்ன மாமா, குழந்தை நன்னா படிக்கறாளா? நீங்க computer வாங்கணும்-னு சொன்னேளே, வாங்கிட்டேளா?" என்று எதாவது ஊர் கதை பேசிக்கொண்டே, அரங்கனை நன்றாக 10 நிமிடம் சேவித்து விட்டு வருவேன்..:)

என்னதான் கும்பலாக இருந்தாலும், இல்லாவிட்டாலும், அரங்கன் சந்நிதி சென்றால் மனதில் எனக்கு நிம்மதி பரவும். அந்த நிம்மதிக்கு இணை இந்த U.S.-ல் இருந்து எத்தனை படித்தாலும், பணம் சம்பாதித்தாலும் வராது. அந்த அரங்கன் அனைத்தையும் பார்த்துக் கொள்வான் என்ற நம்பிக்கை எனக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்த பிறகு ரொம்ப பலமான conviction. இன்னமும் இருக்கிறது...

சனி, மே 14, 2005

திருவரங்கம் - 1

நினைவுகள் மனதின் மூலைகளில் உறங்கும் போது, புகை படிந்த கண்ணாடியின் பிரதிபலிப்பைப் போல் மங்கலாகவே தெரிகின்றன. ஆனால் பல வருட நினைவுகளை வார்த்தைகளில் அசை போடும் போது, மங்கலான உருவங்கள், இடங்கள், சம்பவங்கள் நுணுக்கமான விவரங்களோடு துல்லியமடையும் மாயமென்னவோ..!

திருவரங்கம். 108 வைணவ திவ்ய தேசங்களில் முதலாவது திவ்ய தேசம். காவிரிக்கும், கொள்ளிடத்துக்கும் நடுவே அமைந்த அழகிய தீவு. ஷேக்ஸ்பியர் "All the world's a stage" என்று கூறுவதற்கு உவமை போல், அந்த அரங்கநாதன் வாழ்க்கை பொம்மலாட்டத்தை நடத்தும் திரு-அரங்கம்!

தோப்புகளும், தோட்டங்களும் நிறைந்த பசுமையான இடமாக இருந்தது (இப்போதும் சிறிது இருக்கிறது!). அடுக்கு மாடி கட்டிடங்களும், shopping complexes-மாக மாறிக் கொண்டிருக்கிறது. அதை தவறு கூறுவதற்கில்லை. மனிதர்கள் கூட்டம் சேற, சேற நகரங்கள் விரிவடைவது தானே முறை? ஆனாலும் சில நேரங்கள், நான் அறிந்த ஸ்ரீரங்கம், என் கண் முன்னாலேயே இப்படி மாறிப் போவது சற்று வருத்தமாக இருக்கும்.

மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், திருச்சிக்குள் நுழையும் போது, தெற்கு வாசல் ராஜகோபுரம் ஜகஜோதியாய் பல மைல் தூரத்திலிருந்தே தெரியும். காலை நேரத்தில், காவிரி பாலத்தை ரயில் தாண்டும் போது, ஜில் என்று காற்று முகத்தை தழுவிச் செல்லும். திருச்சியில் எனக்கு பிடித்தது பேருந்து போக்குவரத்து! காலை 4.30 மணிக்கு, ஸ்ரீரங்கத்திலிருந்து கிளம்பும் வண்டிகளில் ஓட்டுனர்களும், நடத்துனர்களும் கூட பளிச்சென்று திருநீர் அணிந்து வரவேற்பார்கள்! பின்னணியில் M.S. சுப்ரபாதம் பாடி அரங்கனை எழுப்ப, டீக்கடைகளில் விறுவிறுப்பாக வேலை நடக்கும். வயதானவர்கள் (பல பேர் கோவிலில் regulars), விச்வரூப தரிசனம் பார்க்க ராஜகோபுரம் நோக்கி சென்று கொண்டிருப்பார்கள். ஆக மொத்தம், ஸ்ரீரங்கம், காலை 4.30 மணிக்கே ஜேஜே என்று இருக்கும்!

இம்முறை திருவரங்கம் சென்ற போதும், அந்த காலை நேர வாழ்க்கை மாறாமல் அப்படியே இருந்தது மனதுக்கு மிக சந்தோஷம்..:)